- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- இழைஎலாம் விளங்கும் அம்மை இடங்கொள்நின் கருணை என்னும்
- மழைஎலாம் பொழிந்தென் உள்ள மயக்கெலாம் தவிர்த்து நான்செய்
- பிழைஎலாம் பொறுத்த உன்றன் பெருமைக்கென் புரிவேன் அந்தோ
- உழைஎலாம் இலங்குஞ் சோதி உயர்மணி மன்று ளானே.
- போதுதான் வீணே போக்கிப் புலையனேன் புரிந்த பொல்லாத்
- தீதுதான் பொறுத்த உன்றன் திருவருட் பெருமைக் கந்தோ
- ஏதுதான் புரிவேன் ஓகோ என்என்று புகழ்வேன் ஞான
- மாதுதான் இடங்கொண் டோங்க வயங்குமா மன்று ளானே.
- சிற்றறி வுடையன் ஆகித் தினந்தொறும் திரிந்து நான்செய்
- குற்றமும் குணமாக் கொண்ட குணப்பெருங் குன்றே என்னைப்
- பெற்றதா யுடனுற் றோங்கும் பெருமநின் பெருமை தன்னைக்
- கற்றறி வில்லேன் எந்தக் கணக்கறிந் துரைப்பேன் அந்தோ.
- மையரி நெடுங்க ணார்தம் வாழ்க்கையின் மயங்கி இங்கே
- பொய்யறி வுடையேன் செய்த புன்மைகள் பொறுத்தாட் கொண்டாய்
- ஐயறி வுடையார் போற்றும் அம்பலத் தரசே நின்சீர்
- மெய்யறி வறியேன் எந்த விளைவறிந் துரைப்பேன் அந்தோ.
- பேயினும் பெரியேன் செய்த பிழைகளுக் கெல்லை இல்லை
- ஆயினும் பொறுத்தாட் கொண்டாய் அம்பலத் தரசே என்றன்
- தாயினும் இனிய உன்றன் தண்ணருட் பெருமை தன்னை
- நாயினுங் கடையேன் எந்த நலமறிந் துரைப்பேன் அந்தோ.
- துரும்பினில் சிறியேன் வஞ்சம் சூழ்ந்தநெஞ் சகத்தேன் செய்த
- பெரும்பிழை அனைத்தும் அந்தோ பெருங்குண மாகக்கொண்டாய்
- அரும்பொருள் என்ன வேதம் ஆகமம் வழுத்து கின்ற
- கரும்பினில் இனியாய் உன்றன் கருணைஎன் னென்பேன் அந்தோ.
- வரைகடந் தடியேன் செய்த வன்பிழை பொறுத்தாட் கொண்டாய்
- திரைகடந் தண்ட பிண்டத் திசைஎலாம் கடந்தே அப்பால்
- கரைகடந் தோங்கும் உன்றன் கருணையங் கடற்சீர் உள்ளம்
- உரைகடந் ததுஎன் றால்யான் உணர்வதென் உரைப்ப தென்னே.
- நனவினும் பிழையே செய்தேன் நாயினும் கடையேன் அந்தோ
- கனவினும் பிழையே செய்தேன் கருணைமா நிதியே நீதான்
- நினைவினும் குறியா தாண்டாய் நின்னருட் பெருமை தன்னை
- வினைவினும் சொல்வார் காணேன் என்செய்வேன் வினைய னேனே.
- வன்செயல் பொறுத்தாட் கொண்ட வள்ளலே அடிய னேன்றன்
- முன்செயல் அவைக ளோடு முடுகுபின் செயல்கள் எல்லாம்
- என்செயல் ஆகக் காணேன் எனைக்கலந் தொன்றாய் நின்றோய்
- நின்செயல் ஆகக் கண்டேன் கண்டபின் நிகழ்த்தல் என்னே.
- இருமையும் ஒருமை தன்னில் ஈந்தனை எந்தாய் உன்றன்
- பெருமைஎன் னென்று நான்தான் பேசுவேன் பேதம் இன்றி
- உரிமையால் யானும் நீயும் ஒன்றெனக் கலந்து கொண்ட
- ஒருமையை நினைக்கின் றேன்என் உள்ளகந் தழைக்கின் றேனே.