- திருவொற்றியூர்
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- பற்று நோக்கிய பாவியேன் தனக்குப்
- பரிந்து நீஅருட் பதம்அளித் திலையே
- மற்று நோக்கிய வல்வினை அதனால்
- வஞ்ச மாயையின் வாழ்க்கையின் மனத்தின்
- அற்று நோக்கிய நோய்களின் மூப்பின்
- அலைதந் திவ்வுல கம்படும் பாட்டை
- உற்று நோக்கினால் உருகுதென் உள்ளம்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- கொடிய நெஞ்சினேன் கோபமே அடைந்தேன்
- கோடி கோடியாம் குணப்பழு துடையேன்
- கடிய வஞ்சகக் கள்வனேன் தனக்குன்
- கருணை ஈந்திடா திருந்திடில் கடையேன்
- அடியன் ஆகுவ தெவ்வணம் என்றே
- ஐய ஐயநான் அலறிடு கின்றேன்
- ஒடிய மும்மலம் ஒருங்கறுத் தவர்சேர்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- காமம் என்பதோர் உருக்கொடிவ் வுலகில்
- கலங்கு கின்றஇக் கடையனேன் தனக்குச்
- சேமம் என்பதாம் நின்அருள் கிடையாச்
- சிறுமை யேஇன்னும் செறிந்திடு மானால்
- ஏம நெஞ்சினர் என்றனை நோக்கி
- ஏட நீகடை என்றிடில் அவர்முன்
- ஊமன் ஆகுவ தன்றிஎன் செய்வேன்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- மண்ணில் நின்றவர் வாழ்வதும் கணத்தில்
- வருந்தி மாய்வதும் மற்றிவை எல்லாம்
- கண்ணின் நேர்நிதங் கண்டும்இவ் வாழ்வில்
- காதல் நீங்கிலாக் கல்மனக் கொடியேன்
- எண்ணி நின்றஓர் எண்ணமும் முடியா
- தென்செய் கேன்வரும் இருவினைக் கயிற்றால்
- உண்ணி ரம்பநின் றாட்டுகின் றனைநீ
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- வெருட்சி யேதரும் மலஇரா இன்னும்
- விடியக் கண்டிலேன் வினையினேன் உள்ளம்
- மருட்சி மேவிய தென்செய்கேன் உன்பால்
- வருவ தற்கொரு வழியும்இங் கறியேன்
- தெருட்சி யேதரும் நின்அருள் ஒளிதான்
- சேரில் உய்குவேன் சேர்ந்தில தானால்
- உருட்சி ஆழிஒத் துழல்வது மெய்காண்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- யாதும் உன்செய லாம்என அறிந்தும்
- ஐய வையமேல் அவர்இவர் ஒழியாத்
- தீது செய்தனர் நன்மைசெய் தனர்நாம்
- தெரிந்து செய்வதே திறம்என நினைத்துக்
- கோது செய்மலக் கோட்டையைக் காவல்
- கொண்டு வாழ்கிறேன் கண்டிட இனிநீ
- ஓது செய்வதொன் றென்னுயிர்த் துணையே
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- பந்த மட்டின்ஆம் பாவிநெஞ் சகத்தால்
- பவப்பெ ருங்கடல் படிந்துழன் றயர்ந்தேன்
- இந்த மட்டில்நான் உழன்றதே அமையும்
- ஏற வேண்டும்உன் எண்ணமே தறியேன்
- அந்த மட்டினில் இருத்தியோ அன்றி
- அடிமை வேண்டிநின் அருட்பெரும் புணையை
- உந்த மட்டினால் தருதியோ உரையாய்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- ஞான மென்பதின் உறுபொருள் அறியேன்
- ஞானி அல்லன்நான் ஆயினும் கடையேன்
- ஆன போதிலும் எனக்குநின் அருள்ஓர்
- அணுவில் பாதியே ஆயினும் அடைந்தால்
- வான மேவிய அமரரும் அயனும்
- மாலும் என்முனம் வலியிலர் அன்றே
- ஊனம் நீக்கிநல் அருள்தரும் பொருளே
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- அளிய நெஞ்சம்ஓர் அறிவுரு வாகும்
- அன்பர் தம்புடை அணுகிய அருள்போல்
- எளிய நெஞ்சினேற் கெய்திடா தேனும்
- எள்ளில் பாதிமட் டீந்தருள் வாயேல்
- களிய மாமயல் காடற எறிந்தாங்
- கார வேரினைக் களைந்துமெய்ப் போத
- ஒளிய வித்தினால் போகமும் விளைப்பேன்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- நாக நாட்டதின் நலம்பெற வேண்டேன்
- நரகில் ஏகென நவிலினும் அமைவேன்
- ஆகம் நாட்டிடை விடுகெனில் விடுவேன்
- அல்லல் ஆம்பவம் அடைஎனில் அடைவேன்
- தாகம் நாட்டிய மயல்அற அருள்நீர்
- தருதல் இல்எனச் சாற்றிடில் தரியேன்
- ஓகை நாட்டிய யோகியர் பரவும்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.