- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- திருமகள்எம் பெருமாட்டி மகிழும் வண்ணச்
- செழுங்கனியே கொழும்பாகே தேனே தெய்வத்
- தருமகனைக் காத்தருளக் கரத்தே வென்றித்
- தனுஎடுத்த ஒருமுதலே தருமப் பேறே
- இருமையும்என் னுளத்தமர்ந்த ராம நாமத்
- தென்அரசே என்அமுதே என்தா யேநின்
- மருமலர்ப்பொன் அடிவழுத்தும் சிறியேன் அந்தோ
- மனந்தளர்ந்தேன் அறிந்தும்அருள் வழங்கி லாயே.
- கலைக்கடலே கருணைநெடுங் கடலே கானங்
- கடந்ததடங் கடலேஎன் கருத்தே ஞான
- மலைக்கண்எழுஞ் சுடரேவான் சுடரே அன்பர்
- மனத்தொளிரும் சுயஞ்சுடரே மணியே வானோர்
- தலைக்கண்உறு மகுடசிகா மணியே வாய்மைத்
- தசரதன்தன் குலமணியே தமியேன் உள்ள
- நிலைக்கண்உறும் ஸ்ரீராம வள்ள லேஎன்
- நிலைஅறிந்தும் அருளஇன்னும் நினைந்தி லாயே.
- மண்ணாளா நின்றவர்தம் வாழ்வு வேண்டேன்
- மற்றவர்போல் பற்றடைந்து மாள வேண்டேன்
- விண்ணாளா நின்றஒரு மேன்மை வேண்டேன்
- வித்தகநின் திருவருளே வேண்டி நின்றேன்
- புண்ணாளா நின்றமன முடையேன் செய்த
- பொய்அனைத்தும் திருவுளத்தே பொறுப்பாய் அன்றிக்
- கண்ணாளா சுடர்க்கமலக் கண்ணா என்னைக்
- கைவிடில்என் செய்வேனே கடைய னேனே.
- தெவ்வினையார் அரக்கர்குலம் செற்ற வெற்றிச்
- சிங்கமே எங்கள்குல தெய்வ மேயோ
- வெவ்வினைதீர்த் தருள்கின்ற ராம நாம
- வியன்சுடரே இவ்வுலக விடயக் காட்டில்
- இவ்வினையேன் அகப்பட்டேன் புலனாம் கள்வர்க்
- கிலக்கானேன் துணைஒன்றும் இல்லேன் அந்தோ
- செய்வினைஒன் றறியேன்இங் கென்னை எந்தாய்
- திருவுளத்தில் சேர்த்திலையேல் செய்வ தென்னே.
- வான்வண்ணக் கருமுகிலே மழையே நீல
- மணிவண்ணக் கொழுஞ்சுடரே மருந்தே வானத்
- தேன்வண்ணச் செழுஞ்சுவையே ராம நாமத்
- தெய்வமே நின்புகழைத் தெளிந்தே ஓதா
- ஊன்வண்ணப் புலைவாயார் இடத்தே சென்றாங்
- குழைக்கின்றேன் செய்வகைஒன் றுணரேன் அந்தோ
- கான்வண்ணக் குடும்பத்திற் கிலக்கா என்னைக்
- காட்டினையே என்னேநின் கருணை ஈதோ.
- பொன்னுடையார் வாயிலில்போய் வீணே காலம்
- போக்குகின்றேன் இவ்வுலகப் புணர்ப்பை வேண்டி
- என்னுடையாய் நின்னடியை மறந்தேன் அந்தோ
- என்செய்கேன் என்செய்கேன் ஏழை யேன்நான்
- பின்னுடையேன் பிழைஉடையேன் அல்லால் உன்றன்
- பேரருளும் உடையேனோ பிறந்தேன் வாளா
- உன்னுடைய திருவுளத்தென் நினைதி யோஎன்
- ஒருமுதல்வா ஸ்ரீராமா உணர்கி லேனே.
- அறம்பழுக்கும் தருவேஎன் குருவே என்றன்
- ஆருயிருக் கொருதுணையே அரசே பூவை
- நிறம்பழுக்க அழகொழுகும் வடிவக் குன்றே
- நெடுங்கடலுக் கணையளித்த நிலையே வெய்ய
- மறம்பழுக்கும் இலங்கைஇரா வணனைப் பண்டோர்
- வாளினாற் பணிகொண்ட மணியே வாய்மைத்
- திறம்பழுக்கும் ஸ்ரீராம வள்ள லேநின்
- திருவருளே அன்றிமற்றோர் செயலி லேனே.
- கல்லாய வன்மனத்தர் தம்பால் சென்றே
- கண்கலக்கங் கொள்கின்றேன் கவலை வாழ்வை
- எல்லாம்உள் இருந்தறிந்தாய் அன்றோ சற்றும்
- இரங்கிலைஎம் பெருமானே என்னே என்னே
- பொல்லாத வெவ்வினையேன் எனினும் என்னைப்
- புண்ணியனே புரப்பதருட் புகழ்ச்சி அன்றோ
- அல்ஆர்ந்த துயர்க்கடல்நின் றெடுத்தி டாயேல்
- ஆற்றேன்நான் பழிநின்பால் ஆக்கு வேனே.
- மையான நெஞ்சகத்தோர் வாயில் சார்ந்தே
- மனம்தளர்ந்தேன் வருந்துகின்ற வருத்தம் எல்லாம்
- ஐயாஎன் உளத்தமர்ந்தாய் நீதான் சற்றும்
- அறியாயோ அறியாயேல் அறிவா ர்யாரே
- பொய்யான தன்மையினேன் எனினும் என்னைப்
- புறம்விடுத்தல் அழகேயோ பொருளா எண்ணி
- மெய்யாஎன் றனைஅந்நாள் ஆண்டாய் இந்நாள்
- வெறுத்தனையேல் எங்கேயான் மேவு வேனே.
- கூறுவதோர் குணமில்லாக் கொடிதாம் செல்வக்
- குருட்டறிவோர் இடைப்படும்என் குறைகள் எல்லாம்
- ஆறுவதோர் வழிகாணேன் அந்தோ அந்தோ
- அவலமெனும் கருங்கடலில் அழுந்து கின்றேன்
- ஏறுவதோர் வகைஅறியேன் எந்தாய் எந்தாய்
- ஏற்றுகின்றோர் நின்னைஅன்றி இல்லேன் என்னைச்
- சீறுவதோ இரங்குவதோ யாதோ உன்றன்
- திருவுளத்தைத் தெரியேனே சிறிய னேனே.
- * கொந்தமூர் ஸ்ரீநிவாச வரதாசாரிய சுவாமிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அருளிச் செய்தது.வீரராகவர் போற்றிப் பஞ்சகம்