- எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- மெய்யர்உள் ளகத்தின் விளங்கும்நின் பதமாம்
- விரைமலர்த் துணைதமை விரும்பாப்
- பொய்யர் தம் இடத்திவ் வடியனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- ஐயரும் இடப்பால் அம்மையும் வருந்தி
- அளித்திடும் தெள்ளிய அமுதே
- தையலார் மயக்கற் றவர்க்கருள் பொருளே
- தணிகைவாழ் சரவண பவனே.
- நன்மைய எல்லாம் அளித்திடும் உனது
- நளினமா மலர்அடி வழுத்தாப்
- புன்மையர் இடத்திவ் வடியனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- சின்மயப் பொருள்நின் தொண்டர்பால் நாயேன்
- சேர்ந்திடத் திருவருள் புரியாய்
- தன்மயக் கற்றோர்க் கருள்தரும் பொருளே
- தணிகைவாழ் சரவண பவனே.
- மருள்இலா தவர்கள் வழுத்தும்நின் அடியை
- மனமுற நினைந்தகத் தன்பாம்
- பொருள்இலா தவர்பால் ஏழையேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- அருள்எலாம் திரண்ட ஆனந்த உருவே
- அன்பர்பால் இருந்திட அருளாய்
- தரளவான் மழைபெய் திடும்திருப் பொழில்சூழ்
- தணிகைவாழ் சரவண பவனே.
- நிலைஅருள் நினது மலர்அடிக் கன்பு
- நிகழ்ந்திட நாள்தொறும் நினையாப்
- புலையர்தம் இடம்இப் புன்மையேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- மலைஅர சளித்த மரகதக் கொம்பர்
- வருந்திஈன் றெடுத்தமா மணியே
- தலைஅர சளிக்க இந்திரன் புகழும்
- தணிகைவாழ் சரவண பவனே.
- வல்இருள் பவம்தீர் மருந்தெனும் நினது
- மலர்அடி மனம்உற வழுத்தாப்
- புல்லர்தம் இடம்இப் பொய்யனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- ஒல்லையின் எனைமீட் டுன்அடி யவர்பால்
- உற்றுவாழ்ந் திடச்செயின் உய்வேன்
- சல்லமற் றவர்கட் கருள்தரும் பொருளே
- தணிகைவாழ் சரவண பவனே.
- கற்பிலார் எனினும் நினைந்திடில் அருள்நின்
- கருணைஅம் கழல்அடிக் கன்பாம்
- பொற்பிலா தவர்பால் ஏழையேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- அற்பிலேன் எனினும் என்பிழை பொறுத்துன்
- அடியர்பால் சேர்த்திடில் உய்வேன்
- தற்பரா பரமே சற்குண மலையே
- தணிகைவாழ் சரவண பவனே.
- பத்திகொண் டவருள் பரவிய ஒளியாம்
- பரஞ்சுடர் நின்அடி பணியும்
- புத்திகொள் ளலர்பால் எளியனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- நித்திய அடியர் தம்முடன் கூட்ட
- நினைந்திடில் உய்குவன் அரசே
- சத்திசெங் கரத்தில் தரித்திடும் அமுதே
- தணிகைவாழ் சரவண பவனே.
- நீற்றணி விளங்கும் அவர்க்கருள் புரியும்
- நின்அடிக் கமலங்கள் நினைந்தே
- போற்றிடா தவர்பால் பொய்யனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- ஆற்றல்கொள் நின்பொன் அடியருக் கடியன்
- ஆச்செயில் உய்குவன் அமுதே
- சாற்றிடும் பெருமைக் களவிலா தோங்கும்
- தணிகைவாழ் சரவண பவனே.
- பரிந்திடும் மனத்தோர்க் கருள்செயும் நினது
- பாததா மரைகளுக் கன்பு
- புரிந்திடா தவர்பால் எளியனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- தெரிந்திடும் அன்பர் இடம்உறில் உய்வேன்
- திருவுளம் அறிகிலன் தேனே
- சரிந்திடும் கருத்தோர்க் கரியநற் புகழ்கொள்
- தணிகைவாழ் சரவண பவனே.
- எண்உறும் அவர்கட் கருளும்நின் அடியை
- ஏத்திடா தழிதரும் செல்வப்
- புண்உறும் அவர்பால் எளியனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- கண்உறு மணியாம் நின்அடி யவர்பால்
- கலந்திடில் உய்குவன் கரும்பே
- தண்உறும் கருணைத் தனிப்பெருங் கடலே.
- தணிகைவாழ் சரவண பவனே.