- திருவொற்றியூர்
- கொச்சகக் கலிப்பா
- திருச்சிற்றம்பலம்
- ஒப்பாரும் இல்லாத உத்தமனே ஒற்றியில்என்
- அப்பாஉன் பொன்னடிக்கே அன்பிலேன் ஆனாலும்
- தப்பா தகமெலியச் சஞ்சலத்தால் ஏங்குகின்ற
- இப்பா தகத்தேற் கிரங்கினால் ஆகாதோ.
- எஞ்சா இடரால் இரும்பிணியால் ஏங்கிமனம்
- பஞ்சாக நொந்து பரதவிக்கும் நாயேனைச்
- செஞ்சாலி ஓங்கும் திருவொற்றி யப்பாநீ
- அஞ்சாதே என்றுன் அருள்கொடுத்தால் ஆகாதோ.
- பற்றும் செழுந்தமிழால் பாடுகின்றோர் செய்தபெருங்
- குற்றம் குணமாகக் கொள்ளும் குணக்கடலே
- மற்றங்கும் எண்தோள் மலையே மரகதமே
- பெற்றிங் கடியேன் பிணிகெடுத்தால் ஆகாதோ.
- எந்தையே என்பவர்தம் இன்னமுதே என்உரிமைத்
- தந்தையே தாயே தமரேஎன் சற்குருவே
- சிந்தையே ஓங்கும் திருவொற்றி ஐயாஎன்
- நிந்தையே நீங்க நிழல்அளித்தால் ஆகாதோ.
- உள்ளும் திருத்தொண்டர் உள்ளத் தெழுங்களிப்பே
- கொள்ளும் சிவானந்தக் கூத்தாஉன் சேவடியை
- நள்ளும் புகழுடைய நல்லோர்கள் எல்லாரும்
- எள்ளும் புலையேன் இழிவொழித்தால் ஆகாதோ.
- கோதைஓர் கூறுடைய குன்றமே மன்றமர்ந்த
- தாதையே ஒற்றித் தலத்தமர்ந்த சங்கரனே
- தீதையே நாள்தோறும் செய்தலைந்து வாடுமிந்தப்
- பேதையேன் செய்த பிழைபொறுத்தால் ஆகாதோ.
- முத்திக்கு வித்தே முழுமணியே முத்தர்உளம்
- தித்திக்கும் தேனே சிவமே செழுஞ்சுடரே
- சத்திக்கும் நாதத் தலங்கடந்த தத்துவனே
- எத்திக்கும் இல்லேன் இளைப்பொழித்தால் ஆகாதோ.
- வஞ்சமிலார் உள்ளம் மருவுகின்ற வான்சுடரே
- கஞ்சமுளான் போற்றும் கருணைப் பெருங்கடலே
- நஞ்சமுதாக் கொண்டருளும் நல்லவனே நின்அலதோர்
- தஞ்சமிலேன் துன்பச் சழக்கொழித்தால் ஆகாதோ.
- சேய்பிழையைத் தாய்அறிந்தும் சீறாள் பொறுப்பாள்இந்
- நாய்பிழையை நீபொறுக்க ஞாயமும்உண் டையாவே
- தேய்மதிபோல் நெஞ்சம் தியக்கம்உறச் சஞ்சலத்தால்
- வாய்அலறி வாடும்எனை வாஎன்றால் ஆகாதோ.
- கண்ணுள் மணிபோல் கருதுகின்ற நல்லோரை
- எண்ணும் கணமும்விடுத் தேகாத இன்னமுதே
- உண்ணும் உணவுக்கும் உடைக்கும்முயன் றோடுகின்ற
- மண்ணுலகத் தென்றன் மயக்கறுத்தால் ஆகாதோ.