- திருவொற்றியூர்
- கொச்சகக் கலிப்பா
- திருச்சிற்றம்பலம்
- எளியேன்நின் திருமுன்பே என்உரைக்கேன் பொல்லாத
- களியேன் கொடுங்காமக் கன்மனத்தேன் நன்மையிலா
- வெளியேன் வெறியேன்தன் மெய்ப்பிணியை ஒற்றியில்வாழ்
- அளியோய்நீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- முன்னேசெய் வெவ்வினைதான் மூண்டதுவோ அல்லதுநான்
- இன்னே பிழைதான் இயற்றியதுண் டோஅறியேன்
- பொன்னேர் புரிசடைஎம் புண்ணியனே என்நோயை
- அன்னேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை
- வெப்பார் உளத்தினர்போல் வெம்மைசெயும் வெம்பிணியை
- எப்பா லவர்க்கும் இறைவனாம் என்அருமை
- அப்பாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- ஓவா மயல்செய் உலகநடைக் குள்துயரம்
- மேவா உழல்கின்ற வெண்மையேன் மெய்ந்நோயைச்
- சேவார் கொடிஎம் சிவனே சிவனேயோ
- ஆவாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- பொய்யாம் மலஇருட்டுப் பொத்தரிடை வீழ்ந்துழலும்
- கையாம் நெறியேன் கலங்கவந்த வெம்பிணியை
- மையார் மிடற்றெம் மருந்தே மணியேஎன்
- ஐயாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- இம்மா நிலத்தில் இடருழத்தல் போதாதே
- விம்மா அழுங்கஎன்றன் மெய்உடற்றும் வெம்பிணியைச்
- செம்மான் மழுக்கரங்கொள் செல்வச் சிவமேஎன்
- அம்மாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- புரைசேரும் நெஞ்சப் புலையனேன் வன்காமத்
- தரைசேரும் துன்பத் தடங்கடலேன் வெம்பிணியை
- விரைசேரும் கொன்றை விரிசடையாய் விண்ணவர்தம்
- அரைசேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- இத்தா ரணியில் எளியோரைக் கண்டுமி
- வித்தாரம் பேசும் வெறியேன்தன் மெய்ப்பிணியைக்
- கொத்தார் குழலிஒரு கூறுடைய கோவேஎன்
- அத்தாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- மறியேர் விழியார் மயக்கினிடை மாழாந்த
- சிறியேன் அடியேன் தியங்கவந்த வல்நோயைச்
- செறிவே பெறுந்தொண்டர் சிந்தை தனில்ஓங்கும்
- அறிவேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- துன்பே சுமையாச் சுமக்கின்ற நாயேனை
- வன்பேசெய் துள்ள மயக்கிநின்ற வன்நோயை
- இன்பே அருள்கின்ற என்ஆ ருயிரேஎன்
- அன்பேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.