- திருவொற்றியூர்
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- மடுக்கும் நீர்உடைப் பாழ்ங்கிண றதனுள்
- வழுக்கி வீழ்ந்தவன் வருந்துறா வண்ணம்
- எடுக்கின் றோர்என இடையிற்கை விடுதல்
- இரக்க முள்ளவர்க் கியல்பன்று கண்டீர்
- தடுக்கி லாதெனைச் சஞ்சல வாழ்வில்
- தாழ்த்து கின்றது தருமம்அன் றுமக்கு
- நடுக்கி லார்தொழும் ஒற்றியூர் உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- வெண்மை நெஞ்சினேன் மெய்என்ப தறியேன்
- விமல நும்மிடை வேட்கையும் உடையேன்
- உண்மை ஓதினேன் வஞ்சக வாழ்க்கை
- உவரி வீழ்வனேல் உறுதிமற் றறியேன்
- கண்மை உள்ளவர் பாழ்ங்குழி வீழக்
- கண்டி ருப்பது கற்றவர்க் கழகோ
- நண்மை ஒற்றியீர் திருச்சிற்றம் பலத்துள்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- குற்ற மேபல இயற்றினும் எனைநீர்
- கொடியன் என்பது குறிப்பல உமது
- பொற்றை நேர்புயத் தொளிர்திரு நீற்றைப்
- பூசு கின்றனன் புனிதநும் அடிக்கண்
- உற்ற தோர்சிறி தன்பும்இவ் வகையால்
- உறுதி ஈவதிங் குமக்கொரு கடன்காண்
- நற்ற வத்தர்வாழ் ஒற்றியூர் உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- உள்ள தோதினால் ஒறுக்கிலேம் என்பர்
- உலகு ளோர்இந்த உறுதிகொண் டடியேன்
- கள்ளம் ஓதிலேன் நும்மடி அறியக்
- காம வேட்கையில் கடலினும் பெரியேன்
- வள்ள லேஉம தருள்பெறச் சிறிது
- வைத்த சிந்தையேன் மயக்கற அருள்வீர்
- நள்ளல் உற்றவர் வாழ்ஒற்றி உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- அரந்தை யோடொரு வழிச்செல்வோன் தனைஓர்
- ஆற்று வெள்ளம்ஈர்த் தலைத்திட அவனும்
- பரந்த நீரிடை நின்றழு வானேல்
- பகைவர் ஆயினும் பார்த்திருப் பாரோ
- கரந்தை அஞ்சடை அண்ணல்நீர் அடியேன்
- கலங்கக் கண்டிருக் கின்றது கடனோ
- நரந்த மார்பொழில் ஒற்றியூர் உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- பிறவிக் கண்ணிலான் கைக்கொளும் கோலைப்
- பிடுங்கி வீசுதல் பெரியவர்க் கறமோ
- மறவிக் கையறை மனத்தினேன் உம்மேல்
- வைக்கும் அன்பைநீர் மாற்றுதல் அழகோ
- உறஇக் கொள்கையை உள்ளிரேல் இதனை
- ஓதிக் கொள்ளிடம் ஒன்றிலை கண்டீர்
- நறவிக் கோங்கிய ஒற்றியம் பதியீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- வலிய வந்திடு விருந்தினை ஒழிக்கார்
- வண்கை உள்ளவர் மற்றதுபோலக்
- கலிய நெஞ்சினேன் வஞ்சக வாழ்வில்
- கலங்கி ஐயநுங் கருணையாம் அமுதை
- மலிய உண்டிட வருகின்றேன் வருமுன்
- மாற்று கிற்பிரேல் வள்ளல்நீர் அன்றோ
- நலியல் நீக்கிடும் ஒற்றியம் பதியீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- பொய்யன் ஆகிலும் போக்கிடம் அறியாப்
- புலையன் ஆண்டவன் புகழ்உரைப் பானேல்
- உய்ய வைப்பன்ஈ துண்மைஇவ் வுலகில்
- ஒதிய னேன்புகல் ஓரிடம் அறியேன்
- ஐய நும்மடிக் காட்செயல் உடையேன்
- ஆண்ட நீர்எனை அகற்றுதல் அழகோ
- நையல் அற்றிட அருள்ஒற்றி உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- தந்தை ஆயவர் தனையரைக் கெடுக்கச்
- சமைவர் என்பது சற்றும்இன் றுலகில்
- எந்தை நீர்எனை வஞ்சக வாழ்வில்
- இருத்து வீர்எனில் யார்க்கிது புகல்வேன்
- பந்த மேலிட என்பரி தாபம்
- பார்ப்பி ரோஅருட் பங்கய விழியீர்
- நந்த வொண்பணை ஒற்றியூர் உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- கல்வி வேண்டிய மகன்தனைப் பெற்றோர்
- கடுத்தல் ஓர்சிறு கதையிலும் இலைகாண்
- செல்வம் வேண்டிலேன் திருவருள் விழைந்தேன்
- சிறிய னேனைநீர் தியக்குதல் அழகோ
- பல்வி தங்களால் பணிசெயும் உரிமைப்
- பாங்கு நல்கும்அப் பரம்உமக் கன்றே
- நல்வி தத்தினர் புகழ்ஒற்றி உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- மண்ணில் நல்லவன் நல்லவர் இடத்தோர்
- வணக்கம் இன்மையன் வணங்குவன் ஆனால்
- எண்ணி நம்புடை இருஎன உரைப்பர்
- ஏன்வ ணங்கினை என்றுரைப் பாரோ
- கண்ணின் நல்லநும் கழல்தொழ இசைந்தால்
- கலக்கம் காண்பது கடன்அன்று கண்டீர்
- நண்ணி மாதவன் தொழும்ஒற்றி உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.