- திருவொற்றியூர்
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- யாது செய்குவன் போதுபோ கின்ற
- தண்ண லேஉம தன்பருக் கடியேன்
- கோது செய்யினும் பொறுத்தருள் புரியும்
- கொள்கை யீர்எனைக் குறுகிய குறும்பர்
- வாது செய்கின்றார் மனந்தளர் கின்றேன்
- வலியி லேன்செயும் வகைஒன்றும் அறியேன்
- மாதர் செய்பொழில் ஒற்றியூர் உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- எனக்கு நீர் இங்கோர் ஆண்டைஅல் லீரோ
- என்னை வஞ்சகர் யாவருங் கூடிக்
- கனக்கும் வன்பவக் கடலிடை வீழ்த்தக்
- கண்டி ருத்தலோ கடன்உமக் கெளியேன்
- தனக்கு மற்றொரு சார்பிருந் திடுமேல்
- தயவு செய்திடத் தக்கதன் றிலைகாண்
- மனக்கு நல்லவர் வாழ்ஒற்றி உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- எஞ்சல் இல்லதோர் காமமாம் கடல்ஆழ்ந்
- திளைக்கின் றேன்இனி என்செய்வன் அடியேன்
- தஞ்சம் என்றும திணைமலர் அடிக்கே
- சரண்பு குந்தனன் தயவுசெய் யீரேல்
- வஞ்ச வாழ்க்கையாம் திமிங்கிலம் எனுமீன்
- வாரிக் கொண்டெனை வாய்மடுத் திடுங்காண்
- மஞ்ச ளாவிய பொழில்ஒற்றி உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- என்பி றப்பினை யார்க்கெடுத் துரைப்பேன்
- என்செய் வேன்எனை என்செய நினைக்கேன்
- முன்பி றப்பிடை இருந்தசே டத்தால்
- மூட வாழ்க்கையாம் காடகத் தடைந்தே
- அன்பி றந்தவெங் காமவேட் டுவனால்
- அலைப்புண் டேன்உம தருள்பெற விழைந்தேன்
- வன்பி றந்தவர் புகழ்ஒற்றி உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- காமம் என்னும்ஓர் காவலில் உழன்றே
- கலுழ்கின் றேன்ஒரு களைகணும் அறியேன்
- சேம நல்லருட் பதம்பெறுந் தொண்டர்
- சேர்ந்த நாட்டகம் சேர்வுற விழைந்தேன்
- ஏமம் உற்றிடும் எனைவிடு விப்பார்
- இல்லை என்செய்வன் யாரினும் சிறியேன்
- வாம மாதராள் மருவொற்றி உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- இன்பம் என்பது விழைந்திடர் உழந்தேன்
- என்னை ஒத்தஓர் ஏழைஇங் கறியேன்
- துன்பம் என்பது பெருஞ்சுமை ஆகச்
- சுமக்கின் றேன்அருள் துணைசிறி தில்லேன்
- அன்பர் உள்ளகத் தமர்ந்திடுந் தேவர்
- அடிக்குற் றேவலுக் காட்படு வேனோ
- வன்பர் நாடுறா ஒற்றியூர் உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- ஊழ்வி னைப்படி எப்படி அறியேன்
- உஞற்று கின்றனன் உமதருள் பெறவே
- தாழ்வி னைத்தரும் காமமோ எனைக்கீழ்த்
- தள்ளு கின்றதே உள்ளுகின் றதுகாண்
- பாழ்வி னைக்கொளும் பாவியேன் செய்யும்
- பாங்க றிந்திலேன் ஏங்குகின் றனனால்
- வாழ்வி னைத்தரும் ஒற்றியூர் உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- இறப்பி லார்தொழும் தேவரீர் பதத்தை
- எவ்வம் நீக்கியே எவ்விதத் தானும்
- மறப்பி லாதுளம் நினைத்திடில் காமம்
- வழிம றித்ததை மயக்குகின் றதுகாண்
- குறிப்பி லாதென்னால் கூடிய மட்டும்
- குறைத்தும் அங்கது குறைகில தந்தோ
- வறிப்பி லாவயல் ஒற்றியூர் உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- சஞ்சி தந்தரும் காமம்என் றிடும்ஓர்
- சலதி வீழ்ந்ததில் தலைமயக் குற்றே
- அஞ்சி அஞ்சிநான் அலைகின்றேன் என்னை
- அஞ்சல் என்பவர் யாரையும் அறியேன்
- துஞ்சி னால்பின்பு சுகம்பலித் திடுமோ
- துணையி லார்க்கொரு துணைஎன இருப்பீர்
- மஞ்சின் நீள்பொழில் ஒற்றியூர் உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- அல்ல ஓதியர் இடைப்படும் கமருக்
- காசை வைத்தஎன் அறிவின்மை அளவைச்
- சொல்ல வோமுடி யாதெனை ஆளத்
- துணிவு கொள்விரோ தூயரை ஆளல்
- அல்ல வோஉம தியற்கைஆ யினும்நல்
- அருட்கணீர்எனை ஆளலும் தகுங்காண்
- மல்லல் ஓங்கிய ஒற்றியூர் உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.