- கலைமகள் வாழ்த்து
- நேரிசை வெண்பா
- திருச்சிற்றம்பலம்
- அன்பர்பால் நீங்காஎன் அம்மையே தாமரைமேற்
- பொன்பொருவு மேனி அயன்பூவின்-மன்பெரிய
- வாக்கிறைவி நின்தாள் மலர்ச்சரணம் போந்தேனைக்
- காக்கக் கடனுனக்கே காண்.
- காப்பு
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- ஒருமா முகனை யொருமாவை யூர்வா கனமா யுறநோக்கித்
- திருமான் முதலோர் சிறுமையெலாந் தீர்த்தெம் மிருகண் மணியாகிக்
- கருமா லகற்றுங் கணபதியாங் கடவு ளடியுங் களித்தவர்பின்
- வருமா கருணைக் கடற்குமர வள்ள லடியும் வணங்குவாம்.
- பாடாண் திணை
- கடவுண்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்
- (வினா உத்தரம்)
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- திருவார் கமலத் தடம்பணைசூழ் செல்வப் பெருஞ்சீ ரொற்றியில்வாழ்
- மருவார் கொன்றைச் சடைமுடிகொள் வள்ள லிவர்க்குப் பலிகொடுநா
- னொருவா தடைந்தே னினிநமக்கிங் குதவ வருந்தோ றுன்முலைமே
- லிருவா ரிடுநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தண்ணார் மலரை மதிநதியைத் தாங்குஞ் சடையா ரிவர்தமைநா
- னண்ணா லொற்றி யிருந்தவரே யைய ரேநீர் யாரென்றே
- னண்ணா ரிடத்து மம்பலத்து நடவா தவர்நா மென்றுசொலி
- யெண்ணா தருகே வருகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பிட்டி னதிமண் சுமந்தவொற்றிப் பிச்சைத் தேவ ரிவர்தமைநான்
- றட்டின் மலர்க்கை யிடத்தெதுவோ தனத்தைப் பிடியு மென்றுரைத்தேன்
- மட்டி னொருமூன் றுடனேழு மத்தர் தலையீ தென்றுசொலி
- யெட்டி முலையைப் பிடிக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மடையிற் கயல்பா யொற்றிநகர் வள்ள லாகு மிவர்தமைநா
- னடையிற் கனிவாற் பணியென்றே யருளீ ருரியீ ருடையென்றேன்
- கடையிற் படுமோர் பணியென்றே கருதி யுரைத்தே மென்றுரைத்தென்
- னிடையிற் கலையை யுரிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மன்றன் மணக்கு மொற்றிநகர் வாண ராகு மிவர்தமைநா
- னின்றன் பொடுங்கை யேந்தனத்தை யேற்றோர் கலத்திற் கொளுமென்றே
- னன்றன் புடையா யெண்கலத்தி னாங்கொண் டிடுவே மென்றுசொலி
- யென்றன் முலையைத் தொடுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கோமாற் கருளுந் திருவொற்றிக் கோயி லுடையா ரிவரைமத
- மாமாற் றியநீ ரேகலவி மகிழ்ந்தின் றடியேன் மனையினிடைத்
- தாமாற் றிடக்கொண் டேகுமென்றேன் றாவென் றார்தந் தாலென்னை
- யேமாற் றினையே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அம்மா லயனுங் காண்பரியீர்க் கமரும் பதிதான் யாதென்றே
- னிம்மா லுடையா யொற்றுதற்கோ ரெச்ச மதுகண் டறியென்றார்
- செம்மா லிஃதொன் றென்னென்றேன் றிருவே புரிமேற் சேர்கின்ற
- வெம்மான் மற்றொன் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கண்கள் களிப்ப வீண்டுநிற்குங் கள்வ ரிவரூ ரொற்றியதாம்
- பண்க ளியன்ற திருவாயாற் பலிதா வென்றார் கொடுவந்தேன்
- பெண்க டரலீ தன்றென்றார் பேசப் பலியா தென்றேனின்
- னெண்கண் பலித்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஆரா மகிழ்வு தருமொருபே ரழக ரிவரூ ரொற்றியதா
- நேராய் விருந்துண் டோவென்றார் நீர்தான் வேறிங் கிலையென்றேன்
- வாரார் முலையாய் வாயமுது மலர்க்கை யமுது மனையமுது
- மேரா யுளவே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அடுத்தார்க் கருளு மொற்றிநக ரைய ரிவர்தா மிகத்தாகங்
- கடுத்தா மென்றார் கடிதடநீர் கண்டீ ரையங் கொளுமென்றேன்
- கொடுத்தாய் கண்ட திலையையங் கொள்ளு மிடஞ்சூழ்ந் திடுங்கலையை
- யெடுத்தாற் காண்பே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- இந்தா ரிதழி யிலங்குசடை யேந்த லிவரூ ரொற்றியதாம்
- வந்தார் பெண்ணே யமுதென்றார் வரையின் சுதையிங் குண்டென்றே
- னந்தார் குழலாய் பசிக்கினும்பெண் ணாசை விடுமோ வமுதின்றே
- லெந்தா ரந்தா வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தன்னந் தனியா யிங்குநிற்குஞ் சாமி யிவரூ ரொற்றியதா
- மன்னந் தருவீ ரென்றார்நா னழைத்தே னின்னை யன்னமிட
- முன்னம் பசிபோ யிற்றென்றார் முன்னின் றகன்றே னிவ்வன்ன
- மின்னந் தருவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மாறா வழகோ டிங்குநிற்கும் வள்ள லிவரூ ரொற்றியதாம்
- வீறா முணவீ யென்றார்நீர் மேவா வுணவிங் குண்டென்றேன்
- கூறா மகிழ்வே கொடுவென்றார் கொடுத்தா லிதுதா னன்றென்றே
- யேறா வழக்குத் தொடுக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வண்மை யுடையார் திருவொற்றி வாண ரிவர்தாம் பலியென்றா
- ருண்மை யறிவீர் பலியெண்மை யுணர்கி லீரென் னுழையென்றேன்
- பெண்மை சிறந்தாய் நின்மனையிற் பேசும் பலிக்கென் றடைந்ததுநா
- மெண்மை யுணர்ந்தே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- திருவை யளிக்குந் திருவொற்றித் தேவ ரீர்க்கென் விழைவென்றேன்
- வெருவ லுனது பெயரிடையோர் மெய்நீக் கியநின் முகமென்றார்
- தருவ லதனை வெளிப்படையாற் சாற்று மென்றேன் சாற்றுவனே
- லிருவை மடவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- முந்தை மறையோன் புகழொற்றி முதல்வ ரிவர்தம் முகநோக்கிக்
- கந்தை யுடையீ ரென்னென்றேன் கழியா வுன்றன் மொழியாலே
- யிந்து முகத்தா யெமக்கொன்றே யிருநான் குனக்குக் கந்தையுள
- திந்த வியப்பென் னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- துன்ன லுடையா ரிவர்தமைநீர் துன்னும் பதிதான் யாதென்றே
- னென்ன லிரவி லெமைத்தெளிவா னின்ற நினது பெயரென்றா
- ருன்ன லுறுவீர் வெளிப்படவீ துரைப்பீ ரென்றே னுரைப்பேனே
- லின்ன லடைவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- சிமைக்கொள் சூலத் திருமலர்க்கைத் தேவர் நீரெங் கிருந்ததென்றே
- னெமைக்கண் டளவின் மாதேநீ யிருந்த தெனயா மிருந்ததென்றா
- ரமைக்கு மொழியிங் கிதமென்றே னாமுன் மொழியிங் கிதமன்றோ
- விமைக்கு மிழையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நடங்கொள் பதத்தீர் திருவொற்றி நங்கள் பெருமா னீரன்றோ
- திடங்கொள் புகழ்க்கச் சூரிடஞ்சேர்ந் தீரென் றேனின் னடுநோக்காக்
- குடஞ்சேர்ந் ததுமாங் கஃதென்றார் குடம்யா தென்றே னஃதறிதற்
- கிடங்கர் நடுநீக் கென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- சங்க மருவு மொற்றியுளீர் சடைமே லிருந்த தென்னென்றேன்
- மங்கை நினது முன்பருவ மருவு முதனீத் திருந்ததென்றார்
- கங்கை யிருந்த தேயென்றேன் கமலை யனையாய் கழுக்கடையு
- மெங்கை யிருந்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- துதிசே ரொற்றி வளர்தரும துரையே நீர்முன் னாடலுறும்
- பதியா தென்றே னம்பெயர்முற் பகரீ ரெழுத்தைப் பறித்ததென்றார்
- நிதிசேர்ந் திடுமப் பெயர்யாது நிகழ்த்து மென்றே னீயிட்ட
- தெதுவோ வதுகா ணென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உடற்கச் சுயிரா மொற்றியுளீ ருமது திருப்பேர் யாதென்றேன்
- குடக்குச் சிவந்த பொழுதினைமுன் கொண்ட வண்ண ராமென்றார்
- விடைக்குக் கருத்தா வாநீர்தாம் விளம்பன் மிகக்கற் றவரென்றே
- னிடக்குப் புகன்றா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மணங்கே தகைவான் செயுமொற்றி வள்ளலிவரை வல்விரைவேன்
- பிணங்கேஞ் சிறிது நில்லுமென்றேன் பிணங்கா விடினு நென்னலென
- வணங்கே நினக்கொன் றினிற்பாதி யதிலோர் பாதி யாகுமிதற்
- கிணங்கேஞ் சிறிது மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒற்றி நகரா ரிவர்தமைநீ ருவந்தே றுவதிங்கி யாதென்றேன்
- மற்றுன் பருவத் தொருபங்கே மடவா யென்றார் மறைவிடையீ
- திற்றென் றறிதற் கரிதென்றே னெம்மை யறிவா ரன்றியஃ
- தெற்றென் றறிவா ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கண்ணின் மணிபோ லிங்குநிற்குங் கள்வ ரிவரூ ரொற்றியதாம்
- பண்ணின் மொழியாய் நின்பாலோர் பறவைப் பெயர்வேண் டினம்படைத்தான்
- மண்ணின் மிசையோர் பறவையதா வாழ்வாயென்றா ரென்னென்றே
- னெண்ணி யறிநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- சேடார் வளஞ்சூ ழொற்றிநகர் செல்வப் பெருமா னிவர்தமைநா
- னோடார் கரத்தீ ரெண்டோள்க ளுடையீ ரென்னென் றுரைத்தேனீ
- கோடா கோடி முகநூறு கோடா கோடிக் களமென்னே
- யீடா யுடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- துருமஞ் செழிக்கும் பொழிலொற்றித் தோன்றா லிங்கு நீர்வந்த
- கருமஞ் சொலுமென் றேனிவண்யாங் கடாதற் குன்பா லெம்முடைமைத்
- தருமம் பெறக்கண் டாமென்றார் தருவ லிருந்தா லென்றேனில்
- லிருமந் தரமோ வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒருகை முகத்தோர்க் கையரெனு மொற்றித் தேவ ரிவர்தமைநான்
- வருகை யுவந்தீ ரென்றனைநீர் மருவி யணைதல் வேண்டுமென்றேன்
- றருகை யுடனே யகங்காரந் தனையெம் மடியார் தமைமயக்கை
- யிருகை வளைசிந் தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- திருத்த மிகுஞ்சீ ரொற்றியில்வாழ் தேவ ரேயிங் கெதுவேண்டி
- வருத்த மலர்க்கா லுறநடந்து வந்தீ ரென்றேன் மாதேநீ
- யருத்தந் தெளிந்தே நிருவாண மாகவுன்ற னகத்தருட்க
- ணிருத்த வடைந்தே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வளஞ்சே ரொற்றி மாணிக்க வண்ண ராகு மிவர்தமைநான்
- குளஞ்சேர்ந் திருந்த துமக்கொருகண் கோலச் சடையீ ரழகிதென்றேன்
- களஞ்சேர் குளத்தி னெழின்முலைக்கண் காண வோரைந் துனக்கழகீ
- திளஞ்சேல் விழியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பலஞ்சே ரொற்றிப் பதியுடையீர் பதிவே றுண்டோ நுமக்கென்றே
- னுலஞ்சேர் வெண்பொன் மலையென்றா ருண்டோ நீண்டமலையென்றேன்
- வலஞ்சே ரிடைத்தவ் வருவித்த மலைகா ணதனின் மம்முதல்சென்
- றிலஞ்சேர்ந் ததுவு மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வயலா ரொற்றி வாணரிவர் வந்தார் நின்றார் வாய்திறவார்
- செயலார் விரல்கண் முடக்கியடி சேர்த்தீ ரிதழ்கள் விரிவித்தார்
- மயலா ருளத்தோ டென்னென்றேன் மறித்தோர் விரலா லென்னுடைய
- வியலார் வடிவிற் சுட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பேர்வா ழொற்றி வாணரிவர் பேசா மௌன யோகியராய்ச்
- சீர்வாழ் நமது மனையினிடைச் சேர்ந்தார் விழைவென் செப்புமென்றே
- னோர்வா ழடியுங் குழலணியு மொருநல் விரலாற் சுட்டியுந்தம்
- மேர்வா ழொருகை பார்க்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பெருஞ்சீ ரொற்றி வாணரிவர் பேசா மௌனம் பிடித்திங்கே
- விரிஞ்சீர் தரநின் றுடன்கீழு மேலு நோக்கி விரைந்தார்யான்
- வருஞ்சீ ருடையீர் மணிவார்த்தை வகுக்க வென்றேன் மார்பிடைக்கா
- ழிருஞ்சீர் மணியைக் காட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வலந்தங் கியசீ ரொற்றிநகர் வள்ள லிவர்தாம் மௌனமொடு
- கலந்திங் கிருந்த வண்டசத்தைக் காட்டி மூன்று விரனீட்டி
- நலந்தங் குறப்பின் னடுமுடக்கி நண்ணு மிந்த நகத்தொடுவா
- யிலந்தங் கரத்தாற் குறிக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தேனார் பொழிலா ரொற்றியில்வாழ் தேவ ரிவர்வாய் திறவாராய்
- மானார் கரத்தோர் நகந்தெரித்து வாளா நின்றார் நீளார்வந்
- தானா ருளத்தோ டியாதென்றேன் றங்கைத் தலத்திற் றலையையடி
- யேனா டுறவே காட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- செச்சை யழகர் திருவொற்றித் தேவ ரிவர்வாய் திறவாராய்
- மெச்சு மொருகாற் கரந்தொட்டு மீண்டு மிடற்றக் கரம்வைத்தார்
- பிச்ச ரடிகேள் வேண்டுவது பேசீ ரென்றேன் றமைக்காட்டி
- யிச்சை யெனையுங் குறிக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மன்றார் நிலையார் திருவொற்றி வாண ரிவர்தா மௌனமொடு
- நின்றா ரிருகை யொலியிசைத்தார் நிமிர்ந்தார் தவிசி னிலைகுறைத்தார்
- நன்றா ரமுது சிறிதுமிழ்ந்தார் நடித்தா ரியாவு மையமென்றே
- னின்றா மரைக்கை யேந்துகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வாரா விருந்தாய் வள்ளலிவர் வந்தார் மௌன மொடுநின்றார்
- நீரா ரெங்கே யிருப்பதென்றே னீண்ட சடையைக் குறிப்பித்தா
- ரூரா வைத்த தெதுவென்றே னொண்கை யோடென் னிடத்தினில்வைத்
- தேரார் கரத்தாற் சுட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- செங்கேழ் கங்கைச் சடையார்வாய் திறவா ராக வீண்டடைந்தா
- ரெங்கே யிருந்தெங் கணைந்ததுகா ணெங்கள் பெருமா னென்றேனென்
- னங்கே ழருகி னகன்றுபோ யங்கே யிறைப்போ தமர்ந்தெழுந்தே
- யிங்கே நடந்து வருகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கொடையா ரொற்றி வாணரிவர் கூறா மௌன ராகிநின்றார்
- தொடையா ரிதழி மதிச்சடையென் துரையே விழைவே துமக்கென்றே
- னுடையார் துன்னற் கந்தைதனை யுற்று நோக்கி நகைசெய்தே
- யிடையாக் கழுமுட் காட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பொன்னைக் கொடுத்தும் புணர்வரிய புனித ரிவரூ ரொற்றியதா
- முன்னைத் தவத்தா லியாங்காண முன்னே நின்றார் முகமலர்ந்து
- மின்னிற் பொலியுஞ் சடையீரென் வேண்டு மென்றே னுணச்செய்யா
- ளின்னச் சினங்கா ணென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வயலார் சோலை யெழிலொற்றி வாண ராகு மிவர்தமைநான்
- செயலா ரடியர்க் கருள்வீர்நுஞ் சிரத்து முரத்துந் திகழ்கரத்தும்
- வியலாய்க் கொண்ட தென்னென்றேன் விளங்கும் பிநாக மவைமூன்று
- மியலாற் காண்டி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பொதுநின் றருள்வீ ரொற்றியுளீர் பூவுந் தியதென் விழியென்றே
- னிதுவென் றறிநா மேறுகின்ற தென்றா ரேறு கின்றதுதா
- னெதுவென் றுரைத்தே னெதுநடுவோ ரெழுத்திட் டறிநீ யென்றுசொலி
- யெதிர்நின் றுவந்து நகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- இட்டங் களித்த தொற்றியுளீ ரீண்டிவ் வேளை யெவனென்றேன்
- சுட்டுஞ் சுதனே யென்றார்நான் சுட்டி யறியச் சொலுமென்றேன்
- பட்டுண் மருங்குற் பாவாய்நீ பரித்த தன்றே பாரென்றே
- யெட்டுங் களிப்பா லுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பாற்றக் கணத்தா ரிவர்காட்டு ப் பள்ளித் தலைவ ரொற்றியினின்
- றாற்றப் பசித்து வந்தாரா மன்ன மிடுமி னென்றுரைத்தேன்
- சோற்றுக் கிளைத்தோ மாயினும்யாஞ் சொல்லுக் கிளையேங் கீழ்ப்பள்ளி
- யேற்றுக் கிடந்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- குருகா ரொற்றி வாணர்பலி கொள்ள வகையுண் டோவென்றே
- னொருகா லெடுத்தீண் டுரையென்றா ரொருகா லெடுத்துக்காட்டுமென்றேன்
- வருகா விரிப்பொன் னம்பலத்தே வந்தாற் காட்டு கின்றாம்வீ
- ழிருகா லுடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வேலை ஞாலம் புகழொற்றி விளங்குந் தேவ ரணிகின்ற
- மாலை யாதென் றேனயன்மான் மாலை யகற்று மாலையென்றார்
- சோலை மலரன் றேயென்றேன் சோலை யேநாந் தொடுப்பதென
- வேல முறுவல் புரிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உயிரு ளுறைவீர் திருவொற்றி யுடையீர் நீரென் மேற்பிடித்த
- வயிர மதனை விடுமென்றேன் வயிரி யலநீ மாதேயாஞ்
- செயிர தகற்றுன் முலையிடங்கொள் செல்வ னலகாண் டெளியென்றே
- யியல்கொண் முறுவல் புரிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தண்கா வளஞ்சூழ் திருவொற்றித் தலத்தி லமர்ந்த சாமிநுங்கை
- யெண்கார் முகமாப் பொன் னென்றே னிடையிட் டறித லரிதென்றார்
- மண்கா தலிக்கு மாடென்றேன் மதிக்குங் கணைவி லன்றென்றே
- யெண்கா ணகைசெய் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- செய்காண் வளஞ்சூ ழொற்றியுளீர் திருமான் முதன்முத் தேவர்கட்கு
- மைகாணீரென் றேனிதன்மே லணங்கே நீயே ழடைதி யென்றார்
- மெய்கா ணதுதா னென்னென்றேன் விளங்குஞ் சுட்டுப் பெயரென்றே
- யெய்கா ணுறவே நகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- விண்டு வணங்கு மொற்றியுளீர் மென்பூ விருந்தும் வன்பூவில்
- வண்டு விழுந்த தென்றேனெம் மலர்க்கை வண்டும் விழுந்ததென்றார்
- தொண்டர்க் கருள்வீர் மிகவென்றேன் றோகாய் நாமே தொண்டனென
- வெண்டங் குறவே நகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மட்டார் மலர்க்கா வொற்றியுளீர் மதிக்குங் கலைமேல் விழுமென்றே
- னெட்டா மெழுத்தை யெடுத்ததுநா மிசைத்தே மென்றா ரெட்டாக
- வுட்டா வுறுமவ் வெழுத்தறிய வுரைப்பீ ரென்றே னந்தணரூர்க்
- கிட்டார் நாம மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒற்றி நகரீர் மனவசிதா னுடையார்க் கருள்வீர் நீரென்றேன்
- பற்றி யிறுதி தொடங்கியது பயிலு மவர்க்கே யருள்வதென்றார்
- மற்றி துணர்கி லேனென்றேன் வருந்தே லுள்ள வன்மையெலா
- மெற்றி லுணர்தி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வான்றோய் பொழில்சூ ழொற்றியுளீர் வருந்தா தணைவே னோவென்றே
- னூன்றோ யுடற்கென் றார்தெரிய வுரைப்பீ ரென்றே னோவிதுதான்
- சான்றோ ருமது மரபோர்ந்து தரித்த பெயர்க்குத் தகாதென்றே
- யேன்றோர் மொழிதந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தீது தவிர்க்கு மொற்றியுளீர் செல்ல லறுப்ப தென்றென்றே
- னீது நமக்குத் தெரிந்ததென்றா ரிறையா மோவிங் கிதுவென்றே
- னோது மடியார் மனக்கங்கு லோட்டு நாமே யுணரன்றி
- யேது மிறையன் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒண்கை மழுவோ டனலுடையீ ரொற்றி நகர்வா ழுத்தமர்நீர்
- வண்கை யொருமை நாதரென்றேன் வண்கைப் பன்மை நாதரென்றா
- ரெண்கணடங்கா வதிசயங்கா ணென்றேன் பொருளன் றிவையதற்கென்
- றெண்சொன் மணிதந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒருவ ரெனவா ழொற்றியுளீ ருமக்கம் மனையுண் டோவென்றே
- னிருவ ரொருபே ருடையவர்கா ணென்றா ரென்னென்றே னெம்பேர்
- மருவு மீறற் றயலகரம் வயங்கு மிகர மானதென்றே
- யிருவு மொழிதந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பேரா ரொற்றி யீரும்பைப் பெற்றா ரெவரென் றேனவர்தம்
- மேரார் பெயரின் முன்பினிரண் டிரண்டா மெழுத்தா ரென்றாரென்
- னேரா யுரைப்பீ ரென்றேனீ நெஞ்ச நெகிழ்ந்தா லுரைப்பாமென்
- றேரா யுரைசெய் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தளிநான் மறையீ ரொற்றிநகர் தழைக்க வாழ்வீர் தனிஞான
- வொளி நா வரசை யைந்தெழுத்தா லுவரி கடத்தி னீரென்றேன்
- களிநா வலனை யீரெழுத்தாற் கடலின் வீழ்த்தி னேமென்றே
- யெளியேற் குவப்பின் மொழிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஓமூன் றுளத்தீ ரொற்றியுளீ ருற்றோர்க் களிப்பீ ரோவென்றேன்
- றாமூன் றென்பார்க் கயன்மூன்றுந் தருவே மென்றா ரம்மமிகத்
- தேமூன் றினநும் மொழியென்றேன் செவ்வா யுறுமுன் னகையென்றே
- யேமூன் றுறவே நகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மன்னி விளங்கு மொற்றியுளீர் மடவா ரிரக்கும் வகையதுதான்
- முன்னி லொருதா வாமென்றேன் முத்தா வெனலே முறையென்றா
- ரென்னி லிதுதா னையமென்றே னெமக்குந் தெரியு மெனத்திருவா
- யின்ன லமுத முகுக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வளஞ்சே ரொற்றி யீரெனக்கு மாலை யணிவீ ரோவென்றேன்
- குளஞ்சேர் மொழிப்பெண் பாவாய்நின் கோலமனைக்க ணாமகிழ்வா
- லுளஞ்சேர்ந் தடைந்த போதேநின் னுளத்தி லணிந்தே முணரென்றே
- யிளஞ்சீர் நகைசெய் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வீற்றா ரொற்றி நகரமர்ந்தீர் விளங்கு மலரே விளம்புநெடு
- மாற்றா ரென்றே னிலைகாணெம் மாலை முடிமேற் பாரென்றார்
- சாற்றாச் சலமே யீதென்றேன் சடையின் முடிமே லன்றென்றே
- யேற்றா தரவான் மொழிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- புயப்பா லொற்றி யீரச்சம் போமோ வென்றே னாமென்றார்
- வயப்பா வலருக் கிறையானீர் வஞ்சிப் பாவிங் குரைத்ததென்றேன்
- வியப்பா நகையப் பாவெனும்பா வெண்பா கலிப்பா வுரைத்துமென்றே
- யியற்பான் மொழிதந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தண்ணம் பொழில்சூ ழொற்றியுளீர் சங்கங் கையிற்சேர்த் திடுமென்றேன்
- றிண்ணம் பலமேல் வருங்கையிற் சேர்த்தோ முன்னர் தெரியென்றார்
- வண்ணம் பலவிம் மொழிக்கென்றேன் மடவா யுனது மொழிக்கென்றே
- யெண்ணங் கொளநின் றுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உகஞ்சே ரொற்றி யூருடையீ ரொருமா தவரோ நீரென்றேன்
- முகஞ்சேர் வடிவே லிரண்டுடையாய் மும்மா தவர்நா மென்றுரைத்தார்
- சுகஞ்சேர்ந் திடுநும் மொழிக்கென்றேன் றோகா யுனது மொழிக்கென்றே
- யிகஞ்சேர் நயப்பா லுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஊரா மொற்றி யீராசை யுடையே னென்றே னெமக்கலது
- நேரா வழக்குத் தொடுக்கின்றாய் நினக்கே தென்றார் நீரெனக்குச்
- சேரா வணமீ தென்றேன்முன் சேர்த்தீ தெழுதித் தந்தவர்தாம்
- யாரார் மடவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வருத்தந் தவிரீ ரொற்றியுளீர் மனத்தி லகாத முண்டென்றே
- னிருத்தந் தொழுநம் மடியவரை நினைக்கின் றோரைக் காணினது
- வுருத்தன் பெயர்முன் னெழுத்திலக்க முற்றே மற்ற வெல்லையகன்
- றிருத்த லறியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மைய லகற்றீ ரொற்றியுளீர் வாவென் றுரைப்பீ ரோவென்றேன்
- செய்ய வதன்மேற் சிகரம்வைத்துச் செவ்வ னுரைத்தா லிருவாவென்
- றுய்ய வுரைப்பே மென்றார்நும் முரையென் னுரையென் றேனிங்கே
- யெய்யுன் னுரையை யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தாவென் றருளு மொற்றியுளீர் தமியேன் மோக தாகமற
- வாவென் றருள்வீ ரென்றேனவ் வாவின் பின்னர் வருமெழுத்தை
- மேவென் றதனிற் சேர்த்ததிங்கே மேவி னன்றோ வாவென்பே
- னேவென் றிடுகண் ணென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- என்மே லருள்கூர்ந் தொற்றியுளீ ரென்னை யணைவா னினைவீரேற்
- பொன்மேல் வெள்ளி யாமென்றேன் பொன்மேற் பச்சை யாங்கதன்மே
- லன்மேற் குழலாய் சேயதன்மே லலவ னதன்மேன் ஞாயிறஃ
- தின்மே லொன்றின் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வயலா ரொற்றி மேவுபிடி வாதர் நாம மியாதென்றேன்
- மயலா யிடுமிப் பெயர்ப்பின்னர் வந்த விளைய நாமமென்றார்
- செயலார் கால மறிந்தென்னைச் சேர்வீ ரென்றேன் சிரித்துனக்கிங்
- கியலா ரயலா ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நாலா ரணஞ்சூ ழொற்றியுளீர் நாகம் வாங்க லென்னென்றேன்
- காலாங் கிரண்டிற் கட்டவென்றார் கலைத்தோல் வல்லீர் நீரென்றேன்
- வேலார் விழிமாப் புலித்தோலும் வேழத் தோலும் வல்லேமென்
- றேலா வமுத முகுக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- முடியா வளஞ்சூ ழொற்றியுளீர் முடிமே லிருந்த தென்னென்றேன்
- கடியா வுள்ளங் கையின்முதலைக் கடிந்த தென்றார் கமலமென
- வடிவார் கரத்தி லென்னென்றேன் வரைந்த வதனீ றகன்றதென்றே
- யிடியா நயத்தி னகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒன்றும் பெருஞ்சீ ரொற்றிநக ருடையீர் யார்க்கு முணர்வரியீ
- ரென்றும் பெரியீர் நீர்வருதற் கென்ன நிமித்த மென்றேன்யான்
- றுன்றும் விசும்பே காணென்றார் சூதா முமது சொல்லென்றே
- னின்றுன் முலைதா னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வானார் வணங்கு மொற்றியுளீர் மதிவாழ் சடையீர் மரபிடைநீர்
- தானா ரென்றே னனிப்பள்ளித் தலைவ ரெனவே சாற்றினர்கா
- ணானா லொற்றி யிருமென்றே னாண்டே யிருந்து வந்தனஞ்சே
- யீனா தவ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பற்று முடித்தோர் புகழொற்றிப் பதியீர் நுமது பசுவினிடைக்
- கற்று முடித்த தென்னிருகைக் கன்று முழுதுங் காணென்றேன்
- மற்று முடித்த மாலையொடுன் மருங்குற் கலையுங் கற்றுமுடிந்
- திற்று முடித்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வானங் கொடுப்பீர் திருவொற்றி வாழ்வீ ரன்று வந்தெனது
- மானங் கெடுத்தீ ரென்றுரைத்தேன் மாநன் றிஃதுன் மானன்றே
- யூனங் கலிக்குந் தவர்விட்டா ருலக மறியுங் கேட்டறிந்தே
- யீனந் தவிர்ப்பா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஞானம் படைத்த யோகியர்வாழ் நகரா மொற்றி நலத்தீர்மா
- லேனம் புடைத்தீ ரணையென்பீ ரென்னை யுவந்திப் பொழுதென்றே
- னூனந் தவிர்த்த மலர்வாயி னுள்ளே நகைசெய் திஃதுரைக்கே
- மீனம் புகன்றா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கருமை யளவும் பொழிலொற்றிக் கணத்தீர் முனிவர் கலக்கமறப்
- பெருமை நடத்தி னீரென்றேன் பிள்ளை நடத்தி னானென்றார்
- தரும மலவிவ் விடையென்றேன் றரும விடையு முண்டென்பா
- லிருமை விழியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒசிய விடுகு மிடையாரை யொற்றி யிருந்தே மயக்குகின்ற
- வசியர் மிகநீ ரென்றேனெம் மகன்கா ணென்றார் வளர்காமப்
- பசிய தொடையுற் றேனென்றேன் பட்ட மவிழ்த்துக் காட்டுதியே
- லிசையக் காண்பே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கலையா ளுடையீ ரொற்றிநின்றீர் காம மளித்தீர் களித்தணைவீர்
- மலையா ளுமது மனையென்றேன் மருவின் மலையா ளல்லளென்றா
- ரலையாண் மற்றை யவளென்றே னறியி னலையா ளல்லளுனை
- யிலையா மணைவ தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- சீலம் படைத்தீர் திருவொற்றித் தியாக ரேநீர் திண்மையிலோர்
- சூலம் படைத்தீ ரென்னென்றேன் றோன்று முலகுய்ந் திடவென்றா
- ராலங் களத்தீ ரென்றேனீ யாலம் வயிற்றா யன்றோநல்
- லேலங் குழலா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஞால நிகழும் புகழொற்றி நடத்தீர் நீர்தா னாட்டமுறும்
- பால ரலவோ வென்றேனைம் பாலர் பாலைப் பருவத்திற்
- சால மயல்கொண் டிடவருமோர் தனிமைப் பால ரியாமென்றே
- யேல முறுவல் புரிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வண்மை தருவீ ரொற்றிநகர் வாழ்வீ ரென்னை மருவீரென்
- னுண்மை யறியீ ரென்றேன்யா முணர்ந்தே யகல நின்றதென்றார்
- கண்மை யிலரோ நீரென்றேன் களமை யுடையேங் கண்மையுற
- லெண்மை நீயே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தவந்தங் கியசீ ரொற்றிநகர் தனைப்போ னினைத்தென் மனையடைந்தீ
- ருவந்தென் மீதிற் றேவர்திரு வுள்ளந் திரும்பிற் றோவென்றேன்
- சிவந்தங் கிடநின் னுள்ளமெம்மேற் றிரும்பிற் றதனைத் தேர்ந்தன்றே
- யிவர்ந்திங் கணைந்தா மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒன்னார் புரமூன் றெரிசெய்தீ ரொற்றி யுடையீ ரும்முடைய
- பொன்னார் சடைமேல் வெள்ளெருக்கம் பூவை மிலைந்தீ ரென்னென்றே
- னின்னா ரளகத் தணங்கேநீ நெட்டி மிலைந்தா யிதிலதுகீ
- ழென்னா ருலக ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கனிமா னிதழி முலைச்சுவடு களித்தீ ரொற்றிக் காதலர்நீர்
- தனிமா னேந்தி யாமென்றேன் றடங்கண் மடந்தாய் நின்முகமும்
- பனிமா னேந்தி யாமென்றார் பரைமான் மருவி னீரென்றே
- னினிமான் மருவி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- சிறியேன் றவமோ வெனைப்பெற்றார் செய்த தவமோ வீண்டடைந்தீ
- ரறியே னொற்றி யடிகேளிங் கடைந்த வாறென் னினைத்தென்றேன்
- பொறிநே ருனது பொற்கலையைப் பூவார் கலையாக் குறநினைத்தே
- யெறிவேல் விழியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அளிக்குங் குணத்தீர் திருவொற்றி யழக ரேநீ ரணிவேணி
- வெளிக்கொண் முடிமே லணிந்ததுதான் விளியா விளம்பத் திரமென்றேன்
- விளிக்கு மிளம்பத் திரமுமுடி மேலே மிலைந்தாம் விளங்கிழைநீ
- யெளிக்கொண் டுரையே லென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வாசங் கமழு மலர்ப்பூங்கா வனஞ்சூ ழொற்றி மாநகரீர்
- நேசங் குறிப்ப தென்னென்றே னீயோ நாமோ வுரையென்றார்
- தேசம் புகழ்வீர் யானென்றேன் றிகழ்தைத் திரிதித் திரியேயா
- மேசங் குறிப்ப தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பேசுங் கமலப் பெண்புகழும் பெண்மை யுடைய பெண்களெலாங்
- கூசும் படியிப் படியொற்றிக் கோவே வந்த தென்னென்றேன்
- மாசுந் தரிநீ யிப்படிக்கு மயங்கும் படிக்கு மாதருனை
- யேசும் படிக்கு மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கொடியா லெயில்சூ ழொற்றியிடங் கொண்டீ ரடிகள் குருவுருவாம்
- படியா லடியி லிருந்தமறைப் பண்பை யுரைப்பீ ரென்றேனின்
- மடியா லடியி லிருந்தமறை மாண்பை வகுத்தா யெனிலதுநா
- மிடியா துரைப்பே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- என்னே ருளத்தி னமர்ந்தீர்நல் லெழிலா ரொற்றி யிடையிருந்தீ
- ரென்னே யடிகள் பலியேற்ற லேழ்மை யுடையீர் போலுமென்றே
- னின்னே கடலி னிடைநீபத் தேழ்மை யுடையாய் போலுமென
- வின்னே யங்கொண் டுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நல்லார் மதிக்கு மொற்றியுளீர் நண்ணு முயிர்க டொறுநின்றீ
- ரெல்லா மறிவீ ரென்னுடைய விச்சை யறியீர் போலுமென்றேன்
- வல்லா யறிவின் மட்டொன்று மனமட் டொன்று வாய்மட்டொன்
- றெல்லா மறிந்தே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மறிநீர்ச் சடையீர் சித்தெல்லாம் வல்லீ ரொற்றி மாநகரீர்
- பொறிசே ருமது புகழ்பலவிற் பொருந்துங் குணமே வேண்டுமென்றேன்
- குறிநே ரெமது விற்குணத்தின் குணத்தா யதனால் வேண்டுற்றா
- யெறிவேல் விழியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஊரூ ரிருப்பீ ரொற்றிவைத்தீ ரூர்தான் வேறுண் டோவென்றே
- னோரூர் வழக்கிற் கரியையிறை யுன்னி வினவு மூரொன்றோ
- பேரூர் தினையூர் பெரும்புலியூர் பிடவூர் கடவூர் முதலாக
- வேரூ ரனந்த மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- விழியொண் ணுதலீ ரொற்றியுளீர் வேதம் பிறவி யிலரென்றே
- மொழியு நுமைத்தான் வேயீன்ற முத்த ரெனலிங் கென்னென்றேன்
- பழியன் றணங்கே யவ்வேய்க்குப் படுமுத் தொருவித் தன்றதனா
- லிழியும் பிறப்போ வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- விண்ணார் பொழில்சூ ழொற்றியுளீர் விளங்குந் தாம மிகுவாசத்
- தண்ணார் மலர்வே தனையொழிக்கத் தருதல் வேண்டு மெனக்கென்றேன்
- பண்ணார் மொழியா யுபகாரம் பண்ணாப் பகைவ ரேனுமிதை
- யெண்ணா ரெண்ணா ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- செம்பான் மொழியார் முன்னரெனைச் சேர்வீரென்கோ திருவொற்றி
- யம்பார் சடையீ ருமதாட லறியே னருளல் வேண்டுமென்றேன்
- வம்பார் முலையாய் காட்டுகின்றா மன்னும் பொன்னா ரம்பலத்தே
- யெம்பால் வாவென் றுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மைக்கொண் மிடற்றீ ரூரொற்றி வைத்தீ ருண்டோ மனையென்றேன்
- கைக்க ணிறைந்த தனத்தினுந்தந் கண்ணி னிறைந்த கணவனையே
- துய்க்கு மடவார் விழைவரெனச் சொல்லும் வழக்கீ தறிந்திலையோ
- வெய்க்கு மிடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஆறு முகத்தார் தமையீன்ற வைந்து முகத்தா ரிவர்தமைநான்
- மாறு முகத்தார் போலொற்றி வைத்தீர் பதியை யென்னென்றே
- னாறு மலர்ப்பூங் குழனீயோ நாமோ வைத்த துன்மொழிமன்
- றேறு மொழியன் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வள்ளன் மதியோர் புகழொற்றி வள்ளா லுமது மணிச்சடையின்
- வெள்ள மகண்மேற் பிள்ளைமதி விளங்க லழகீ தென்றேனின்
- னுள்ள முகத்தும் பிள்ளைமதி யொளிகொண் முகத்தும் பிள்ளைமதி
- யெள்ள லுடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உள்ளத் தனையே போலன்ப ருவக்குந் திருவா ழொற்றியுளீர்
- கள்ளத் தவர்போ லிவணிற்குங் கரும மென்னீ ரின்றென்றேன்
- மெள்ளக் கரவு செயவோநாம் வேட மெடுத்தோ நின்சொனினை
- யெள்ளப் புரிந்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அச்சை யடுக்குந் திருவொற்றி யவர்க்கோர் பிச்சை கொடுமென்றேன்
- விச்சை யடுக்கும் படிநம்பான் மேவினோர்க்கிவ் வகில நடைப்
- பிச்சை யெடுப்பே மலதுன்போற் பிச்சை கொடுப்பே மலவென்றே
- யிச்சை யெடுப்பா யுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அள்ளற் பழனத் திருவொற்றி யழக ரிவர்தம் முகநோக்கி
- வெள்ளச் சடையீ ருள்ளத்தே விருப்பே துரைத்தாற் றருவலென்றேன்
- கொள்ளக் கிடையா வலர்குமுதங் கொண்ட வமுதங் கொணர்ந்தின்னு
- மெள்ளத் தனைதா வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- விஞ்சு நெறியீ ரொற்றியுளீர் வியந்தீர் வியப்பென் னிவணென்றேன்
- கஞ்ச மிரண்டு நமையங்கே கண்டு குவிந்த விரிந்திங்கே
- வஞ்ச விருதா மரைமுகையை மறைக்கின் றனநின் பால்வியந்தா
- மெஞ்ச லறநா மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அளியா ரொற்றி யுடையாருக் கன்ன நிரம்ப விடுமென்றே
- னளியார் குழலாய் பிடியன்ன மளித்தாற் போது மாங்கதுநின்
- னொளியார் சிலம்பு சூழ்கமலத் துளதாற் கடகஞ் சூழ்கமலத்
- தெளியார்க் கிடுநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- விச்சைப் பெருமா னெனுமொற்றி விடங்கப் பெருமா னீர்முன்னம்
- பிச்சைப் பெருமா னின்றுமணப் பிள்ளைப் பெருமா னாமென்றே
- னச்சைப் பெறுநீ யம்மணப்பெண் ணாகி யிடையி லையங்கொள்
- ளிச்சைப் பெரும்பெண் ணென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- படையம் புயத்தோன் புகழொற்றிப் பதியீ ரரவப் பணிசுமந்தீர்
- புடையம் புயத்தி லென்றேன்செம் பொன்னே கொடையம் புயத்தினுநன்
- னடையம் புயத்துஞ் சுமந்தனைநீ நானா வரவப் பணிமற்று
- மிடையம் பகத்து மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கூம்பா வொற்றி யூருடையீர் கொடும்பாம் பணிந்தீ ரென்னென்றே
- னோம்பா துரைக்கிற் பார்த்திடினுள் ளுன்னில் விடமேற் றுன்னிடைக்கீழ்ப்
- பாம்பா வதுவே கொடும்பாம்பெம் பணிப்பாம் பதுபோற் பாம்பலவென்
- றேம்பா நிற்ப விசைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- புயல்சூ ழொற்றி யுடையீரென் புடையென் குறித்தோ போந்ததென்றேன்
- கயல்சூழ் விழியாய் தனத்தவரைக் காண லிரப்போ ரெதற்கென்றார்
- மயல்சூழ் தனமிங் கிலையென்றேன் மறையா தெதிர்வைத் திலையென்ற
- லியல்சூ ழறமன் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நடவாழ் வொற்றி யுடையீர்நீர் நாக மணிந்த தழகென்றேன்
- மடவா யதுநீர் நாகமென மதியே லயன்மான் மனனடுங்க
- விடவா யுமிழும் படநாகம் வேண்டிற்காண்டி யென்றேயென்
- னிடவா யருகே வருகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கோடா வொற்றி யுடையீர்நுங் குலந்தான் யாதோ கூறுமென்றேன்
- வீடார் பிரம குலந்தேவர் வேந்தர் குலநல் வினைவசியப்
- பாடார் குலமோர் சக்கரத்தான் பள்ளிக் குலமெல் லாமுடையே
- மேடார் குழலா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நலமா மொற்றி யுடையீர்நீர் நல்ல வழக ரானாலுங்
- குலமே துமக்கு மாலையிடக் கூடா தென்றே னின்குலம்போ
- லுலகோ துறுநங் குலமொன்றோ வோரா யிரத்தெட் டுயர்குலமிங்
- கிலகா நின்ற தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மதிலொற் றியினீர் நும்மனையாண் மலையின் குலநும் மைந்தருளோர்
- புதல்வர்க் கானைப் பெருங்குலமோர் புதல்வர்க் கிசையம் புலிக்குலமா
- மெதிரற் றருள்வீர் நுங்குலமிங் கெதுவோ வென்றேன் மனைவியருள்
- ளிதுமற் றொருத்திக் கென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தேமாம் பொழில்சூ ழொற்றியுளீர் திகழுந் தகரக் காற்குலத்தைப்
- பூமா னிலத்தில் விழைந்துற்றீர் புதுமை யிஃதும் புகழென்றே
- னாமா குலத்தி லரைக்குலத்துள் ளணைந்தே புறமற் றரைக்குலங்கொண்
- டேமாந் தனைநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அனஞ்சூ ழொற்றிப் பதியுடையீ ரகில மறிய மன்றகத்தே
- மனஞ்சூழ் தகரக் கால்கொண்டீர் வனப்பா மென்றே னுலகறியத்
- தனஞ்சூ ழகத்தே யணங்கேநீ தானுந் தகரத் தலைகொண்டா
- யினஞ்சூ ழழகா மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பங்கே ருகப்பூம் பணையொற்றிப் பதியீர் நடுவம் பரமென்னு
- மங்கே யாட்டுக் காலெடுத்தீ ரழகென் றேனவ் வம்பரமே
- லிங்கே யாட்டுத் தோலெடுத்தா யாமொன் றிரண்டு நீயென்றா
- லெங்கே நின்சொல் லென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மாணப் புகழ்சே ரொற்றியுளீர் மன்றார் தகர வித்தைதனைக்
- காணற் கினிநான் செயலென்னே கருதி யுரைத்தல் வேண்டுமென்றேன்
- வேணச் சுறுமெல் லியலேயாம் விளம்பு மொழியவ் வித்தையுனக்
- கேணப் புகலு மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நல்லா ரொற்றி யுடையீர்யா னடக்கோ வெறும்பூ வணையணைய
- வல்லா லவணும் முடன்வருகோ வணையா தவலத் துயர்துய்க்கோ
- செல்லா வென்சொன் நடவாதோ திருக்கூத் தெதுவோ வெனவிடைக
- ளெல்லா நடவா தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஆட்டுத் தலைவர் நீரொற்றி யழகீ ரதனாற் சிறுவிதிக்கோ
- ராட்டுத் தலைதந் தீரென்றே னன்றா லறவோ ரறம்புகல
- வாட்டுத் தலைமுன் கொண்டதனா லஃதே பின்ன ரளித்தாமென்
- றீட்டுத் தரமீந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒற்றிப் பெருமா னுமைவிழைந்தா ரூரில் வியப்பொன் றுண்டிரவிற்
- கொற்றக் கமலம் விரிந்தொருகீழ்க் குளத்தே குமுதங் குவிந்ததென்றேன்
- பொற்றைத் தனத்தீர் நுமைவிழைந்தார் புரத்தே மதியந் தேய்கின்ற
- தெற்றைத் தினத்து மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- இடஞ்சே ரொற்றி யுடையீர்நீ ரென்ன சாதி யினரென்றேன்
- தடஞ்சேர் முலையாய் நாந்திறலாண் சாதி நீபெண் சாதியென்றார்
- விடஞ்சேர் களத்தீர் நும்மொழிதான் வியப்பா மென்றே னயப்பானின்
- னிடஞ்சேர் மொழிதா னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உடையா ரென்பா ருமையொற்றி யுடையீர் பணந்தா னுடையீரோ
- நடையா யேற்கின் றீரென்றே னங்காய் நின்போ லொருபணத்தைக்
- கடையா ரெனக்கீழ் வைத்தருமை காட்டேம் பணிகொள் பணங்கோடி
- யிடையா துடையே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- என்னா ருயிர்க்குப் பெருந்துணையா மெங்கள் பெருமா னீரிருக்கு
- நன்னா டொற்றி யன்றோதா னவில வேண்டு மென்றுரைத்தேன்
- முன்னா ளொற்றி யெனினுமது மொழித லழகோ தாழ்தலுயர்
- விந்நா னிலத்துண் டென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பெருந்தா ரணியோர் புகழொற்றிப் பெருமா னிவர்தம் முகநோக்கி
- யருந்தா வமுத மனையீரிங் கடுத்த பரிசே தறையுமென்றேன்
- வருந்தா திங்கே யருந்தமுத மனையா ளாக வாழ்வினொடு
- மிருந்தா யடைந்தே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- செம்மை வளஞ்சூ ழொற்றியுளீர் திகழாக் கரித்தோ லுடுத்தீரே
- யும்மை விழைந்த மடவார்க ளுடுக்கக் கலையுண் டோவென்றே
- னெம்மை யறியா யொருகலையோ விரண்டோ வனந்தங் கலைமெய்யி
- லிம்மை யுடையே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கற்றைச் சடையீர் திருவொற்றிக் காவ லுடையீ ரீங்கடைந்தீ
- ரிற்றைப் பகலே நன்றென்றே னிற்றை யிரவே நன்றெமக்குப்
- பொற்றைத் தனத்தாய் கையமுதம் பொழியா தலர்வாய்ப் புத்தமுத
- மிற்றைக் களித்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கற்றீ ரொற்றீர் முன்பொருவான் காட்டிற் கவர்ந்தோர் நாட்டில்வளை
- வீற்றீ ரின்றென் வளைகொண்டீர் விற்கத் துணிந்தீ ரோவென்றேன்
- மற்றீர்ங் குழலாய் நீயெம்மோர் மனையின் வளையைக் கவர்ந்துகளத்
- திற்றீ தணிந்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உடுக்கும் புகழா ரொற்றியுளா ருடைதா வென்றார் திகையெட்டு
- முடுக்கும் பெரியீ ரெதுகண்டோ வுரைத்தீ ரென்றேன் றிகைமுழுது
- முடுக்கும் பெரிய வரைச்சிறிய வொருமுன் றானை யான்மூடி
- யெடுக்குந் திறங்கண் டென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- காவா யொற்றிப் பதியுடையீர் கல்லா னைக்குக் கரும்பன்று
- தேவாய் மதுரை யிடத்தளித்த சித்த ரலவோ நீரென்றேன்
- பாவா யிருகல் லானைக்குப் பரிவிற் கரும்பிங் கிரண்டொருநீ
- யீவா யிதுசித் தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஊட்டுந் திருவா ழொற்றியுளீ ருயிரை யுடலாஞ் செப்பிடைவைத்
- தாட்டுந் திறத்தீர் நீரென்றே னணங்கே யிருசெப் பிடையாட்டுந்
- தீட்டும் புகழன் றியுமுலகைச் சிறிதோர் செப்பி லாட்டுகின்றா
- யீட்டுந் திறத்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கந்த வனஞ்சூ ழொற்றியுளீர் கண்மூன் றுடையீர் வியப்பென்றேன்
- வந்த வெமைத்தான் பிரிபோது மற்றை யவரைக் காண்போதுஞ்
- சந்த மிகுங்கண் ணிருமூன்றுந் தகுநான் கொன்றுந் தானடைந்தா
- யிந்த வியப்பென் னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஆழி விடையீர் திருவொற்றி யமர்ந்தீ ரிருவர்க் ககமகிழ்வான்
- வீழி யதனிற் படிக்காசு வேண்டி யளித்தீ ராமென்றேன்
- வீழி யதனிற் படிக்காசு வேண்டா தளித்தா யளவொன்றை
- யேழி லகற்றி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உற்ற விடத்தே பெருந்துணையா மொற்றிப் பெருமா னும்புகழைக்
- கற்ற விடத்தே முக்கனியுங் கரும்பு மமுதுங் கயவாவோ
- மற்ற விடச்சீ ரென்னென்றேன் மற்றை யுபய விடமுமுத
- லெற்ற விடமே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- யான்செய் தவத்தின் பெரும்பயனே யென்னா ரமுதே யென்றுணையே
- வான்செ யரசே திருவொற்றி வள்ளால் வந்த தென்னென்றேன்
- மான்செய் விழிப்பெண் ணேநீயாண் வடிவா னதுகேட் டுள்ளம்வியந்
- தேன்கண் டிடவே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கருணைக் கடலே யென்னிரண்டு கண்ணே முக்கட் கரும்பேசெவ்
- வருணப் பொருப்பே வளரொற்றி வள்ளன் மணியே மகிழ்ந்தணையத்
- தருணப் பருவ மிஃதென்றேன் றவிரன் றெனக்காட் டியதுன்ற
- னிருணச் சளக மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- காவிக் களங்கொள் கனியேயென் கண்ணுண் மணியே யணியேயென்
- னாவித் துணையே திருவொற்றி யரசே யடைந்த தென்னென்றேன்
- பூவிற் பொலியுங் குழலாய்நீ பொன்னி னுயர்ந்தா யெனக்கேட்டுன்
- னீவைக் கருதி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கண்ணும் மனமுங் களிக்குமெழிற் கண்மூன் றுடையீர் கலையுடையீர்
- நண்ணுந் திருவா ழொற்றியுளீர் நடஞ்செய் வல்லீர் நீரென்றேன்
- வண்ண முடையாய் நின்றனைப்போன் மலர்வாய் நடஞ்செய் வல்லோமோ
- வெண்ண வியப்பா மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தாங்கும் விடைமே லழகீரென் றன்னைக் கலந்துந் திருவொற்றி
- யோங்குந் தளியி லொளித்தீர்நீ ரொளிப்பில் வல்ல ராமென்றேன்
- வாங்கு நுதலாய் நீயுமெனை மருவிக் கலந்து மலர்த்தளியி
- லீங்கின் றொளித்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அம்மை யடுத்த திருமேனி யழகீ ரொற்றி யணிநகரீ
- ரும்மை யடுத்தோர் மிகவாட்ட முறுத லழகோ வென்றுரைத்தேன்
- நம்மை யடுத்தாய் நமையடுத்தோர் நம்போ லுறுவ ரன்றெனிலே
- தெம்மை யடுத்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உண்கண் மகிழ்வா லளிமிழற்று மொற்றி நகரீ ரொருமூன்று
- கண்க ளுடையீ ரென்காதல் கண்டு மிரங்கீ ரென்னென்றேன்
- பண்கொண் மொழியாய் நின்காதல் பன்னாண் சுவைசெய் பழம்போலு
- மெண்கொண் டிருந்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வணங்கே ழிலங்குஞ் செஞ்சடையீர் வளஞ்சே ரொற்றி மாநகரீர்
- குணங்கேழ் மிடற்றோர் பாலிருளைக் கொண்டீர் கொள்கை யென்னென்றே
- னணங்கே யொருபா லன்றிநின்போ லைம்பா லிருள்கொண் டிடச்சற்று
- மிணங்கே மிணங்கே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கரும்பி லினியீ ரென்னிரண்டு கண்க ளனையீர் கறைமிடற்றீர்
- பெரும்பை யணியீர் திருவொற்றிப் பெரியீ ரெதுநும் பெயரென்றே
- னரும்பண் முலையாய் பிறர்கேட்க வறைந்தா லளிப்பீ ரெனச்சூழ்வ
- ரிரும்பொ னிலையே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நிலையைத் தவறார் தொழுமொற்றி நிமலப் பெருமானீர்முன்ன
- மலையைச் சிலையாக் கொண்டீர்நும் மாவல் லபமற் புதமென்றேன்
- வலையத் தறியாச் சிறுவர்களு மலையைச் சிலையாக் கொள்வர்களீ
- திலையற் புதந்தா னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உதயச் சுடரே யனையீர்நல் லொற்றி யுடையீ ரென்னுடைய
- விதயத் தமர்ந்தீ ரென்னேயென் னெண்ண மறியீ ரோவென்றேன்
- சுதையிற் றிகழ்வா யறிந்தன்றோ துறந்து வெளிப்பட் டெதிரடைந்தா
- மிதையுற் றறிநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- புரக்குங் குணத்தீர் திருவொற்றிப் புனித ரேநீர் போர்க்களிற்றை
- யுரக்குங் கலக்கம் பெறவுரித்தீ ருள்ளத் திரக்க மென்னென்றேன்
- கரக்கு மிடையாய் நீகளிற்றின் கன்றைக் கலக்கம் புரிந்தனைநின்
- னிரக்க மிதுவோ வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பதங்கூ றொற்றிப் பதியீர்நீர் பசுவி லேறும் பரிசதுதான்
- விதங்கூ றறத்தின் விதிதானோ விலக்கோ விளம்பல் வேண்டுமென்றே
- னிதங்கூ றிடுநற் பசுங் கன்றை நீயுமேறி யிடுகின்றா
- யிதங்கூ றிடுக வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- யோக முடையார் புகழொற்றி யூரிற் பரம யோகியராந்
- தாக முடையா ரிவர்தமக்குத் தண்ர் தரநின் றனையழைத்தேன்
- போக முடையாய் புறத்தண்ர் புரிந்து விரும்பா மகத்தண்
- ரீக மகிழ்வி னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வளநீ ரொற்றி வாணரிவர் வந்தார் நின்றார் மாதேநா
- முளநீர்த் தாக மாற்றுறுநீ ருதவ வேண்டு மென்றார்நான்
- குளநீ ரொன்றே யுளதென்றேன் கொள்ளே மிடைமேற் கொளுமிந்த
- விளநீர் தருக வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மெய்ந்நீ ரொற்றி வாணரிவர் வெம்மை யுளநீர் வேண்டுமென்றா
- ரந்நீ ரிலைநீர் தண்ர்தா னருந்தி லாகா தோவென்றேன்
- முந்நீர் தனையை யனையீரிம் முதுநீ ருண்டு தலைக்கேறிற்
- றிந்நீர் காண்டி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- சீலஞ் சேர்ந்த வொற்றியுளீர் சிறிதாம் பஞ்ச காலத்துங்
- கோலஞ் சார்ந்து பிச்சைகொளக் குறித்து வருவீ ரென்னென்றேன்
- காலம் போகும் வார்த்தைநிற்குங் கண்டா யிதுசொற் கடனாமோ
- வேலங் குழலா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஊற்றார் சடையீ ரொற்றியுளீ ரூரூ ரிரக்கத் துணிவுற்றீர்
- நீற்றால் விளங்குந் திருமேனி நேர்ந்திங் கிளைத்தீர் நீரென்றேன்
- சோற்றா லிளைத்தே மன்றுமது சொல்லா லிளைத்தே மின்றினிநா
- மேற்றா லிகழ்வே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நீரை விழுங்குஞ் சடையுடையீ ருளது நுமக்கு நீரூருந்
- தேரை விழுங்கும் பசுவென்றேன் செறிநின் கலைக்கு ளொன்றுளது
- காரை விழுங்கு மெமதுபசுக் கன்றின் றேரை நீர்த்தேரை
- யீர விழுங்கு மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பொன்னேர் மணிமன் றுடையீர்நீர் புரிந்த தெதுவெம் புடையென்றே
- னின்னே யுரைத்தற் கஞ்சுதுமென் றாரென் னென்றே னியம்புதுமேன்
- மின்னே நினது நடைப்பகையா மிருகம் பறவை தமைக்குறிக்கு
- மென்னே யுரைப்ப தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அடையார் புரஞ்செற் றம்பலத்தே யாடு மழகீ ரெண்பதிற்றுக்
- கடையா முடலின் றலைகொண்டீர் கரமொன் றினிலற் புதமென்றே
- னுடையாத் தலைமேற் றலையாக வுன்கை யீரைஞ் ஞாறுகொண்ட
- திடையா வளைக்கே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தேவர்க் கரிய வானந்தத் திருத்தாண் டவஞ்செய் பெருமானீர்
- மேவக் குகுகு குகுகுவணி வேணி யுடையீ ராமென்றேன்
- தாவக் குகுகு குகுகுகுகுத் தாமே யைந்து விளங்கவணி
- யேவற் குணத்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கொன்றைச் சடையீர் கொடுங்கோளூர் குறித்தீர் வருதற் கஞ்சுவல்யா
- னொன்றப் பெருங்கோ ளென்மீது முரைப்பா ருண்டென் றுணர்ந்தென்றேன்
- நன்றப் படியேற் கோளிலியா நகரு முடையே நங்காய்நீ
- யின்றச் சுறலென் னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- புரியுஞ் சடையீ ரமர்ந்திடுமூர் புலியூ ரெனிலெம் போல்வார்க்கு
- முரியும் புலித்தோ லுடையீர்போ லுறுதற் கியலு மோவென்றேன்
- றிரியும் புலியூ ரன்றுநின் போற் றெரிவை யரைக்கண் டிடிற்பயந்தே
- யிரியும் புலியூ ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தெவ்வூர் பொடிக்குஞ் சிறுநகையித் தேவர் தமைநா னீரிருத்த
- லெவ்வூ ரென்றே னகைத்தணங்கே யேழூர் நாலூ ரென்றார்பின்
- னவ்வூர்த் தொகையி னிருத்தலரி தாமென் றேன்மற் றதிலொவ்வூ
- ரிவ்வூ ரெடுத்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மணங்கொ ளிதழிச் சடையீர்நீர் வாழும் பதியா தென்றேனின்
- குணங்கொண் மொழிகேட் டோரளவு குறைந்த குயிலாம் பதியென்றா
- ரணங்கின் மறையூ ராமென்றே னஃதன் றருளோத் தூரிஃது
- மிணங்க வுடையே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஆற்றுச் சடையா ரிவர்பலியென் றடைந்தார் நுமதூ ரியாதென்றேன்
- சோற்றுத் துறையென் றார்நுமக்குச் சோற்றுக் கருப்பேன் சொலுமென்றேன்
- றோற்றுத் திரிவே மன்றுநின்போற் சொல்லுங் கருப்பென் றுலகியம்ப
- வேற்றுத் திரியே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஓங்குஞ் சடையீர் நெல்வாயி லுடையே மென்றீ ருடையீரேற்
- றாங்கும் புகழ்நும் மிடைச்சிறுமை சார்ந்த தெவனீர் சாற்றுமென்றே
- னேங்கும் படிநும் மிடைச்சிறுமை யெய்திற் றலதீண் டெமக்கின்றா
- லீங்குங் காண்டி ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.