- தலைவி இரங்கல்
- திருவொற்றியூர்
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- பூணா அணிபூண் புயமுடையார் பொன்னம் பலத்தார் பொங்குவிடம்
- ஊணா உவந்தார் திருஒற்றி யூர்வாழ் வுடையார் உண்மைசொலி
- நீணால் இருந்தார் அவர்இங்கே நின்றார் மீட்டும் நின்றிடவே
- காணா தயர்ந்தேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- ஓட்டில் இரந்துண் டொற்றியிடை உற்றார் உலகத் துயிரைஎலாம்
- ஆட்டி நடிப்பார் ஆலயத்தின் அருகே எளிய ளாம்எனவே
- ஏட்டில் அடங்காக் கையறவால் இருந்தேன் இருந்த என்முன்உருக்
- காட்டி மறைத்தார் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- ஈதல் ஒழியா வண்கையினார் எல்லாம் வல்ல சித்தர்அவர்
- ஓதல் ஒழியா ஒற்றியில்என் உள்ளம் உவக்க உலகம்எலாம்
- ஆதல் ஒழியா எழில்உருக்கொண் டடைந்தார் கண்டேன் உடன்காணேன்
- காதல் ஒழியா தென்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- தொண்டு புரிவோர் தங்களுக்கோர் துணைவர் ஆவார் சூழ்ந்துவரி
- வண்டு புரியுங் கொன்றைமலர் மாலை அழகர் வல்விடத்தை
- உண்டு புரியுங் கருணையினார் ஒற்றி யூரர் ஒண்பதத்தைக்
- கண்டுங் காணேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- அடியர் வருந்த உடன்வருந்தும் ஆண்டை அவர்தாம் அன்றயனும்
- நெடிய மாலுங் காணாத நிமல உருவோ டென்எதிரே
- வடியல் அறியா அருள்காட்டி மறைத்தார் மருண்டேன் மங்கைநல்லார்
- கடிய அயர்ந்தேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- கொற்றம் உடையார் திருஒற்றிக் கோயில்உடையார் என்எதிரே
- பொற்றை மணித்தோட் புயங்காட்டிப் போனார் என்னைப் புலம்பவைத்துக்
- குற்றம் அறியேன் மனநடுக்கங் கொண்டேன் உடலங் குழைகின்றேன்
- கற்றிண் முலையாய் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- ஆல நிழற்கீழ் அன்றமர்ந்தார் ஆதி நடுவீ றாகிநின்றார்
- நீல மிடற்றார் திருஒற்றி நியமத் தெதிரே நீற்றுருவக்
- கோல நிகழக் கண்டேன்பின் குறிக்கக் காணேன் கூட்டுவிக்கும்
- காலம் அறியேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- சலங்கா தலிக்கும் தாழ்சடையார் தாமே தமக்குத் தாதையனார்
- நிலங்கா தலிக்கும் திருஒற்றி நியமத் தெதிரே நின்றனர்காண்
- விலங்கா தவரைத் தரிசித்தேன் மீட்டுங் காணேன் மெய்மறந்தேன்
- கலங்கா நின்றேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- நிரந்தார் கங்கை நீள்சடையார் நெற்றி விழியார் நித்தியனார்
- சிரந்தார் ஆகப் புயத்தணிவார் திருவாழ் ஒற்றித் தியாகர்அவர்
- பரந்தார் கோயிற் கெதிர்நிற்கப் பார்த்தேன் மீட்டும் பார்ப்பதன்முன்
- கரந்தார் கலுழ்ந்தேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- அளித்தார் உலகை அம்பலத்தில் ஆடி வினையால் ஆட்டிநின்றார்
- தளித்தார் சோலை ஒற்றியிடைத் தமது வடிவம் காட்டியுடன்
- ஒளித்தார் நானும் மனம்மயங்கி உழலா நின்றேன் ஒண்தொடிக்கைக்
- களித்தார் குழலாய் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.