- திருவொற்றியூர்
- தரவு கொச்சகக் கலிப்பா
- திருச்சிற்றம்பலம்
- மண்ணேயும் வாழ்க்கையிடை மாழாந்து வன்பிணியால்
- புண்ணேயும் நெஞ்சம் புழுங்குகின்ற பொய்யவனேன்
- பண்ணேயும் இன்பப் பரஞ்சுடரே என்இரண்டு
- கண்ணேஉன் பொன்முகத்தைக் காணக் கிடைத்திலனே.
- மருள்ஆர்ந்த வல்வினையால் வன்பிணியால் வன்துயரால்
- இருள்ஆர்ந்த நெஞ்சால் இடியுண்ட ஏழையனேன்
- தெருள்ஆர்ந்த மெய்ஞ்ஞானச் செல்வச் சிவமேநின்
- அருள்ஆர்ந்த முக்கண் அழகுதனைக் கண்டிலனே.
- வல்லார் முலையார் மயல்உழந்த வஞ்சகனேன்
- பொல்லார் புரம்எரித்த புண்ணியனே பொய்மறுத்த
- நல்லார் தொழுந்தில்லை நாயகனே நன்றளித்த
- அல்லார் களத்தின் அழகுதனைக் கண்டிலனே.
- நோயால் மெலிந்துனருள் நோக்குகின்ற நொய்யவனேன்
- தாயா னவனேஎன் தந்தையே அன்பர்தமைச்
- சேயாய் வளர்க்கும் சிவனே சிவனேஎம்
- தூயாநின் பொற்றோளின் சுந்தரத்தைக் கண்டிலனே.
- வன்னேர் முலையார் மயல்உழந்த வன்மனத்தேன்
- அன்னேஎன் அப்பாஎன் ஐயாஎன் ஆரமுதே
- மன்னே மணியே மலையாள் மகிழ்உனது
- பொன்னேர் இதழிப் புயங்காணப் பெற்றிலனே.
- நண்ணும் வினையால் நலிகின்ற நாயடியேன்
- எண்ணும் சுகாதீத இன்பமே அன்புடையோர்
- கண்ணும் கருத்தும் களிக்கவரும் கற்பகமே
- பெண்ஒருபால் வாழும்உருப் பெற்றிதனைக் கண்டிலனே.
- தெவ்வண்ண மாயையிடைச் செம்மாந்த சிற்றடியேன்
- இவ்வண்ணம் என்றறிதற் கெட்டாத வான்பொருளே
- அவ்வண்ண மான அரசே அமுதேநின்
- செவ்வண்ண மேனித் திறங்காணப் பெற்றிலனே.
- அல்வைத்த நெஞ்சால் அழுங்குகின்ற நாயடியேன்
- சொல்வைத்த உண்மைத் துணையே இணைத்தோள்மேல்
- வில்வத் தொடைஅணிந்த வித்தகனே நின்னுடைய
- செல்வத் திருவடியின் சீர்காணப் பெற்றிலனே.
- பொத்தேர் மயலால் புழுங்குகின்ற பொய்யடியேன்
- கொத்தேர் செழுங்கொன்றைக் குன்றமே கோவாத
- முத்தே எவர்க்கும் முழுமுதலே முத்திக்கு
- வித்தேநின் பொன்னடிக்கீழ் மேவிநிற்க கண்டிலனே.
- நீதியிலார் வாயிலிடை நின்றலைந்த நெஞ்சகனேன்
- சோதிஎலாம் சூழ்ந்தபரஞ் சோதியே செஞ்சடைமேல்
- பாதிநிலா ஓங்கும் பரமேநீ ஒற்றிநகர்
- வீதிஉலா வந்தஎழில் மெய்குளிரக் கண்டிலனே.