- நேரிசை வெண்பா
- திருச்சிற்றம்பலம்
- சீர்விளங்கு சுத்தத் திருமேனி தான்தரித்துப்
- பார்விளங்க நான்படுத்த பாயலிலே - தார்விளங்க
- வந்தாய் எனைத்தூக்கி மற்றொருசார் வைத்தனையே
- எந்தாய்நின் உள்ளமறி யேன்.
- பயத்தோ டொருபால் படுத்திருந்தேன் என்பால்
- நயத்தோ டணைந்தே நகைத்து - வயத்தாலே
- தூக்கி எடுத்தெனைமேல் சூழலிலே வைத்தனைநான்
- பாக்கியவான் ஆனேன் பதிந்து.
- என்னேநின் தண்ணருளை என்னென்பேன் இவ்வுலகில்
- முன்னே தவந்தான் முயன்றேனோ - கொன்னே
- படுத்தயர்ந்தேன் நான்படுத்த பாய்அருகுற் றென்னை
- எடுத்தொருமேல் ஏற்றிவைத்தா யே.
- சிந்தா குலத்தொடுநான் தெய்வமே என்றுநினைந்
- தந்தோ படுத்துள் அயர்வுற்றேன் - எந்தாய்
- எடுத்தாள் எனநினையா தேகிடந்தேன் என்னை
- எடுத்தாய் தயவைவிய வேன்.
- உன்னுகின்ற தோறுமென துள்ளம் உருகுகின்ற
- தென்னுரைப்பேன் என்னுரைப்பேன் எந்தாயே - துன்னிநின்று
- தூக்கம் தவிர்த்தென்னைத் தூக்கிஎடுத் தன்பொடுமேல்
- ஆக்கமுற வைத்தாய் அது.
- நான்படுத்த பாய்அருகில் நண்ணி எனைத்தூக்கி
- ஊன்படுத்த தேகம் ஒளிவிளங்கத் - தான்பதித்த
- மேலிடத்தே வைத்தனைநான் வெம்மைஎலாம் தீர்ந்தேன்நின்
- காலிடத்தே வாழ்கின்றேன் காண்.
- புண்ணியந்தான் யாது புரிந்தேனோ நானறியேன்
- பண்ணியதுன் போடே படுத்திருந்தேன் - நண்ணிஎனைத்
- தூக்கி எடுத்தெனது துன்பமெலாந் தீர்த்தருளி
- ஆக்கியிடென் றேயருள்தந் தாய்.
- அஞ்சிஅஞ்சி ஊணும் அருந்தாமல் ஆங்கொருசார்
- பஞ்சின் உழந்தே படுத்தயர்ந்தேன் - விஞ்சிஅங்கு
- வந்தாய் எனைத்தூக்கி மற்றொருசார் வைத்தமுது
- தந்தாய்என் நான்செய் தவம்.
- நானே தவம்புரிந்தேன் நானே களிப்படைந்தேன்
- தேனே எனும்அமுதம் தேக்கஉண்டேன் - ஊனே
- ஒளிவிளங்கப் பெற்றேன் உடையான் எனைத்தான்
- அளிவிளங்கத் தூக்கிஅணைத் தான்.
- வாழி எனைத்தூக்கி வைத்த கரதலங்கள்
- வாழி எலாம்வல்ல மணிமன்றம் - வாழிநடம்
- வாழி அருட்சோதி வாழிநட ராயன்
- வாழி சிவஞான வழி.