- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- உலகுபுகழ் திருவமுதம் திருச்சிற்றம் பலத்தே
- உடையவர்இன் றுதவினர்நான் உண்டுகுறை தீர்ந்தேன்
- இலகுசிவ போகவடி வாகிமகிழ் கின்றேன்
- இளைப்பறியேன் தவிப்பறியேன் இடர்செய்பசி அறியேன்
- விலகல்இலாத் திருவனையீர் நீவிர்எலாம் பொசித்தே
- விரைந்துவம்மின் அம்பலத்தே விளங்குதிருக் கூத்தின்
- அலகறியாத் திறம்பாடி ஆடுதும்நாம் இதுவே
- அருள்அடையும் நெறிஎனவே தாகமம்ஆர்ப் பனவே.
- மாதவத்தால் நான்பெற்ற வானமுதே எனது
- வாழ்வேஎன் கண்ணமர்ந்த மணியேஎன் மகிழ்வே
- போதவத்தால் கழித்தேனை வலிந்துகலந் தாண்ட
- பொன்னேபொன் னம்பலத்தே புனிதநடத் தரசே
- தீதவத்தைப் பிறப்பிதுவே சிவமாகும் பிறப்பாச்
- செய்வித்தென் அவத்தையெலாம் தீர்த்தபெரும் பொருளே
- பூதலத்தே அடிச்சிறியேன் நினதுதிரு வடிக்கே
- புகழ்மாலை சூட்டுகின்றேன் புனைந்துகலந் தருளே.
- அளந்திடுவே தாகமத்தின் அடியும்நடு முடியும்
- அப்புறமும் அப்பாலும் அதன்மேலும் விளங்கி
- வளர்ந்திடுசிற் றம்பலத்தே வயங்கியபே ரொளியே
- மாற்றறியாப் பொன்னேஎன் மன்னேகண் மணியே
- தளர்ந்தஎனை அக்கணத்தே தளர்வொழித்தா னந்தம்
- தந்தபெருந் தகையேஎன் தனித்ததனித் துணைவா
- உளந்தருசம் மதமான பணிஇட்டாய் எனக்கே
- உன்பணியே பணியல்லால் என்பணிவே றிலையே.
- நாடுகலந் தாள்கின்றோர் எல்லாரும் வியப்ப
- நண்ணிஎனை மாலைஇட்ட நாயகனே நாட்டில்
- ஈடுகரைந் திடற்கரிதாம் திருச்சிற்றம் பலத்தே
- இன்பநடம் புரிகின்ற இறையவனே எனைநீ
- பாடுகஎன் னோடுகலந் தாடுகஎன் றெனக்கே
- பணிஇட்டாய் நான்செய்பெரும் பாக்கியம்என் றுவந்தேன்
- கோடுதவ றாதுனைநான் பாடுதற்கிங் கேற்ற
- குணப்பொருளும் இலக்கியமும் கொடுத்துமகிழ்ந் தருளே.
- நண்புடையாய் என்னுடைய நாயகனே எனது
- நல்உறவே சிற்சபையில் நடம்புரியும் தலைவா
- எண்புடையா மறைமுடிக்கும் எட்டாநின் புகழை
- யாதறிவேன் பாடுகஎன் றெனக்கேவல் இட்டாய்
- பண்புடைநின் மெய்யன்பர் பாடியபே ரன்பில்
- பழுத்தபழம் பாட்டில்ஒரு பாட்டும்அறி யேனே
- தண்புடைநன் மொழித்திரளும்354 சுவைப்பொருளும் அவைக்கே
- தக்கஇயல் இலக்கியமும் தந்தருள்வாய் எனக்கே.
- பணிந்தடங்கும் மனத்தவர்பால் பரிந்தமரும் பதியே
- பாடுகின்றோர் உள்ளகத்தே கூடுகின்ற குருவே
- கணிந்தமறை பலகோடி ஆகமம்பல் கோடி
- கடவுள்நின தருட்புகழைக் கணிப்பதற்குப் பலகால்
- துணிந்துதுணிந் தெழுந்தெழுந்து தொடர்ந்துதொடர்ந் தடிகள்
- சுமந்துசுமந் திளைத்திளைத்துச் சொல்லியவல் லனவென்
- றணிந்தமொழி மாற்றிவலி தணிந்தஎன்றால் அந்தோ
- அடியேன்நின் புகழ்உரைக்கல் ஆவதுவோ அறிந்தே.
- விதிப்பவர்கள் பலகோடி திதிப்பவர்பல் கோடி
- மேலவர்கள் ஒருகோடி விரைந்துவிரைந் துனையே
- மதிப்பவர்கள் ஆகிஅவர் மதியாலே பலகால்
- மதித்துமதித் தவர்மதிபெண் மதியாகி அலந்தே
- துதிப்பதுவே நலம்எனக்கொண் டிற்றைவரை ஏற்ற
- சொற்பொருள்கள் காணாதே சுழல்கின்றார் என்றால்
- குதிப்பொழியா மனச்சிறிய குரங்கொடுழல் கின்றேன்
- குறித்துரைப்பேன் என்னஉளம் கூசுகின்ற தரசே.
- ஒளியாகி உள்ஒளியாய் உள்ஒளிக்குள் ஒளியாய்
- ஒளிஒளியின் ஒளியாய்அவ் ஒளிக்குளும்ஓர் ஒளியாய்
- வெளியாகி வெளிவெளியாய் வெளியிடைமேல் வெளியாய்
- மேல்வெளிமேல் பெருவெளியாய்ப் பெருவெளிக்கோர் வெளியாய்
- அளியாகி அதுஆகி அதுவும்அல்லா தாகி
- அப்பாலாய் அப்பாலும் அல்லதுவாய் நிறைவாம்
- தளியாகி எல்லாமாய் விளங்குகின்ற ஞான
- சபைத்தலைவா நின்இயலைச் சாற்றுவதெவ் வணமே.
- வாக்கொழிந்து மனம்ஒழிந்து மதிஒழிந்து மதியின்
- வாதனையும் ஒழிந்தறிவாய் வயங்கிநின்ற இடத்தும்
- போக்கொழிந்தும் வரவொழிந்தும் பூரணமாய் அதுவும்
- போனபொழு துள்ளபடி புகலுவதெப் படியோ
- நீக்கொழிந்த நிறைவேமெய்ந் நிலையேஎன் னுடைய
- நேயமே ஆனந்த நிருத்தமிடும் பதியே
- ஏக்கொழிந்தார் உளத்திருக்கும் இறையேஎன் குருவே
- எல்லாமாய் அல்லதுமாய் இலங்கியமெய்ப் பொருளே.
- என்இயலே யான்அறியேன் இவ்வுலகின் இயல்ஓர்
- எள்அளவும் தான்அறியேன் எல்லாமும் உடையோய்
- நின்இயலை அறிவேனோ அறிந்தவனே போல
- நிகழ்த்துகின்றேன் பிள்ளைஎன நிலைப்பெயர்பெற் றிருந்தேன்
- தன்இயலாம் தனிஞான சபைத்தலைமைப் பதியே
- சத்தியனே நித்தியனே தயாநிதியே உலகம்
- பின்இயல்மா னிடப்பிள்ளை பேச்சினும்ஓர் பறவைப்
- பிறப்பின்உறும் கிளிப்பிள்ளைப் பேச்சுவக்கின் றதுவே.
- 354. மொழித்திறனும் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.