- திருவொற்றியூர்
- நேரிசை வெண்பா
- திருச்சிற்றம்பலம்
- பொன்னார் விடைக்கொடிஎம் புண்ணியனைப் புங்கவனை
- ஒன்னார் புரம்எரித்த உத்தமனை - மன்னாய
- அத்தனைநம் ஒற்றியூர் அப்பனைஎல் லாம்வல்ல
- சித்தனைநீ வாழ்த்துதிநெஞ் சே.
- நெஞ்சே உலக நெறிநின்று நீமயலால்
- அஞ்சேல்என் பின்வந் தருள்கண்டாய் - எஞ்சாத்
- தவக்கொழுந்தாம் சற்குணவர் தாழ்ந்தேத்தும் ஒற்றிச்
- சிவக்கொழுந்தை வாழ்த்துதும்நாம் சென்று.
- சென்றுசென்று நல்காத செல்வர்தலை வாயிலிலே
- நின்று நின்று வாடுகின்ற நெஞ்சமே - இன்றுதிரு
- ஒற்றியப்பன் தாண்மலரை உன்னுதியேல் காதலித்து
- மற்றிசைப்ப தெல்லாம் வரும்.
- வருநாள் உயிர்வாழும் மாண்பறியோம் நெஞ்சே
- ஒருநாளும் நீவேறொன் றுன்னேல் - திருநாளைப்
- போவான் தொழுமன்றில் புண்ணியனை ஒற்றியில்தாய்
- ஆவான் திருவடிஅல் லால்.
- அல்லாலம் உண்டமிடற் றாரமுதை அற்புதத்தைக்
- கல்லால நீழல்அமர் கற்பகத்தைச் - சொல்ஆர்ந்த
- விண்மணியை என்உயிரை மெய்ப்பொருளை ஒற்றியில்என்
- கண்மணியை நெஞ்சே கருது.
- கருதாயோ நெஞ்சே கதிகிடைக்க எங்கள்
- மருதா எழில்தில்லை மன்னா - எருதேறும்
- என்அருமைத் தெய்வதமே என்அருமைச் சற்குருவே
- என்அருமை அப்பாவே என்று.
- என்றும்உனக் காளாவேன் என்நெஞ்சே வன்நெஞ்சர்
- ஒன்றும் இடம் சென்றங் குழலாதே - நன்றுதரும்
- ஒற்றியப்பன் பொன்அடியை உன்னுகின்றோர் தம்பதத்தைப்
- பற்றிநிற்பை யாகில் பரிந்து.
- பரிந்துனக்குச் சொல்கின்றேன் பாவங்கள் எல்லாம்
- எரிந்துவிழ நாம்கதியில் ஏறத் - தெரிந்து
- விடையானை ஒற்றியூர் வித்தகனை மாதோர்
- புடையானை நெஞ்சமே போற்று.
- போற்றுதிஎன் நெஞ்சே புரம்நகையால் சுட்டவனை
- ஏற்றுகந்த பெம்மானை எம்மவனை - நீற்றொளிசேர்
- அவ்வண்ணத் தானை அணிபொழில்சூழ் ஒற்றியூர்ச்
- செவ்வண்ணத் தானைத் தெரிந்து.
- தெரிந்து நினக்கனந்தம் தெண்டன்இடு கின்றேன்
- விரிந்தநெஞ்சே ஒற்றியிடை மேவும் -பரிந்தநெற்றிக்
- கண்ணானை மாலயனும் காணப் படாதானை
- எண்ணாரை எண்ணாதே என்று.
- என்றென் றழுதாய் இலையேஎன் நெஞ்சமே
- ஒன்றென்று நின்ற உயர்வுடையான் - நன்றென்ற
- செம்மைத் தொழும்பர்தொழும் சீர்ஒற்றி யூர்அண்ணல்
- நம்மைத் தொழும்புகொள்ளும் நாள்.
- நாளாகு முன்எனது நன்நெஞ்சே ஒற்றியப்பன்
- தாளாகும் தாமரைப்பொன் தண்மலர்க்கே - ஆளாகும்
- தீர்த்தர் தமக்கடிமை செய்தவர்தம் சீர்ச்சமுகம்
- பார்த்துமகிழ் வாய்அதுவே பாங்கு.
- பாங்குடையார் மெய்யில் பலித்ததிரு நீறணியாத்
- தீங்குடையார் தீமனையில் செல்லாதே - ஓங்குடையாள்
- உற்றமர்ந்த பாகத்தெம் ஒற்றியப்பன் பொன்அருளைப்
- பெற்றமர்தி நெஞ்சே பெரிது.
- பெரியானை மாதர்ப் பிறைக்கண்ணி யானை
- அரியானை அங்கணனை ஆர்க்கும் - கரியானைத்
- தோலானைச் சீர்ஒற்றிச் சுண்ணவெண் நீற்றானை
- மேலானை நெஞ்சே விரும்பு.
- விரும்பித் திருமால் விலங்காய் நெடுநாள்
- அரும்பித் தளைந்துள் அயர்ந்தே - திரும்பிவிழி
- நீர்கொண்டும் காணாத நித்தன்ஒற்றி யூரன்அடிச்
- சீர்கொண்டு நெஞ்சே திகழ்.
- திகழ்கின்ற ஞானச் செழுஞ்சுடரை வானோர்
- புகழ்கின்ற தெய்வத்தைப் போதம் - நிகழ்கின்ற
- ஒற்றிக் கனியை உலகுடைய நாயகத்தை
- வெற்றித் துணையைநெஞ்சே வேண்டு.
- வேண்டாமை வேண்டுவது மேவாத் தவமுடையோர்
- தீண்டாமை யாததுநீ தீண்டாதே - ஈண்டாமை
- ஒன்றுவபோல் நெஞ்சேநீ ஒன்றிஒற்றி யூரன்பால்
- சென்றுதொழு கண்டாய் தினம்.
- தினந்தோறும் உள்ளுருகிச் சீர்பாடும் அன்பர்
- மனந்தோறும் ஓங்கும் மணியை - இனந்தோறும்
- வேதமலர் கின்ற வியன்பொழில்சூழ் ஒற்றிநகர்ப்
- போத மலரைநெஞ்சே போற்று.
- போற்றார் புரம்பொடித்த புண்ணியனை விண்ணவர்கள்
- ஆற்றாத நஞ்சமுண்ட ஆண்தகையைக் - கூற்றாவி
- கொள்ளும் கழற்கால் குருமணியை ஒற்றியிடம்
- கொள்ளும் பொருளைநெஞ்சே கூறு.
- கூறுமையாட் கீந்தருளும் கோமானைச் செஞ்சடையில்
- ஆறுமலர்க் கொன்றை அணிவோனைத் - தேறுமனம்
- உள்ளவர்கட் குள்ளபடி உள்ளவனை ஒற்றிஅமர்
- நள்ளவனை நெஞ்சமே நாடு.
- நாடும் சிவாய நமஎன்று நாடுகின்றோர்
- கூடும் தவநெறியில் கூடியே - நீடும்அன்பர்
- சித்தமனைத் தீபகமாம் சிற்பரனை ஒற்றியூர்
- உத்தமனை நெஞ்சமே ஓது.
- ஓதுநெறி ஒன்றுளதென் உள்ளமே ஓர்திஅது
- தீதுநெறி சேராச் சிவநெறியில் - போதுநெறி
- ஓதம் பிடிக்கும்வயல் ஒற்றியப்பன் தொண்டர்திருப்
- பாதம் பிடிக்கும் பயன்.
- பயன்அறியாய் நெஞ்சே பவஞ்சார்தி மாலோ
- டயன்அறியாச் சீருடைய அம்மான் - நயனறியார்
- உள்ளத் தடையான் உயர்ஒற்றி யூரவன்வாழ்
- உள்ளத் தவரை உறும்.
- தவராயி னும்தேவர் தாமாயி னும்மற்
- றெவரா யினும்நமக்கிங் கென்னாம் - கவராத
- நிந்தை அகன்றிடஎன் நெஞ்சமே ஒற்றியில்வாழ்
- எந்தை அடிவணங்கா ரேல்.
- ஏலக் குழலார் இடைக்கீழ்ப் படுங்கொடிய
- ஞாலக் கிடங்கரினை நம்பாதே - நீல
- மணிகண்டா என்றுவந்து வாழ்த்திநெஞ்சே நாளும்
- பணிகண்டாய் அன்னோன் பதம்.
- பதந்தருவான் செல்வப் பயன்தருவான் மன்னும்
- சதந்தருவான் யாவும் தருவான் - இதம்தரும்என்
- நெஞ்சம்என்கொல் வாடுகின்றாய் நின்மலா நின்அடியே
- தஞ்சமென்றால் ஒற்றியப்பன் தான்.