- கோயில்
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- அணிகொள் கோவணக் கந்தையே நமக்கிங்
- கடுத்த ஆடைஎன் றறிமட நெஞ்சே
- கணிகொள் மாமணிக் கலன்கள்நம் கடவுள்
- கண்ணுண் மாமணிக் கண்டிகை கண்டாய்
- பிணிகொள் வன்பவம் நீக்கும்வெண்ணீறே
- பெருமைச் சாந்தமாம் பிறங்கொளி மன்றில்
- திணிகொள் சங்கர சிவசிவ என்று
- சென்று வாழ்த்தலே செய்தொழி லாமே.
- செய்த நன்றிமேல் தீங்கிழைப் பாரில்
- திருப்பும் என்தனைக் திருப்புகின் றனைநீ
- பெய்த பாலினைக் கமரிடைக் கவிழ்க்கும்
- பேதை யாதலில் பிறழ்ந்தனை உனைநான்
- வைத போதினும் வாழ்த்தென நினைத்து
- மறுத்து நீக்கிஅவ் வழிநடக் கின்றாய்
- கொய்த கோட்டினை நட்டனை வளர்ப்பாய்
- கொடிய நெஞ்சமே மடியகிற் றிலையே.
- இலைஎ னாதணு வளவும்ஒன் றீய
- எண்ணு கின்றிலை என்பெறு வாயோ
- கொலைஇ னாதென அறிந்திலை நெஞ்சே
- கொல்லு கின்றஅக் கூற்றினும் கொடியாய்
- தலையின் மாலைதாழ் சடையுடைப் பெருமான்
- தாள்நி னைந்திலை ஊண்நினைந் துலகில்
- புலையி னார்கள்பால் போதியோ வீணில்
- போகப் போகஇப் போக்கினில் அழிந்தே.
- அழிந்த வாழ்க்கையின் அவலமிங் கனைத்தும்
- ஐயம் இன்றிநீ அறிந்தனை நெஞ்சே
- கழிந்த எச்சிலை விழைந்திடு வார்போல்
- கலந்து மீட்டுநீ கலங்குகின் றனையே
- மொழிந்த முன்னையோர் பெறும்சிவ கதிக்கே
- முன்னு றாவகை என்னுறும் உன்னால்
- இழிந்த நாயினும் கடையனாய் நின்றேன்
- என்செய் வேன்உனை ஏன்அடுத் தேனே.
- தேன்நெய் ஆடிய செஞ்சடைக் கனியைத்
- தேனை மெய்அருள் திருவினை அடியர்
- ஊனை நெக்கிட உருக்கிய ஒளியை
- உள்ளத் தோங்கிய உவப்பினை மூவர்
- கோனை ஆனந்தக் கொழுங்கடல் அமுதைக்
- கோம ளத்தினைக் குன்றவில் லியைஎம்
- மானை அம்பல வாணனை நினையாய்
- வஞ்ச நெஞ்சமே மாய்ந்திலை இனுமே.
- இன்னும் எங்ஙனம் ஏகுகின் றனையோ
- ஏழை நெஞ்சமே இங்குமங் குந்தான்
- முன்னை நாம்பிறந் துழன்றஅத் துயரை
- முன்னில் என்குலை முறுக்குகின் றனகாண்
- என்னை நீஎனக் குறுதுணை அந்தோ
- என்சொல் ஏற்றிலை எழில்கொளும் பொதுவில்
- மன்னு நம்முடை வள்ளலை நினனத்தால்
- மற்று நாம்பிற வாவகை வருமே.
- பிறந்து முன்னர்இவ் வுலகினாம் பெண்டு
- பிள்ளை ஆதிய பெருந்தொடக் குழந்தே
- இறந்து வீழ்கதி இடைவிழுந் துழன்றே
- இருந்த சேடத்தின் இத்தனை எல்லாம்
- மறந்து விட்டனை நெஞ்சமே நீதான்
- மதியி லாய்அது மறந்திலன் எளியேன்
- துறந்து நாம்பெறும் சுகத்தினை அடையச்
- சொல்லும் வண்ணம்நீ தொடங்கிடில் நன்றே.
- நன்று செய்வதற் குடன்படு வாயேல்
- நல்ல நெஞ்சமே வல்லஇவ் வண்ணம்
- இன்று செய்திநீ நாளைஎன் பாயேல்
- இன்றி ருந்தவர் நாளைநின் றிலரே
- ஒன்று கேண்மதி சுகர்முதல் முனிவோர்
- உக்க அக்கணம் சிக்கெனத் துறந்தார்
- அன்று முன்னரே கடந்தனர் அன்றி
- அதற்கு முன்னரே அகன்றனர் அன்றே.
- அன்றி னேர்கிலை நம்முடைப் பெருமான்
- அஞ்செ ழுத்தையும் அடிக்கடி மறந்தாய்
- ஒன்றி மேற்கதி உறவகை அந்தோ
- உணர்கி லாய்வயிற் றூண்பொருட் டயலோர்
- முன்றில் காத்தனை அவ்வள வேனும்
- முயன்று காத்திலை முன்னவன் கோயில்
- துன்றி நின்றநல் தொண்டர்தம் தொழும்பு
- தொடங்கு வானவர் தூயமுன் றிலையே.
- தூய நெஞ்சமே சுகம்பெற வேண்டில்
- சொல்லு வாம்அது சொல்லள வன்றால்
- காய மாயமாம் கான்செறிந் துலவும்
- கள்வர் ஐவரைக் கைவிடுத் ததன்மேல்
- பாய ஆணவப் பகைகெட முருக்கிப்
- பகல்இ ராஇலாப் பாங்கரின் நின்றே
- ஆய வானந்தக் கூத்துடைப் பரமா
- காய சோதிகண் டமருதல் அணியே.