- தோழியொடு கூறல்
- திருவொற்றியூர்
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- ஓணம் உடையான் தொழுதேத்தும் ஒற்றி நகர்வாழ் உத்தமர்பால்
- மாண வலியச் சென்றென்னை மருவி அணைவீர் என்றேநான்
- நாணம் விடுத்து நவின்றாலும் நாமார் நீயார் என்பாரேல்
- ஏண விழியாய் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
- காதம் மணக்குங் கடிமலர்ப்பூங் காவார் ஒற்றிக் கண்நுதலார்
- போதம் மணக்கும் புனிதர்அவர் பொன்னம் புயத்தைப் புணரேனேல்
- சீதம் மணக்குங் குழலாய்என் சிந்தை மயங்கித் தியங்குமடி
- ஏதம் மணக்கும் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
- பண்ணார் மொழியார் உருக்காட்டும் பணைசூழ் ஒற்றிப் பதியினர்என்
- கண்ணார் மணிபோன் றென்உயிரில் கலந்து வாழும் கள்வர்அவர்
- நண்ணார் இன்னும் திருஅனையாய் நான்சென் றிடினும் நலம்அருள
- எண்ணார் ஆயின் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
- ஊர்என் றுடையீர் ஒற்றிதனை உலக முடையீர் என்னைஅணை
- வீர்என் றவர்முன் பலர்அறிய வெட்கம் விடுத்துக் கேட்டாலும்
- சேர்என் றுரைத்தால் அன்றிஅவர் சிரித்துத் திருவாய் மலர்ந்தெனைநீ
- யார்என் றுரைத்தால் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
- சோமன் நிலவுந் தூய்ச்சடையார் சொல்லிற் கலந்த சுவையானார்
- சேமம் நிலவுந் திருஒற்றித் தேவர் இன்னும் சேர்ந்திலர்நான்
- தாமம் அருள்வீர் என்கினும்இத் தருணத் திசையா தென்பாரேல்
- ஏம முலையாய் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
- வில்லை மலையாய்க் கைக்கொண்டார் விடஞ்சூழ் கண்டர் விரிபொழில்சூழ்
- தில்லை நகரார் ஒற்றியுளார் சேர்ந்தார் அல்லர் நான்அவர்பால்
- ஒல்லை அடைந்து நின்றாலும் உன்னை அணைதல் ஒருபோதும்
- இல்லை எனிலோ என்செய்கேன் என்னை மடவார் இகழாரோ.
- திருந்தால் அமர்ந்தார் திருப்புலியூர்ச் சிற்றம் பலத்தில் திருநடம்செய்
- மருந்தார் ஒற்றி வாணர்இன்னும் வந்தார் அல்லர் நான்போய்என்
- அருந்தாழ் வகல அருள்வீரென் றாலும் ஒன்றும் அறியார்போல்
- இருந்தால் அம்மா என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
- அசையா தமர்ந்தும் அண்டமெலாம் அசையப் புலியூர் அம்பலத்தே
- நசையா நடிக்கும் நாதர்ஒற்றி நாட்டார் இன்னும் நண்ணிலர்நான்
- இசையால் சென்றிங் கென்னைஅணை வீர்என் றுரைப்பேன் எனில்அதற்கும்
- இசையார் ஆகில் என்செய்கேன் என்னை மடவார் இகழாரோ.
- மாற்கா தலிக்கும் மலர்அடியார் மாசற் றிலங்கும் மணிஅனையார்
- சேற்கா தலிக்கும் வயல்வளஞ்சூழ் திருவாழ் ஒற்றித் தேவர்அவர்
- பாற்கா தலித்துச் சென்றாலும் பாவி அடிநீ யான்அணைதற்
- கேற்காய் என்றால் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
- மாழை மலையைச் சிலையாக வளைத்தார் அன்பர் தமைவருத்தும்
- ஊழை அழிப்பார் திருஒற்றி ஊரார் இன்னும் உற்றிலர்என்
- பாழை அகற்ற நான்செலினும் பாரா திருந்தால் பைங்கொடியே
- ஏழை அடிநான் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.