- திருவொற்றியூர்
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- என்ன தன்றுகாண் வாழ்க்கையுட் சார்ந்த
- இன்ப துன்பங்கள் இருவினைப் பயனால்
- மன்னும் மும்மல மடஞ்செறி மனனே
- வாழ்தி யோஇங்கு வல்வினைக் கிடமாய்
- உன்ன நல்அமு தாம்சிவ பெருமான்
- உற்று வாழ்ந்திடும் ஒற்றியூர்க் கின்றே
- இன்னல் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- துன்ப வாழ்வினைச் சுகம்என மனனே
- சூழ்ந்து மாயையுள் ஆழ்ந்துநிற் கின்றாய்
- வன்ப தாகிய நீயும்என் னுடனே
- வருதி யோஅன்றி நிற்றியோ அறியேன்
- ஒன்ப தாகிய உருவுடைப் பெருமான்
- ஒருவன் வாழ்கின்ற ஒற்றியூர்க் கின்றே
- இன்ப வாழ்வுறச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- ஆட்டு கின்றதற் காகஅம் பலத்துள்
- ஆடு கின்றசே வடிமலர் நினையாய்
- வாட்டு கின்றனை வல்வினை மனனே
- வாழ்ந்து நீசுக மாய்இரு கண்டாய்
- கூட்டு கின்றநம் பரசிவன் மகிழ்வில்
- குலவும் ஒற்றியூர்க் கோயில்சூழ்ந் தின்பம்
- ஈட்டு கின்றதற் கேகின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- வஞ்ச வாழ்க்கையை விடுத்தனன் நீயே
- வாரிக் கொண்டிங்கு வாழ்ந்திரு மனனே
- நஞ்சம் ஆயினும் உண்குவை நீதான்
- நானும் அங்கதை நயப்பது நன்றோ
- தஞ்சம் என்றவர்க் கருள்தரும் பெருமான்
- தங்கும் ஒற்றியூர்த் தலத்தினுக் கின்றே
- எஞ்சல் இன்றிநான் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- உண்மை ஓதினும் ஓர்ந்திலை மனனே
- உப்பி லிக்குவந் துண்ணுகின் றவர்போல்
- வெண்மை வாழ்க்கையின் நுகர்வினை விரும்பி
- வெளுக்கின் றாய்உனை வெறுப்பதில் என்னே
- தண்மை மேவிய சடையுடைப் பெருமான்
- சார்ந்த ஒற்றியந் தலத்தினுக் கின்றே
- எண்மை நீங்கிடச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- நீடும் ஐம்பொறி நெறிநடந் துலக
- நெறியில் கூடிநீ நினைப்பொடு மறப்பும்
- நாடும் மாயையில் கிடந்துழைக் கின்றாய்
- நன்று நின்செயல் நின்றிடு மனனே
- ஆடும் அம்பலக் கூத்தன்எம் பெருமான்
- அமர்ந்த ஒற்றியூர் ஆலயத் தின்றே
- ஈடு நீங்கிடச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- கூறும் ஓர்கணத் தெண்ணுறும் நினைவு
- கோடி கோடியாய்க் கொண்டதை மறந்து
- மாறு மாயையால் மயங்கிய மனனே
- வருதி அன்றெனில் நிற்றிஇவ் வளவில்
- ஆறு மேவிய வேணிஎம் பெருமான்
- அமர்ந்த ஒற்றியூர் ஆலயம் அதன்பால்
- ஈறில் இன்புறச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- யாது கண்டனை அதனிடத் தெல்லாம்
- அணைகின் றாய்அவ மாகநிற் கீந்த
- போது போக்கினை யேஇனி மனனே
- போதி போதிநீ போம்வழி எல்லாம்
- கோது நீக்கிநல் அருள்தரும் பெருமான்
- குலவும் ஒற்றியூர்க் கோயிலுக் கின்றே
- ஏதம் ஓடநான் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- விச்சை வேண்டினை வினையுடை மனனே
- மேலை நாள்பட்ட வேதனை அறியாய்
- துச்சை நீபடும் துயர்உனக் கல்லால்
- சொல்லி றந்தநல் சுகம்பலித் திடுமோ
- பிச்சை எம்பெரு மான்என நினையேல்
- பிறங்கும் ஒற்றியம் பெருந்தகை அவன்பால்
- இச்சை கொண்டுநான் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- தூக்கம் உற்றிடும் சோம்புடை மனனே
- சொல்வ தென்னைஓர் சுகம்இது என்றே
- ஆக்கம் உற்றுநான் வாழநீ நரகில்
- ஆழ நேர்ந்திடும் அன்றுகண் டறிகாண்
- நீக்கம் உற்றிடா நின்மலன் அமர்ந்து
- நிகழும் ஒற்றியூர் நியமத்திற் கின்றே
- ஏக்கம் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.