- தலைவி வியத்தல்
- திருவொற்றியூர்
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- பொன்னென் றொளிரும் புரிசடையார் புனைநூல் இடையார் புடைஉடையார்
- மன்னென் றுலகம் புகழ்ஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- மின்னென் றிலங்கு மாதரெலாம் வேட்கை அடைய விளங்கிநின்ற(து)
- இன்னென் றறியேன் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- அள்ளிக் கொடுக்கும் கருணையினார் அணிசேர் ஒற்றி ஆலயத்தார்
- வள்ளிக் குவந்தோன் தனைஈன்ற வள்ளல் பவனி வரக்கண்டேன்
- துள்ளிக் குதித்தென் மனம்அவரைச் சூழ்ந்த தின்னும் வந்ததிலை
- எள்ளிக் கணியா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- அனத்துப் படிவம் கொண்டயனும் அளவா முடியார் வடியாத
- வனத்துச் சடையார் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- மனத்துக் கடங்கா தாகில்அதை வாய்கொண் டுரைக்க வசமாமோ
- இனத்துக் குவப்பாம் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- கொழுதி அளிதேன் உழுதுண்ணும் கொன்றைச் சடையார் கூடலுடை
- வழுதி மருகர் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- பழுதில் அவனாந் திருமாலும் படைக்குங் கமலப் பண்ணவனும்
- எழுதி முடியா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- புன்னை இதழிப் பொலிசடையார் போக யோகம் புரிந்துடையார்
- மன்னும் விடையார் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- உன்னும் உடலம் குளிர்ந்தோங்க உவகை பெருக உற்றுநின்ற
- என்னை விழுங்கும் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- சொல்லுள் நிறைந்த பொருளானார் துய்யர் உளத்தே துன்னிநின்றார்
- மல்லல் வயற்சூழ் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- கல்லும் மரமும் ஆனந்தக் கண்ர் கொண்டு கண்டதெனில்
- எல்லை யில்லா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- நீர்க்கும் மதிக்கும் நிலையாக நீண்ட சடையார் நின்றுநறா
- ஆர்க்கும் பொழில்சூழ் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- பார்க்கும் அரிக்கும் பங்கயற்கும் பன்மா தவர்க்கும் பண்ணவர்க்கும்
- யார்க்கும் அடங்கா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- கலக அமணக் கைதவரைக் கழுவி லேற்றுங் கழுமலத்தோன்
- வலகை குவித்துப் பாடும்ஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- உலக நிகழ்வைக் காணேன்என் உள்ளம் ஒன்றே அறியுமடி
- இலகும் அவர்தந் திருஅழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- கண்ணன் அறியாக் கழற்பதத்தார் கண்ணார் நெற்றிக் கடவுள்அருள்
- வண்ணம் உடையார் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- நண்ண இமையார் எனஇமையா நாட்டம் அடைந்து நின்றனடி
- எண்ண முடியா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- மாழை மணித்தோள் எட்டுடையார் மழுமான் ஏந்தும் மலர்க்கரத்தார்
- வாழை வளஞ்சூழ் ஒற்றியூர் வாணர் பவனி வரக்கண்டேன்
- யாழை மலைக்கும் மொழிமடவார் யாரும் மயங்கிக் கலைஅவிழ்ந்தார்
- ஏழை யேன்நான் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.