- திருவொற்றியூர்
 - அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
 - திருச்சிற்றம்பலம்
 - தில்லை வளத்தார் அம்பலத்தார் திருவேட் களத்தார் செவ்வணத்தார்
 - கல்லை வளைத்தார் என்றன்மனக் கல்லைக் குழைத்தார் கங்கணத்தால்
 - எல்லை வளைத்தார் தியாகர்தமை எழிலார் ஒற்றி எனும்நகரில்
 - ஒல்லை வளைத்துக் கண்டேன்நான் ஒன்றும் உரையா திருந்தாரே.
 - இருந்தார் திருவா ரூரகத்தில் எண்ணாக் கொடியார் இதயத்தில்
 - பொருந்தார் கொன்றைப் பொலன்பூந்தார் புனைந்தார் தம்மைப் புகழ்ந்தார்கண்
 - விருந்தார் திருந்தார் புரமுன்தீ விளைத்தார் ஒற்றி நகர்கிளைத்தார்
 - தருந்தார் காம மருந்தார்இத் தரணி இடத்தே தருவாரே.
 - தருவார் தருவார் செல்வமுதல் தருவார் ஒற்றித் தலம்அமர்வார்
 - மருவார் தமது மனமருவார் மருவார் கொன்றை மலர்புனைவார்
 - திருவார் புயனும் மலரோனும் தேடும் தியாகப் பெருமானார்
 - வருவார் வருவார் எனநின்று வழிபார்த் திருந்தேன் வந்திலரே.
 - வந்தார் அல்லர் மாதேநீ வருந்தேல் என்று மார்பிலங்கும்
 - தந்தார் அல்லல் தவிர்ந்தோங்கத் தந்தார் அல்லர் தயை உடையார்
 - சந்தார் சோலை வளர்ஒற்றித் தலத்தார் தியாகப் பெருமானார்
 - பந்தார் முலையார்க் கவர்கொடுக்கும் பரிசே தொன்றும் பார்த்திலமே.
 - இலமே செறித்தார் தாயர்இனி என்செய் குவதென் றிருந்தேற்கு
 - நலமே தருவார் போல்வந்தென் நலமே கொண்டு நழுவினர்காண்
 - உலமே அனைய திருத்தோளார் ஒற்றித் தியாகப் பெருமானார்
 - வலமே வலம்என்அ வலம்அவலம் மாதே இனிஎன் வழுத்துவதே.
 - வழுத்தார் புரத்தை எரித்தார்நல் வலத்தார் நடன மலரடியார்
 - செழுத்தார் மார்பர் திருஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
 - கழுத்தார் விடத்தார் தமதழகைக் கண்டு கனிந்து பெருங்காமம்
 - பழுத்தார் தம்மைக் கலந்திடநற் பதத்தார் என்றும் பார்த்திலரே.
 - பாரா திருந்தார் தமதுமுகம் பார்த்து வருந்தும் பாவைதனைச்
 - சேரா திருந்தார் திருஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
 - வாரா திருந்தார் இன்னும்இவள் வருத்தங் கேட்டும் மாலைதனைத்
 - தாரா திருந்தார் சலமகளைத் தாழ்ந்த சடையில் தரித்தாரே.
 - சடையில் தரித்தார் ஒருத்திதனைத் தழுவி மகிழ்மற் றொருபெண்ணைப்
 - புடையில் தரித்தார் மகளேநீ போனால் எங்கே தரிப்பாரோ
 - கடையில் தரித்த விடம்அதனைக் களத்தில் தரித்தார் கரித்தோலை
 - இடையில் தரித்தார் ஒற்றியூர் இருந்தார் இருந்தார் என்னுளத்தே.
 - உளத்தே இருந்தார் திருஒற்றி யூரில் இருந்தார் உவர்விடத்தைக்
 - களத்தே வதிந்தார் அவர்என்றன் கண்ணுள் வதிந்தார் கடல்அமுதாம்
 - இளத்தே மொழியாய் ஆதலினால் இமையேன் இமைத்தல் இயல்பன்றே
 - வளத்தே மனத்தும் புகுகின்றார் வருந்தேன் சற்றும் வருந்தேனே.
 - வருந்தேன் மகளீர் எனைஒவ்வார் வளஞ்சேர் ஒற்றி மன்னவனார்
 - தருந்தேன் அமுதம் உண்டென்றும் சலிய வாழ்வில் தருக்கிமகிழ்ந்
 - திருந்தேன் மணாளர் எனைப்பிரியார் என்றும் புணர்ச்சிக் கேதுவிதாம்
 - மருந்தேன் மையற் பெருநோயை மறந்தேன் அவரை மறந்திலனே.