- திருவொற்றியூர்
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- நந்தி மகிழ்வாய்த் தரிசிக்க நடனம் புரியும் நாயகனார்
- அந்தி நிறத்தார் திருஒற்றி அமர்ந்தார் என்னை அணைவாரோ
- புந்தி இலள்என் றணையாரோ யாதுந் தெரியேன் புலம்புகின்றேன்
- சிந்தை மகிழக் குறமடவாய் தெரிந்தோர் குறிதான் செப்புவையே.
- தரும விடையார் சங்கரனார் தகைசேர் ஒற்றித் தனிநகரார்
- ஒருமை அளிப்பார் தியாகர்எனை உடையார் இன்று வருவாரோ
- மருவ நாளை வருவாரோ வாரா தென்னை மறப்பாரோ
- கருமம் அறிந்த குறமடவாய் கணித்தோர் குறிதான் கண்டுரையே.
- ஆழி விடையார் அருளுடையார் அளவிட் டறியா அழகுடையார்
- ஊழி வரினும் அழியாத ஒற்றித் தலம்வாழ் உத்தமனார்
- வாழி என்பால் வருவாரோ வறியேன் வருந்த வாராரோ
- தோழி அனைய குறமடவாய் துணிந்தோர் குறிநீ சொல்லுவையே.
- அணியார் அடியார்க் கயன்முதலாம் அமரர்க் கெல்லாம் அரியர்என்பாம்
- பணியார் ஒற்றிப் பதிஉடையார் பரிந்தென் முகந்தான் பார்ப்பாரோ
- தணியாக் காதல் தவிர்ப்பாரோ சார்ந்து வரவு தாழ்ப்பாரோ
- குணியா எழில்சேர் குறமடவாய் குறிதான் ஒன்றும் கூறுவையே.
- பொன்னார் புயத்துப் போர்விடையார் புல்லர் மனத்துட் போகாதார்
- ஒன்னார் புரந்தீ உறநகைத்தார் ஒற்றி எனும்ஓர் ஊர்அமர்ந்தார்
- என்னா யகனார் எனைமருவல் இன்றோ நாளை யோஅறியேன்
- மின்னார் மருங்குல் குறமடவாய் விரைந்தோர் குறிநீ விளம்புவையே.
- பாலிற் றெளிந்த திருநீற்றர் பாவ நாசர் பண்டரங்கர்
- ஆலிற் றெளிய நால்வர்களுக் கருளுந் தெருளர் ஒற்றியினார்
- மாலிற் றெளியா நெஞ்சகத்தேன் மருவிக் கலக்க வருவாரோ
- சேலிற் றெளிகட் குறப்பாவாய் தெரிந்தோர் குறிநீ செப்புகவே.
- நிருத்தம் பயின்றார் நித்தியனார் நேச மனத்தர் நீலகண்டர்
- ஒருத்தர் திருவாழ் ஒற்றியினார் உம்பர் அறியா என்கணவர்
- பொருத்தம் அறிந்தே புணர்வாரோ பொருத்தம் பாரா தணைவாரோ
- வருத்தந் தவிரக் குறப்பாவாய் மகிழ்ந்தோர் குறிதான் வழுத்துவையே.
- கமலன் திருமால் ஆதியர்கள் கனவி னிடத்துங் காண்பரியார்
- விமலர் திருவாழ் ஒற்றியிடை மேவும் பெருமை வித்தகனார்
- அமலர் அவர்தாம் என்மனைக்கின் றணைகு வாரோ அணையாரோ
- தமல மகன்ற குறப்பாவாய் தனித்தோர் குறிதான் சாற்றுவையே.
- வன்னி இதழி மலர்ச்சடையார் வன்னி எனஓர் வடிவுடையார்
- உன்னி உருகும் அவர்க்கெளியார் ஒற்றி நகர்வாழ் உத்தமனார்
- கன்னி அழித்தார் தமைநானுங் கலப்பேன் கொல்லோ கலவேனோ
- துன்னி மலைவாழ் குறமடவாய் துணிந்தோர் குறிநீ சொல்லுவையே.
- கற்றைச் சடைமேல் கங்கைதனைக் கலந்தார் கொன்றைக் கண்ணியினார்
- பொற்றைப் பெருவிற் படைஉடையார் பொழில்சூழ் ஒற்றிப் புண்ணியனார்
- இற்றைக் கடியேன் பள்ளியறைக் கெய்து வாரோ எய்தாரோ
- சுற்றுங் கருங்கட் குறமடவாய் சூழ்ந்தோர் குறிநீ சொல்லுவையே.
- அரவக் கழலார் கருங்களத்தார் அஞ்சைக் களத்தார் அரிபிரமர்
- பரவப் படுவார் திருஒற்றிப் பதியில் அமர்ந்தார் பாசுபதர்
- இரவு வருமுன் வருவாரோ என்னை அணைதற் கிசைவாரோ
- குரவ மணக்குங் குறமடவாய் குறிநீ ஒன்று கூறுவையே.