- பொது
- கட்டளைக் கலித்துறை
- திருச்சிற்றம்பலம்
- நீரார் சடையது நீண்மால் விடையது நேர்கொள்கொன்றைத்
- தாரார் முடியது சீரார் அடியது தாழ்வகற்றும்
- பேரா யிரத்தது பேரா வரத்தது பேருலகம
- ஒரா வளத்ததொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
- மட்டுப் படாதது மாமறை யாலும் மலப்பகையால்
- கட்டுப் படாதது மாலா தியர்தம் கருத்தினுக்கும்
- தட்டுப் படாதது பார்முதல் பூதத் தடைகளினால்
- ஒட்டுப் படாததொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
- பேதப் படாதது பற்பல கற்பங்கள் பேர்ந்திடினும்
- சேதப் படாதது நன்றிது தீதெனச் செய்கைகளால்
- ஏதப் படாததுள் எட்டப் படாததிங் கியாவர்கட்கும்
- ஓதப் படாததொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
- தண்ணார் அளியது விண்ணேர் ஒளியது சாற்றுமறைப்
- பண்ணார் முடிவது பெண்ணார் வடிவது பண்புயர்தீக்
- கண்ணார் நுதலது கண்ணார் மணியது கண்டுகொள்ள
- ஒண்ணா நிலையதொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
- பிறவா நெறியது பேசா நிலையது பேசில்என்றும்
- இறவா உருவதுள் ஏற்றால் வருவ திருள்அகன்றோர்
- மறவா துடையது மாதோர் புடையது வாழ்த்துகின்றோர்
- உறவாய் இருப்பதொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.