- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- மன்னே என்றன் உயிர்க்குயிரே மணியே தணிகை மலைமருந்தே
- அன்னே என்னை ஆட்கொண்ட அரசே தணிகை ஐயாவே
- பொன்னே ஞானப் பொங்கொளியே புனித அருளே பூரணமே
- என்னே எளியேன் துயர்உழத்தல் எண்ணி இரங்கா திருப்பதுவே.
- இரங்கா நின்றிங் கலைதரும்இவ் வெளியேன் கனவின் இடத்தேனும்
- அரங்கா அரவின் நடித்தோனும் அயனும் காண்டற் கரிதாய
- உரங்கா முறும்மா மயில்மேல்நின் உருவம் தரிசித் துவப்படையும்
- வரங்கா தலித்தேன் தணிகைமலை வாழ்வே இன்று வருவாயோ.
- வருவாய் என்று நாள்தோறும் வழிபார்த் திரங்கி மனந்தளர்ந்தேன்
- கருவாய் பவன்என் றெனைத்தள்ளக் கருது வாயோ அன்றிஅருள்
- உருவாய் வந்து தருவாயோ தணிகா சலத்துள் உற்றமர்ந்த
- ஒருவர் உன்றன் திருவுளத்தை உணரேன் என்செய் துய்கேனே.
- உய்யும் பொருட்டுன் திருப்புகழை உரையேன் அந்தோ உரைக்கடங்காப்
- பொய்யும் களவும் அழுக்காறும் பொருளாக் கொண்டேன் புலையேனை
- எய்யும் படிவந் தடர்ந்தியமன் இழுத்துப் பறிக்கில் என்னேயான்
- செய்யும் வகைஒன் றறியேனே தென்பால் தணிகைச் செஞ்சுடரே.
- செஞ்சொல் சுவையே மெய்ஞ்ஞானச் செல்வப் பெருக்கே தெள்ளமுதே
- விஞ்சைப் புலவர் புகழ்தணிகை விளக்கே துளக்கில் வேலோனே
- வெஞ்சொல் புகலும் வஞ்சகர்பால் மேவி நின்தாள் மலர்மறந்தே
- பஞ்சில் தமியேன் படும்பாட்டைப் பார்த்தும் அருட்கண் பார்த்திலையே.
- பார்க்கின் றிலையே பன்னிருகண் படைத்தும் எளியேன் பாடனைத்தும்
- தீர்க்கின் றிலையே என்னேயான் செய்வேன் சிறியேன் சீமானே
- போர்க்குன் றொடுசூர் புயக்குன்றும் பொடிசெய் வேற்கைப் புண்ணியனே
- சீர்க்குன் றெனும்நல் வளத்தணிகைத் தேவே மயில்ஊர் சேவகனே.
- சேவற் கொடிகொள் குணக்குன்றே சிந்தா மணியே யாவர்கட்கும்
- காவற் பதியே தணிகைவளர் கரும்பே கனியே கற்பகமே
- மூவர்க் கிறையே வேய்ஈன்ற முத்தன் அளித்த முத்தேநல்
- தேவர்க் கருள்நின் சேவடிக்கே விழைந்தேன் யாதும்தெரியேனே.
- தெரியேன் உனது திருப்புகழைத் தேவே உன்றன் சேவடிக்கே
- பரியேன் பணியேன் கூத்தாடேன் பாடேன் புகழைப் பரவசமாய்த்
- தரியேன் தணிகை தனைக்காணேன் சாகேன் நோகேன் கும்பிக்கே
- உரியேன் அந்தோ எதுகொண்டிங் குய்கேன் யாதுசெய்கேனே.
- செய்வ துனது திருவடிக்காம் திறனே சிந்தை நின்பாலே
- வைவ துன்னை நினையாத வஞ்ச கரையே வழுத்திநிதம்
- உய்வ துனது திருநாமம் ஒன்றைப் பிடித்தே மற்றொன்றால்
- எய்வ தறியேன் திருத்தணிகை எந்தாய் எந்தாய் எளியேனே.
- எளியேன் நினது சேவடியாம் இன்ப நறவை எண்ணிஎண்ணி
- அளியேன் நெஞ்சம் சற்றேனும் அன்பொன் றில்லேன் அதுசிறிதும்
- ஒளியேன் எந்தாய் என்உள்ளத் தொளித்தே எவையும் உணர்கின்றாய்
- வளியே முதலாய் நின்றருளும் மணியே தணிகை வாழ்மன்னே.