- தலைவி பாங்கியொடு கிளத்தல் திருவொற்றியூர்
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- சீரார் வளஞ்சேர் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிதனை
- ஊரா ருடன்சென் றெனதுநெஞ்சம் உவகை ஓங்கப் பார்த்தனன்காண்
- வாரார் முலைகண் மலைகளென வளர்ந்த வளைகள் தளர்ந்தனவால்
- ஏரார் குழலாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- சீர்த்தேன் பொழிலார் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரப்
- பார்த்தேன் கண்கள் இமைத்திலகாண் பைம்பொன் வளைகள் அமைத்திலகாண்
- தார்த்தேன் குழலும் சரிந்தனகாண் தானை இடையிற் பிரிந்தனகாண்
- ஈர்த்தேன் குழலாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- சீதப் புனல்சூழ் வயல்ஒற்றித் தியாகப் பெருமான் திருமாட
- வீதிப் பவனி வரக்கண்டேன் மென்பூந் துகில்வீழ்ந் ததுகாணேன்
- போதிற் றெனவும் உணர்ந்திலேன் பொன்ன னார்பின் போதுகிலேன்
- ஈதற் புதமே என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- தென்னார் சோலைத் திருஒற்றித் தியாகப் பெருமான் பவனிவரப்
- பொன்னார் வீதி தனிற்பார்த்தேன் புளகம் போர்த்தேன் மயல்பூத்தேன்
- மின்னார் பலர்க்கும் முன்னாக மேவி அவன்றன் எழில்வேட்டு
- என்னார் அணங்கே என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- சீலக் குணத்தோர் புகழ்ஒற்றித் தியாகப் பெருமான் பவனிஇராக்
- காலத் தடைந்து கண்டேன்என் கண்கள் இரண்டோ ஆயிரமோ
- ஞாலத் தவர்கள் அலர்தூற்ற நற்று‘ சிடையில் நழுவிவிழ
- ஏலக் குழலாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- சேயை அருளுந் திருஒற்றித் தியாகப் பெருமான் வீதிதனில்
- தூய பவனி வரக்கண்டேன் சூழ்ந்த மகளிர் தமைக்காணேன்
- தாயை மறந்தேன் அன்றியும்என் தனையும் மறந்தேன் தனிப்பட்டேன்
- ஏயென் தோழி என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- திங்கள் உலவும் பொழில்ஒற்றித் தியாகப் பெருமான் திருவீதி
- அங்கண் களிக்கப் பவனிவந்தான் அதுபோய்க் கண்டேன் தாயரெலாம்
- தங்கள் குலத்துக் கடாதென்றார் தம்மை விடுத்தேன் தனியாகி
- எங்கண் அனையாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- தேசார் மணிசூழ் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரக்
- கூசா தோடிக் கண்டரையில் கூறை இழந்தேன் கைவளைகள்
- வீசா நின்றேன் தாயரெலாம் வீட்டுக் கடங்காப் பெண்எனவே
- ஏசா நிற்க என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- தேடார்க் கரியான் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரத்
- தோடார் பணைத்தோட் பெண்களொடும் சூழ்ந்து மகிழ்ந்து கண்டதன்றி
- வாடாக் காதல் கொண்டறியேன் வளையும் துகிலும் சேர்ந்ததுடன்
- ஏடார் கோதை என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- திருமாற் கரியான் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரப்
- பெருமான் மனமு நானும்முன்னும் பின்னும் சென்று கண்டேமால்
- பொருமா நின்றேன் தாயரெலாம் போஎன் றீர்க்கப் போதுகிலேன்
- இருண்மாண் குழலாய் என்னடிநான் இச்சைமயமாய் நின்றதுவே.