- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- திருவுளந் தெரியேன் திகைப்புறு கின்றேன்
- சிறியரிற் சிறியனேன் வஞ்சக்
- கருவுளக் கடையேன் பாவியேன் கொடிய
- கன்மனக் குரங்கனேன் அந்தோ
- வெருவுறு கின்றேன் அஞ்சல்என் றின்னே
- விரும்பிஆட் கொள்ளுதல் வேண்டும்
- மருவுமா கருணைப் பெருங்கடல் அமுதே
- வள்ளலே என்பெரு வாழ்வே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- தாயும் தந்தையும் தெய்வமும் குருவும்
- தாங்கு கின்றதோர் தலைவனும் பொருளும்
- ஆயும் இன்பமும் அன்பும்மெய் அறிவும்
- அனைத்தும் நீஎன ஆதரித் திருந்தேன்
- ஏயும் என்னள விரக்கம்ஒன் றிலையேல்
- என்செய் வேன்இதை யார்க்கெடுத் துரைப்பேன்
- சேயும் நின்னருள் நசைஉறுங் கண்டாய்
- தில்லை மன்றிடைத் திகழ்ஒளி விளக்கே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அருள்பழுத் தோங்கும் கற்பகத் தருவே
- அருண்மருந் தொளிர்குணக் குன்றே
- அருள்எனும் அமுதந் தரும்ஒரு கடலே
- அருட்கிர ணங்கொளும் சுடரே
- அருள்ஒளி வீசும் அரும்பெறன் மணியே
- அருட்சுவை கனிந்தசெம் பாகே
- அருள்மணம் வீசும் ஒருதனி மலரே
- அருண்மய மாம்பர சிவமே.