- திருவொற்றியூர்
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- காது நடந்த கண்மடவாள் கடிமா மனைக்குக் கால்வருந்தத்
- தூது நடந்த பெரியவர்சிற் சுகத்தா ரொற்றித் தொன்னகரார்
- வாது நடந்தான் செய்கின்றோர் மாது நடந்து வாவென்றார்
- போது நடந்த தென்றேனெப் போது நடந்த தென்றாரே.
- கச்சை யிடுவார் படவரவைக் கண்மூன் றுடையார் வாமத்திற்
- பச்சை யிடுவா ரொற்றியுள்ளார் பரிந்தென் மனையிற் பலிக்குற்றார்
- இச்சை யிடுவா ருண்டியென்றா ருண்டே னென்றே னெனக்கின்று
- பிச்சை யிடுவா யென்றார்நான் பிச்சை யடுவே னென்றேனே.
- கருதற் கரியார் கரியார்முன் காணக் கிடையாக் கழலடியார்
- மருதத் துறைவார் திருவொற்றி வாண ரின்றென் மனைக்குற்றார்
- தருதற் கென்பா லின்றுவந்தீ ரென்றே னதுநீ தானென்றார்
- வருதற் குரியீர் வாருமென்றேன் வந்தே னென்று மறைந்தாரே.
- கல்லை வளைக்கும் பெருமானார் கழிசூ ழொற்றிக் கடிநகரார்
- எல்லை வளைக்குந் தில்லையுள்ளா ரென்றன் மனைக்குப் பலிக்குற்றார்
- அல்லை வளைக்குங் குழலன்ன மன்பி னுதவா விடிலோபம்
- இல்லை வளைக்கு மென்றார்நா னில்லை வளைக்கு மென்றேனே.
- வெற்றி யிருந்த மழுப்படையார் விடையார் மேரு வில்லுடையார்
- பெற்றி யிருந்த மனத்தர்தமுட் பிறங்குந் தியாகப் பெருமானார்
- சுற்றி யிருந்த பெண்களெல்லாஞ் சொல்லி நகைக்க வருகணைந்தார்
- ஒற்றி யிருமென் றுரைத்தேனோ னொற்றி யிருந்தே னென்றாரே.
- விண்டங் கமரர் துயர்தவிர்க்கும் வேற்கை மகனை விரும்பிநின்றோர்
- வண்டங் கிசைக்கும் பொழிலொற்றி வதிவா ரென்றன் மனையடைந்தார்
- தண்டங் கழற்கு நிகரானீர் தண்டங் கழற்கென் றேன்மொழியாற்
- கண்டங் கறுத்தா யென்றார்நீர் கண்டங் கறுத்தீ ரென்றேனே.
- விற்கண் டாத நுதன்மடவாள் வேட்ட நடன வித்தகனார்
- சொற்கண் டாத புகழொற்றித் தூய ரின்றென் மனைபுகுந்தார்
- நிற்கண் டார்கண் மயலடைவா ரென்றார் நீர்தா நிகழ்த்தியசொற்
- கற்கண் டாமென் றுரைத்தேனான் கற்கண் டாமென் றுரைத்தாரே.
- விடையார் கொடிமே லுயர்த்தருளும் வேத கீதப் பெருமானார்
- உடையா ரொற்றி யூரமர்ந்தா ருவந்தென் மனையி லின்றடைந்தார்
- இடையா வைய மென்றார்நா னிடைதா னைய மென்றேனாற்
- கடையா ரளியா ரென்றார்கட் கடையா ரளியா ரென்றேனே.
- நாடொன் றியசீர்த் திருவொற்றி நகரத் தமர்ந்த நாயகனார்
- ஈடொன் றில்லா ரென்மனையுற் றிருந்தார் பூவுண் டெழில்கொண்ட
- மாடொன் றெங்கே யென்றேனுன் மனத்தி லென்றார் மகிழ்ந்தமர்வெண்
- காடொன் றுடையீ ரென்றேன்செங் காடொன் றுடையே னென்றாரே.
- சொல்லா லியன்ற தொடைபுனைவார் தூயா ரொற்றித் தொன்னகரார்
- அல்லா லியன்ற மனத்தார்பா லணுகா ரென்றென் மனைபுகுந்தார்
- வல்லா லியன்ற முலையென்றார் வல்லார் நீரென் றேனுன்சொற்
- கல்லா லியன்ற தென்றார்முன் கல்லா லியன்ற தென்றேனே.