- பொது
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- ஆண்ட துண்டுநீ என்றனை அடியேன்
- ஆக்கை ஒன்றுமே அசைமடற் பனைபோல்
- நீண்ட துண்டுமற் றுன்னடிக் கன்பே
- நீண்ட தில்லைவல் நெறிசெலும் ஒழுக்கம்
- பூண்ட துண்டுநின் புனிதநல் ஒழுக்கே
- பூண்ட தில்லைஎன் புன்மையை நோக்கி
- ஈண்ட வந்தரு ளாய்எனில் அந்தோ
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- ஊழை யேமிக நொந்திடு வேனோ
- உளத்தை நோவனோ உலகிடை மயக்கும்
- பாழை யேபலன் தருவதென் றெண்ணிப்
- பாவி யேன்பெரும் படர்உழக் கின்றேன்
- மாழை யேர்திரு மேனிஎம் பெருமான்
- மனம்இ ரங்கிஎன் வல்வினை கெடவந்
- தேழை யேற்கரு ளாய்எனில் அந்தோ
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- ஈன்று கொண்டஎன் தந்தையும் தாயும்
- யாவும் நீஎன எண்ணிய நாயேன்
- மான்று கொண்டஇவ் வஞ்சக வாழ்வின்
- மயக்கி னால்மிக வன்மைகள் செய்தேன்
- சான்று கொண்டது கண்டனை யேனும்
- தமிய னேன்மிசைத் தயவுகொண் டென்னை
- ஏன்று கொண்டரு ளாய்எனில் அந்தோ
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- அம்மை அப்பன்என் ஆருயிர்த் துணைவன்
- அரசன் தேசிகன் அன்புடைத் தேவன்
- இம்மை யிற்பயன் அம்மையிற் பயன்மற்
- றியாவு நீஎன எண்ணிநிற் கின்றேன்
- செம்மை யிற்பெறும் அன்பருள் ளகஞ்சேர்
- செல்வ மேஎனைச் சேர்த்தரு ளாயேல்
- எம்மை யிற்பெறு வேன்சிறு நாயேன்
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- தாய ராதியர் சலிப்புறு கிற்பார்
- தமரும் என்றனைத் தழுவுதல் ஒழிவார்
- நேய ராதியர் நேயம்விட் டகல்வார்
- நின்னை நம்பிஎன் நெஞ்சுவக் கின்றேன்
- தீய ராதியில் தீயன்என் றெனைநின்
- திருவு ளத்திடைச் சேர்த்திடா தொழித்தால்
- ஏயர் கோனுக்கன் றருளும்எம் பெருமான்
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- முன்னை நான்செய்த வல்வினைச் சிமிழ்ப்பான்
- மோக வாரியின் மூழ்கின னேனும்
- அன்னை போலும்என் ஆருயிர்த் துணையாம்
- அப்ப நின்அருள் அம்பியை நம்பி
- தன்னை நேர்சிவ ஞானமென் கரையைச்
- சார்கு வேம்எனும் தருக்குடன் உழன்றேன்
- இன்னும் நின்அருள் ஈந்திலை அந்தோ
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- உண்ணு கின்றதும் உறங்குகின் றதும்மேல்
- உடுத்து கின்றதும் உலவுகின் றதும்மால்
- நண்ணு கின்றதும் நங்கையர் வாழ்க்கை
- நாடு கின்றதும் நவையுடைத் தொழில்கள்
- பண்ணு கின்றதும் ஆனபின் உடலைப்
- பாடை மேலுறப் படுத்துகின் றதும்என்
- றெண்ணு கின்றதோ றுளம்பதைக் கின்றேன்
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- கல்லை வெல்லவும் வல்லஎன் மனந்தான்
- கடவுள் நின்அடிக் கமலங்கள் நினைத்தல்
- இல்லை நல்லைநின் அருள்எனக் கதனால்
- இல்லை இல்லைநீ இரக்கம்இல் லாதான்
- அல்லை இல்லையால் அருள்தரா திருத்தல்
- அடிய னேன்அள வாயின்இங் கிடர்க்கே
- எல்லை இல்லைஎன் றுளம்பதைக் கின்றேன்
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- பொங்கு மாயையின் புணர்ப்பினுக் குள்ளம்
- போக்கி நின்றதும் புலப்பகை வர்களால்
- இங்கு மால்அரி ஏற்றின்முன் கரிபோல்
- ஏங்கு கின்றதும் இடர்ப்பெருங் கடலில்
- தங்கும் ஆசையங் கராப்பிடித் தீர்க்கத்
- தவிப்பில் நின்றதும் தமியனேன் தனையும்
- எங்கும் ஆகிநின் றாய்அறிந் திலையோ
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- அரக்கன் அல்லன்யான் அரக்கனே எனினும்
- அரக்க னுக்கும்முன் அருள்அளித் தனையே
- புரக்க என்னைநின் அருட்கடன் என்றே
- போற்று கின்றனன் புலையரிற் புலையேன்
- உரக்க இங்கிழைத் திடும்பிழை எல்லாம்
- உன்னல் ஐயநீ உன்னிஎன் அளவில்
- இரக்கம் நின்திரு உளத்திலை யானால்
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.