- திருவொற்றியூர்
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- வெள்ளச் சடையார் விடையார்செவ் வேலார் நூலார் மேலார்தம்
- உள்ளத் துறைவார் நிறைவார்நல் ஒற்றித் தியாகப் பெருமானர்
- வள்ளற் குணத்தார் திருப்பவனி வந்தார் என்றார் அம்மொழியை
- விள்ளற் குள்ளே மனம்என்னை விட்டங் கவர்முன் சென்றதுவே.
- அந்தார் அணியும் செஞ்சடையார் அடையார் புரமூன் றவைஅனலின்
- உந்தா நின்ற வெண்ணகையார் ஒற்றித் தியாகர் பவனிஇங்கு
- வந்தார் என்றார் அந்தோநான் மகிழ்ந்து காண வருமுன்னம்
- மந்தா கினிபோல் மனம்என்னை வஞ்சித் தவர்முன் சென்றதுவே.
- பொன்னேர் சடையார் கீள்உடையார் பூவை தனைஓர் புடைஉடையார்
- தென்னேர் பொழில்சூழ் ஒற்றியூர்த் திகழுந் தியாகர் திருப்பவனி
- இன்னே வந்தார் என்றார்நான் எழுந்தேன் நான்அங் கெழுவதற்கு
- முன்னே மனம்என் தனைவிடுத்து முந்தி அவர்முன் சென்றதுவே.
- காண இனியார் என்இரண்டு கண்கள் அனையார் கடல்விடத்தை
- ஊணின் நுகர்ந்தார் உயர்ந்தார்நல் ஒற்றித் தியாகப் பெருமானார்
- மாண வீதி வருகின்றார் என்றார் காண வருமுன்நான்
- நாண எனைவிட் டென்மனந்தான் நயந்தங் கவர்முன் சென்றதுவே.
- செழுந்தெண் கடற்றெள் அமுதனையார் தியாகர் எனும்ஓர் திருப்பெயரார்
- கொழுந்தண் பொழில்சூழ் ஒற்றியினார் கோலப் பவனி என்றார்நான்
- எழுந்திங் கவிழ்ந்த கலைபுனைந்தங் கேகு முன்னர் எனைவிடுத்தே
- அழுந்து நெஞ்சம் விழுந்துகூத் தாடி அவர்முன் சென்றதுவே.
- சால மாலும் மேலும்இடந் தாலும் அறியாத் தழல்உருவார்
- சேலும் புனலும் சூழ்ஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
- பாலுந் தேனுங் கலந்ததெனப் பவனி வந்தார் என்றனர்யான்
- மேலுங் கேட்கு முன்னமனம் விட்டங் கவர்முன் சென்றதுவே.
- பின்தாழ் சடையார் தியாகர்எனப் பேசும் அருமைப் பெருமானார்
- மன்றார் நடத்தார் ஒற்றிதனில் வந்தார் பவனி என்றார்நான்
- நன்றாத் துகிலைத் திருத்துமுனம் நலஞ்சேர் கொன்றை நளிர்ப்பூவின்
- மென்தார் வாங்க மனம்என்னை விட்டங் கவர்முன் சென்றதுவே.
- கண்ணார் நுதலார் மணிகண்டர் கனக வரையாங் கனசிலையார்
- பெண்ணார் பாகர் தியாகர்எனப் பேசும் அருமைப் பெருமானார்
- தண்ணார் பொழில்சூழ் ஒற்றிதனில் சார்ந்தார் பவனி என்றனர்நான்
- நண்ணா முன்னம் என்மனந்தான் நாடி அவர்முன் சென்றதுவே.
- ஈமப் புறங்காட் டெரியாடும் எழிலார் தில்லை இனிதமர்வார்
- சேமப் புலவர் தொழும்ஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
- வாமப் பாவை யொடும்பவனி வந்தார் என்றார் அதுகாண்பான்
- காமப் பறவை போல்என்மனம் கடுகி அவர்முன் சென்றதுவே.
- சூலப்படையார் பூதங்கள் சுற்றும் படையார் துதிப்பவர்தம்
- சீலப் பதியார் திருஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
- நீலக் களத்தார் திருப்பவனி நேர்ந்தார் என்றார் அதுகாண்பான்
- சாலப் பசித்தார் போல்மனந்தான் தாவி அவர்முன் சென்றதுவே.