- திருவொற்றியூர்
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- வானை நோக்கிமண் வழிநடப் பவன்போல்
- வயங்கும் நின்அருள் வழியிடை நடப்பான்
- ஊனை நோக்கினேன் ஆயினும் அடியேன்
- உய்யும் வண்ணம்நீ உவந்தருள் புரிவாய்
- மானை நோக்கிய நோக்குடை மலையாள்
- மகிழ மன்றிடை மாநடம் புரிவோய்
- தேனை நோக்கிய கொன்றையஞ் சடையோய்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- வாயி லான்பெரு வழக்குரைப் பதுபோல்
- வள்ளல் உன்னடி மலர்களுக் கன்பாம்
- தூயி லாதுநின் அருள்பெற விழைந்தேன்
- துட்ட னேன்அருள் சுகம்பெற நினைவாய்
- கோயி லாகநல் அன்பர்தம் உளத்தைக்
- கொண்ட மர்ந்திடும் குணப்பெருங் குன்றே
- தேயி லாதபல் வளஞ்செறிந் தோங்கித்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- வித்தை இன்றியே விளைத்திடு பவன்போல்
- மெய்ய நின்இரு மென்மலர்ப் பதத்தில்
- பத்தி இன்றியே முத்தியை விழைந்தேன்
- பாவி யேன்அருள் பண்புற நினைவாய்
- மித்தை இன்றியே விளங்கிய அடியார்
- விழைந்த யாவையும் தழைந்திட அருள்வோய்
- சித்தி வேண்டிய முனிவரர் பரவித்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- கலம்இ லாதுவான் கடல்கடப் பவன்போல்
- கடவுள் நின்அடிக் கமலங்கள் வழுத்தும்
- நலம்இ லாதுநின் அருள்பெற விழைந்த
- நாயி னேன்செயும் நவைபொறுத் தருள்வாய்
- மலம்இ லாதநல் வழியிடை நடப்போர்
- மனத்துள் மேவிய மாமணிச் சுடரே
- சிலம்இ லாஞ்சம்ஆ தியதருப் பொழில்கள்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- போர்க்கும் வெள்ளத்தில் பொன்புதைப் பவன்போல்
- புலைய நெஞ்சிடைப் புனிதநின் அடியைச்
- சேர்க்கும் வண்ணமே நினைக்கின்றேன் எனினும்
- சிறிய னேனுக்குன் திருவருள் புரிவாய்
- கூர்க்கும் நெட்டிலை வேற்படைக் கரங்கொள்
- குமரன் தந்தையே கொடியதீ வினையைத்
- தீர்க்கும் தெய்வமே சைவவை திகங்கள்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- ஓட உன்னியே உறங்குகின் றவன்போல்
- ஓங்கும் உத்தம உன்அருட் கடலில்
- ஆட உன்னியே மங்கையர் மயலில்
- அழுந்து கின்றஎற் கருள்செய நினைவாய்
- நாட உன்னியே மால்அயன் ஏங்க
- நாயி னேன்உளம் நண்ணிய பொருளே
- தேட உன்னிய மாதவ முனிவர்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- முதல்இ லாமல்ஊ தியம்பெற விழையும்
- மூடன் என்னநின் மொய்கழல் பதமேத்
- துதல்இ லாதுநின் அருள்பெற விழைந்தேன்
- துட்ட னேன்அருட் சுகம்பெறு வேனோ
- நுதலில் ஆர்அழல் கண்ணுடை யவனே
- நோக்கும் அன்பர்கள் தேக்கும்இன் அமுதே
- சிதல்இ லாவளம் ஓங்கிஎந் நாளும்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- கல்லை உந்திவான் நதிகடப் பவர்போல்
- காமம் உந்திய நாமநெஞ் சகத்தால்
- எல்லை உந்திய பவக்கடல் கடப்பான்
- எண்ணு கின்றனன் எனக்கருள் வாயோ
- அல்லை உந்திய ஒண்சுடர்க் குன்றே
- அகில கோடிகட் கருள்செயும் ஒன்றே
- தில்லை நின்றொளிர் மன்றிடை அமுதே
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- நெய்யி னால்சுடு நெருப்பவிப் பவன்போல்
- நெடிய துன்பமாம் கொடியவை நிறைந்த
- பொய்யி னால்பவம் போக்கிட நினைத்தேன்
- புல்ல னேனுக்குன் நல்அருள் வருமோ
- கையி னால்தொழும் அன்பர்தம் உள்ளக்
- கமலம் மேவிய விமலவித் தகனே
- செய்யி னால்பொலிந் தோங்கிநல் வளங்கள்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- நீர்சொ ரிந்தொளி விளக்கெரிப் பவன்போல்
- நித்தம் நின்னிடை நேசம்வைத் திடுவான்
- பார்சொ ரிந்திடும் பவநெறி முயன்றேன்
- பாவி யேன்தனைக் கூவிநின் றாள்வாய்
- கார்சொ ரிந்தெனக் கருணைஈந் தன்பர்
- களித்த நெஞ்சிடை ஒளித்திருப் பவனே
- தேர்சொ ரிந்தமா மணித்திரு வீதித்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.