- தலைவி பறவைமேல் வைத்துப் பையுளெய்தல்
- திருவொற்றியூர்
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- கண்ணன் நெடுநாள் மண்ணிடந்தும் காணக் கிடையாக் கழலுடையார்
- நண்ணும் ஒற்றி நகரார்க்கு நாராய் சென்று நவிற்றாயோ
- அண்ணல் உமது பவனிகண்ட அன்று முதலாய் இன்றளவும்
- உண்ணும் உணவோ டுறக்கமுநீத் துற்றாள் என்றிவ் வொருமொழியே.
- மன்னுங் கருணை வழிவிழியார் மதுர மொழியார் ஒற்றிநகர்த்
- துன்னும் அவர்தந் திருமுன்போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ
- மின்னுந் தேவர் திருமுடிமேல் விளங்குஞ் சடையைக் கண்டவள்தன்
- பின்னுஞ் சடையை அவிழ்த்தொன்றும் பேசாள் எம்மைப் பிரிந்தென்றே.
- வடிக்குந் தமிழ்த்தீந் தேன்என்ன வசனம் புகல்வார் ஒற்றிதனில்
- நடிக்குந் தியாகர் திருமுன்போய் நாராய் நின்று நவிற்றாயோ
- பிடிக்குங் கிடையா நடைஉடைய பெண்க ளெல்லாம் பிச்சிஎன
- நொடிக்கும் படிக்கு மிகுங்காம நோயால் வருந்தி நோவதுவே.
- மாய மொழியார்க் கறிவரியார் வண்கை உடையார் மறைமணக்கும்
- தூய மொழியார் ஒற்றியிற்போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ
- நேய மொழியாள் பந்தாடாள் நில்லாள் வாச நீராடாள்
- ஏய மொழியாள் பாலனமும் ஏலாள் உம்மை எண்ணிஎன்றே.
- ஒல்லார் புரமூன் றெரிசெய்தார் ஒற்றி அமர்ந்தார் எல்லார்க்கும்
- நல்லார் வல்லார் அவர்முன்போய் நாராய் நின்று நவிற்றுதியே
- அல்லார் குழலாள் கண்ராம் ஆற்றில் அலைந்தாள் அணங்கனையார்
- பல்லார் சூழ்ந்து பழிதூற்றப் படுத்தாள் விடுத்தாள் பாயல்என்றே.
- ஓவா நிலையார் பொற்சிலையார் ஒற்றி நகரார் உண்மைசொலும்
- தூவாய் மொழியார் அவர்முன்போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ
- பூவார் முடியாள் பூமுடியாள் போவாள் வருவாள் பொருந்துகிலாள்
- ஆவா என்பாள் மகளிரொடும் ஆடாள் தேடாள் அனம்என்றே.
- வட்ட மதிபோல் அழகொழுகும் வதன விடங்கர் ஒற்றிதனில்
- நட்ட நவில்வார் அவர்முன்போய் நாராய் நின்று நவிற்றாயோ
- கட்ட அவிழ்ந்த குழல்முடியாள் கடுகி விழுந்த கலைபுனையாள்
- முட்ட விலங்கு முலையினையும் மூடாள் மதனை முனிந்தென்றே.
- வேலை விடத்தை மிடற்றணிந்த வெண்ற் றழகர் விண்ணளவும்
- சோலை மருவும் ஒற்றியிற்போய்ச் சுகங்காள் அவர்முன் சொல்லீரோ
- மாலை மனத்தாள் கற்பகப்பூ மாலை தரினும் வாங்குகிலாள்
- காலை அறியாள் பகல்அறியாள் கங்குல் அறியாள் கனிந்தென்றே.
- மாண்காத் தளிர்க்கும் ஒற்றியினார் வான மகளிர் மங்கலப்பொன்
- நாண்காத் தளித்தார் அவர்முன்போய் நாராய் நின்று நவிற்றுதியோ
- பூண்காத் தளியாள் புலம்பிநின்றாள் புரண்டாள் அயன்மால் ஆதியராம்
- சேண்காத் தளிப்போர் தேற்றுகினும் தேறாள் மனது திறன்என்றே.
- தேசு பூத்த வடிவழகர் திருவாழ் ஒற்றித் தேவர்புலித்
- தூசு பூத்த கீளுடையார் சுகங்காள் அவர்முன் சொல்லீரோ
- மாசு பூத்த மணிபோல வருந்தா நின்றாள் மங்கையர்வாய்
- ஏசு பூத்த அலர்க்கொடியாய் இளைத்தாள் உம்மை எண்ணிஎன்றே.