- திருஎவ்வுளூர்
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- தண்ணமர் மதிபோல் சாந்தந் தழைத்தசத் துவனே போற்றி
- வண்ணமா மணியே போற்றி மணிவண்ணத் தேவா போற்றி
- அண்ணலே எவ்வு ளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி
- விண்ணவர் முதல்வா போற்றி வீரரா கவனே போற்றி.
- பாண்டவர் தூத னாகப் பலித்தருள் பரனே போற்றி
- நீண்டவன் என்ன வேதம் நிகழ்த்துமா நிதியே போற்றி
- தூண்டலில் லாமல் ஓங்குஞ் ஜோதிநல் விளக்கே போற்றி
- வேண்டவர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.
- மேதினி புரக்கும் வேந்தர் வீறெலாம் நினதே போற்றி
- கோதிலா மனத்தே நின்று குலாவிய கோவே போற்றி
- ஓதிய எவ்வு ளூரில் உறைந்தருள் புரிவாய் போற்றி
- வேதியன் தன்னை ஈன்ற வீரரா கவனே போற்றி.
- இளங்கொடி தனைக்கொண் டேகும் இராவணன் தனைய ழித்தே
- களங்கமில் விபீட ணர்க்குக் கனவர சளித்தாய் போற்றி
- துளங்குமா தவத்தோர் உற்ற துயரெலாம் தவிர்த்தாய் போற்றி
- விளங்குநல் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.
- அற்புதத் திருவை மார்பில் அணைத்தபே ரழகா போற்றி
- பொற்புறு திகிரி சங்கு பொருந்துகைப் புனிதா போற்றி
- வற்புறு பிணிதீர்த் தென்னை மகிழ்வித்த வரதா போற்றி
- வெற்புயர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.