- கோயில்
 - எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
 - திருச்சிற்றம்பலம்
 - அணிகொள் கோவணக் கந்தையே நமக்கிங்
 - கடுத்த ஆடைஎன் றறிமட நெஞ்சே
 - கணிகொள் மாமணிக் கலன்கள்நம் கடவுள்
 - கண்ணுண் மாமணிக் கண்டிகை கண்டாய்
 - பிணிகொள் வன்பவம் நீக்கும்வெண்ணீறே
 - பெருமைச் சாந்தமாம் பிறங்கொளி மன்றில்
 - திணிகொள் சங்கர சிவசிவ என்று
 - சென்று வாழ்த்தலே செய்தொழி லாமே.
 - செய்த நன்றிமேல் தீங்கிழைப் பாரில்
 - திருப்பும் என்தனைக் திருப்புகின் றனைநீ
 - பெய்த பாலினைக் கமரிடைக் கவிழ்க்கும்
 - பேதை யாதலில் பிறழ்ந்தனை உனைநான்
 - வைத போதினும் வாழ்த்தென நினைத்து
 - மறுத்து நீக்கிஅவ் வழிநடக் கின்றாய்
 - கொய்த கோட்டினை நட்டனை வளர்ப்பாய்
 - கொடிய நெஞ்சமே மடியகிற் றிலையே.
 - இலைஎ னாதணு வளவும்ஒன் றீய
 - எண்ணு கின்றிலை என்பெறு வாயோ
 - கொலைஇ னாதென அறிந்திலை நெஞ்சே
 - கொல்லு கின்றஅக் கூற்றினும் கொடியாய்
 - தலையின் மாலைதாழ் சடையுடைப் பெருமான்
 - தாள்நி னைந்திலை ஊண்நினைந் துலகில்
 - புலையி னார்கள்பால் போதியோ வீணில்
 - போகப் போகஇப் போக்கினில் அழிந்தே.
 - அழிந்த வாழ்க்கையின் அவலமிங் கனைத்தும்
 - ஐயம் இன்றிநீ அறிந்தனை நெஞ்சே
 - கழிந்த எச்சிலை விழைந்திடு வார்போல்
 - கலந்து மீட்டுநீ கலங்குகின் றனையே
 - மொழிந்த முன்னையோர் பெறும்சிவ கதிக்கே
 - முன்னு றாவகை என்னுறும் உன்னால்
 - இழிந்த நாயினும் கடையனாய் நின்றேன்
 - என்செய் வேன்உனை ஏன்அடுத் தேனே.
 - தேன்நெய் ஆடிய செஞ்சடைக் கனியைத்
 - தேனை மெய்அருள் திருவினை அடியர்
 - ஊனை நெக்கிட உருக்கிய ஒளியை
 - உள்ளத் தோங்கிய உவப்பினை மூவர்
 - கோனை ஆனந்தக் கொழுங்கடல் அமுதைக்
 - கோம ளத்தினைக் குன்றவில் லியைஎம்
 - மானை அம்பல வாணனை நினையாய்
 - வஞ்ச நெஞ்சமே மாய்ந்திலை இனுமே.
 - இன்னும் எங்ஙனம் ஏகுகின் றனையோ
 - ஏழை நெஞ்சமே இங்குமங் குந்தான்
 - முன்னை நாம்பிறந் துழன்றஅத் துயரை
 - முன்னில் என்குலை முறுக்குகின் றனகாண்
 - என்னை நீஎனக் குறுதுணை அந்தோ
 - என்சொல் ஏற்றிலை எழில்கொளும் பொதுவில்
 - மன்னு நம்முடை வள்ளலை நினனத்தால்
 - மற்று நாம்பிற வாவகை வருமே.
 - பிறந்து முன்னர்இவ் வுலகினாம் பெண்டு
 - பிள்ளை ஆதிய பெருந்தொடக் குழந்தே
 - இறந்து வீழ்கதி இடைவிழுந் துழன்றே
 - இருந்த சேடத்தின் இத்தனை எல்லாம்
 - மறந்து விட்டனை நெஞ்சமே நீதான்
 - மதியி லாய்அது மறந்திலன் எளியேன்
 - துறந்து நாம்பெறும் சுகத்தினை அடையச்
 - சொல்லும் வண்ணம்நீ தொடங்கிடில் நன்றே.
 - நன்று செய்வதற் குடன்படு வாயேல்
 - நல்ல நெஞ்சமே வல்லஇவ் வண்ணம்
 - இன்று செய்திநீ நாளைஎன் பாயேல்
 - இன்றி ருந்தவர் நாளைநின் றிலரே
 - ஒன்று கேண்மதி சுகர்முதல் முனிவோர்
 - உக்க அக்கணம் சிக்கெனத் துறந்தார்
 - அன்று முன்னரே கடந்தனர் அன்றி
 - அதற்கு முன்னரே அகன்றனர் அன்றே.
 - அன்றி னேர்கிலை நம்முடைப் பெருமான்
 - அஞ்செ ழுத்தையும் அடிக்கடி மறந்தாய்
 - ஒன்றி மேற்கதி உறவகை அந்தோ
 - உணர்கி லாய்வயிற் றூண்பொருட் டயலோர்
 - முன்றில் காத்தனை அவ்வள வேனும்
 - முயன்று காத்திலை முன்னவன் கோயில்
 - துன்றி நின்றநல் தொண்டர்தம் தொழும்பு
 - தொடங்கு வானவர் தூயமுன் றிலையே.
 - தூய நெஞ்சமே சுகம்பெற வேண்டில்
 - சொல்லு வாம்அது சொல்லள வன்றால்
 - காய மாயமாம் கான்செறிந் துலவும்
 - கள்வர் ஐவரைக் கைவிடுத் ததன்மேல்
 - பாய ஆணவப் பகைகெட முருக்கிப்
 - பகல்இ ராஇலாப் பாங்கரின் நின்றே
 - ஆய வானந்தக் கூத்துடைப் பரமா
 - காய சோதிகண் டமருதல் அணியே.