- காப்பு
- நேரிசை வெண்பா
- திருச்சிற்றம்பலம்
- முன்னவனே யானை முகத்தவனே முத்திநலம்
- சொன்னவனே தூய்மெய்ச் சுகத்தவனே - என்னவனே
- சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே
- தற்பரனே நின்தாள் சரண்.
- வீறுடையாய் வேலுடையாய் விண்ணுடையாய் வெற்புடையாய்
- நீறுடையாய் நேயர்கடந் நெஞ்சுடையாய் - கூறு
- முதல்வாஓர் ஆறு முகவா முக்கண்ணன்
- புதல்வாநின் தாளென் புகல்.
- சீர்சான்ற வேதச் செழும்பொருளே சிற்சொருபப்
- பேர்சான்ற உண்மைப் பிரமமே - நேர்சான்றோர்
- நாடும் பரசிவமே நாயேனுக் கன்புநின்பால்
- நீடும் படிநீ நிகழ்த்து.
- நினைப்பித்தா நித்தா நிமலா எனநீ
- நினைப்பித்தால் ஏழை நினைப்பேன் - நினைப்பின்
- மறப்பித்தாலி யானும் மறப்பேன் எவையும்
- பிறப்பித்தாய் என்னாலென் பேசு.
- உருவாய் உருவில் உருவாகி ஓங்கி
- அருவாய் அருவில் அருவாய் - ஒருவாமல்
- நின்றாயே நின்ற நினைக்காண்ப தெவ்வாறோ
- என்தாயே என்தந்தை யே.
- வெஞ்சஞ் சலமா விகாரம் எனும்பேய்க்கு
- நெஞ்சம் பறிகொடுத்து நிற்கின்றேன் - அஞ்சலென
- எண்தோள் இறையே எனையடிமை கொள்ளமனம்
- உண்டோ இலையோ உரை.
- அப்பாலுன் சித்தம் அறியேன் எனக்கம்மை
- அப்பாநின் தாளன்றி யார்கண்டாய் - இப்பாரில்
- சாதிஉரு வாக்குந் தளைஅவிழ்த்துத் தன்மயமாம்
- சோதிஉரு வாக்குந் துணை.
- பேரறிவால் கண்டும் பெரியோர் அறியாரேல்
- யாரறிவார் யானோ அறிகிற்பேன் சீர்கொள்
- வெளியாய் வெளிக்குள் வெளியாய் ஒளிக்குள்
- ஒளியாகி நின்ற உனை.
- வந்தித்தேன்131 பிட்டுகந்த வள்ளலே நின்னடியான்
- சிந்தித்தேன் என்றல் சிரிப்பன்றோ - பந்தத்தாஞ்
- சிந்துசிந்திப் பித்தெனது சிந்தையுணின் பொன்னருளே
- வந்துசிந்திப் பித்தல் மறந்து.
- தேனென்ற இன்சொல் தெரிந்துநினைப் பாடுகின்றேன்
- நானென் றுரைத்தல் நகைஅன்றோ - வான்நின்ற
- ஒண்பொரு உள்ளம் உவந்தருளால் இன்சொல்லும்
- வண்பொருளும் ஈதல் மறந்து.
- அண்டங்க ளோஅவற்றின் அப்பாலோ இப்பாலோ
- பண்டங்க ளோசிற் பரவெளியோ - கண்தங்க
- வெம்பெருமால் நீத்தவர்தம் மெய்யுளமோ தையலொடும்
- எம்பெருமான் நீவாழ் இடம்.
- பூதமெங்கே மற்றைப் புலனெங்கே பல்லுயிரின்
- பேதமெங்கே அண்டமெனும் பேரெங்கே - நாதமெங்கே
- மன்வடிவ மெங்கே மறையெங்கே வான்பொரு
- பொன்வடிவம் கொள்ளாத போது.
- பேருருவோ சோதிப் பிழம்பாகும் சின்மயத்தின்
- சீருருவோ தேவர் திருவுருவம் - நேருருவில்
- சால்புறச்சேர் அண்ட சராசரங்கள் எல்லாம்நும்
- கால்விரற்பால் நின்றொடுங்குங் கால்.
- இன்றோ பகலோ இரவோ வருநாளில்
- என்றோ அறியேன் எளியேனே - மன்றோங்கும்
- தாயனையாய் நின்னருளாம் தண்ணமுதம் உண்டுவந்து
- நாயனையேன் வாழ்கின்ற நாள்.
- மண்ணாசை வெற்பே மறிகடலே பொன்னாசை
- பெண்ணாசை ஒன்றேஎன் பேராசை - நண்ணாசை
- விட்டார் புகழும் விடையாய்நான் பொய்யாசைப்
- பட்டால் வருமே பதம்.
- தந்தையாய் என்னுடைய தாயாய்த் தகைசான்ற
- சிந்தையாய் என்னருமைத் தேசிகனாய் - முந்தையாய்
- நீடு மறைமுதலாய் நின்றாயென் னேநெஞ்சம்
- வாடுமெனை ஆட்கொள்ளா வாறு.
- ஊட்டுகின்ற வல்வினையாம் உட்கயிற்றால் உள்ளிருந்தே
- ஆட்டுகின்ற நீதான் அறிந்திலையோ - வாட்டுகின்ற
- அஞ்சுபுல வேடர்க் கறிவைப் பறிகொடுத்தென்
- நெஞ்சுபுலர்ந் தேங்கு நிலை.
- ஆமோ அலவோ அறியேன் சிறியேனான்
- தாமோ தரனும் சதுமுகனும் - தாமே
- அடியா தரிக்கும் அரசேநின் ஏவல்
- அடியார்குற் றேவலடி யன்.
- உன்னால் எனக்காவ துண்டதுநீ கண்டதுவே
- என்னால் உனக்காவ தேதுளது - சொன்னால்யான்
- தந்தார்வத் தோடும் தலைமேற்கொண் டுய்கிற்பேன்
- எந்தாயிங் கொன்றுமறி யேன்.
- சென்றுரைப்பார் சொல்லில் சிறியான் பயமறியான்
- என்றுரைப்பார் ஆங்கதுமற் றென்னளவே - மன்றகத்தோய்
- அஞ்சேல் விழியாரை அந்தகனென் பார்மொழியை
- அஞ்சேன் சிறிதும் அறிந்து.
- எந்தாய்நின் அன்பர்தமக் கின்னமுதம் இட்டேத்திச்
- சிந்தா நலமொன்றுஞ் செய்தறியேன் - நந்தாச்
- சுவருண்ட மண்போலும் சோறுண்டேன் மண்ணில்
- எவருண் டெனைப்போல் இயம்பு.
- உப்பிருந்த ஓடோ ஓதியோ உலாப்பிணமோ
- வெப்பிருந்த காடோ வினைச்சுமையோ - செப்பறியேன்
- கண்ணப்ப ருக்குக் கனியனையாய் நிற்பணியா
- துண்ணப் பருக்கும் உடம்பு.
- ஏலார் மனைதொறும்போய் ஏற்றெலும்புந் தேயநெடுங்
- காலாய்த் திரிந்துழலுங் கால்கண்டாய் - மாலாகித்
- தொண்டே வலஞ்செய்கழல் தோன்றலே நின்கோயில்
- கண்டே வலம்செய்யாக் கால்.
- ஏசும் பிறர்மனையில் ஏங்கஅவர் ஈயுமரைக்
- காசும் பெறவிரிக்கும் கைகண்டாய் - மாசுந்த
- விண்டுஞ் சிரங்குனிக்கும் வித்தகனே நின்தலத்தைக்
- கண்டுஞ் சிரங்குவியாக் கை.
- வெங்கோடை ஆதபத்தின் வீழ்நீர் வறந்துலர்ந்து
- மங்கோடை யாதல் வழக்கன்றோ - எங்கோநின்
- சீர்சிந்தாச் சேவடியின் சீர்கேட்டும் ஆனந்த
- நீர்சிந்தா வன்கண் நிலை.
- வாயன்றேல் வெம்மலஞ்செல் வாய்அன்றேல் மாநரக
- வாயன்றேல் வல்வெறிநாய் வாயென்பாம் - தாயென்றே
- ஊழ்த்தாதா ஏத்தும் உடையாய் சிவஎன்றே
- வாழ்த்தாதார் நாற்றப்பாழ் வாய்.
- வீட்டார் இறைநீ விடைமேல் வரும்பவனி
- காட்டா தடைத்த கதவன்றோ - நாட்டாதி
- நல்லத் துளையா நதிச்சடையாய் என்னுஞ்சீர்ச்
- செல்லத் துளையாச் செவி.
- புல்லங் கணநீர்ப் புழையென்கோ புற்றென்கோ
- சொல்லும் பசுமட் டுளையென்கோ - சொல்லுஞ்சீர்
- வீயாத பிஞ்ஞகப்பேர் மெல்லினத்தின் நல்லிசைதான்
- தோயாத நாசித் துளை.
- தோற்றமிலாக் கண்ணுஞ் சுவையுணரா நாவுதிகழ்
- நாற்றம் அறியாத நாசியுமோர் - மாற்றமுந்தான்
- கேளாச் செவியுங்கொள் கீழ்முகமே நீற்றணிதான்
- மூளாது பாழ்த்த முகம்.
- மான்றாம் உலக வழக்கின் படிமதித்து
- மூன்றா வகிர்ந்தே முடைநாற - ஊன்றா
- மலக்கூடை ஏற்றுகினு மாணாதே தென்பால்
- தலக்கூடல் தாழாத் தலை.
- கல்லென்கோ நீரடைக்குங் கல்லென்கோ கான்கொள்கருங்
- கல்லென்கோ காழ்வயிரக் கல்லென்கோ - சொல்லென்கோ
- இன்றா லெனிலோ எடுத்தாளெம் மீன்றாணேர்
- நின்தாள் நினையாத நெஞ்சு.
- சொல்லுகின்ற உள்ளுயிரைச் சோர்வுற் றிடக்குளிர்ந்து
- கொல்லுகின்ற நஞ்சில் கொடிதன்றோ - ஒல்லுமன்றத்
- தெம்மானின் தாட்கமல மெண்ணாது பாழ்வயிற்றில்
- சும்மா அடைக்கின்ற சோறு.
- சோர்படைத்துச் சோறென்றால் தொண்டைவிக்கிக் கொண்டுநடு
- மார்படைத்துச் சாவுகினும் மாநன்றே - சீர்படைக்க
- எண்ணுவார் எண்ணும் இறைவாநின் தாளேத்தா
- துண்ணுவார் உண்ணும் இடத்து.
- ஓகோ கொடிதே உறும்புலையர் இல்லினிடத்
- தேகோ வதைத்துண் செயலன்றோ - வாகோர்தம்
- வாழ்மனையில் செல்லாது வள்ளனினை ஏத்தாதார்
- பாழ்மனையில் சென்றுண் பது.
- வீயுமிடு காட்டகத்துள் வேம்பிணத்தின் வெந்தசையைப்
- பேயுமுடன் உண்ணஉண்ணும் பேறன்றோ - தோயுமயல்
- நீங்கஅருள் செய்வோய்வெண்ணீறணியார் தீமனையில்
- ஆங்கவரோ டுண்ணு மது.
- கண்குழைந்து வாடும் கடுநரகின்பேருரைக்கில்
- ஒண்குழந்தை யேனுமுலை உண்ணாதால் - தண்குழைய
- பூண்டாதார்க் கொன்றைப் புரிசடையோய் நின்புகழை
- வேண்டாதார் வீழ்ந்து விரைந்து.
- கண்ணுதலே நின்தாள் கருதாரை நேசிக்க
- எண்ணுதலே செய்யேன்மற் றெண்ணுவனேல் - மண்ணுலகில்
- ஆமிடத்து நின்னடியார்க் காசையுரைத் தில்லையென்பார்
- போமிடத்திற் போவேன் புலர்ந்து.
- அங்கணனே நின்னடிக்கோர் அன்பிலரைச் சார்ந்தோர்தம்
- வங்கணமே132 வைப்பதினான் வைத்தேனேல் - அங்கணத்தில்
- நீர்போல் எனது நிலைகெடுக நிற்பழிசொற்
- றார்போ லழிக தளர்ந்து.
- பூவைவிட்டுப் புல்லெடுப்பார் போலுன் திருப்பாதத்
- தேவைவிட்டு வெம்பிறவித் தேவர்களைக் - கோவையிட்டுக்
- கூவுவார் மற்றவரைக் கூடியிடேன் கூடுவனேல்
- ஓவுவா ராவ133 லுனை.
- யாதோ கனற்கண் யமதூதர் காய்ச்சுகருந்
- தாதோ தழற்பிழம்போ தானறியேன் - மீதோங்கு
- நாட்டார்தார்க் கொன்றை நதிச்சடையோய் அஞ்செழுத்தை
- நாட்டாதார் வாய்க்கு நலம்.
- என்னெஞ்சோர் கோயில் எனக்கொண்டோய் நின்நினையார்
- தன்னெஞ்சோ கல்லாமச் சாம்பிணத்தார் - வன்நெஞ்சில்
- சார்ந்தவர்க்கும் மற்றவரைத் தானோக்கி வார்த்தைசொல
- நேர்ந்தவர்க்கும் கல்லாகும் நெஞ்சு.
- வெள்ளமுதும் தேனும் வியன்கரும்பும் முக்கனியின்
- உள்ளமுதும் தெள்ளமுதும் ஒவ்வாதால் கள்ளமிலா
- நின்னன்பர் தம்புகழின் நீள்மதுரந் தன்னைஇனி
- என்னென்ப தையா இயம்பு.
- பண்ணாலுன் சீரினைச்சம் பந்தர்சொல வெள்ளெலும்பு
- பெண்ணான தென்பார் பெரிதன்றே - அண்ணாஅச்
- சைவவடி வாஞான சம்பந்தர் சீருரைக்கில்
- தெய்வவடி வாஞ்சாம்பர் சேர்ந்து.
- எங்கோவே யான்புகலி எம்பெருமான் தன்மணத்தில்
- அங்கோர் பொருட்சுமையாள் ஆனேனேல் - இங்கேநின்
- தாள்வருந்த வேண்டேன் தடைபட்டேன் ஆதலினிந்
- நாள்வருந்த வேண்டுகின்றேன் நான்.
- பூவுக் கரையரும்வான் புங்கவரும் போற்றுதிரு
- நாவுக் கரையரெனு நன்னாம - மேவுற்ற
- தொண்டர்க்கு நீகட்டுச் சோறெடுத்தாய் என்றறிந்தோ
- தொண்டர்க்குத் தொண்டனென்பார் சொல்.
- எம்பரவை134 யோமண் ணிடந்தலைந்தான் சுந்தரனார்
- தம்பரவை வீட்டுத் தலைக்கடையாய் - வெம்பணையாய்
- வாயிற் படியாய் வடிவெடுக்க நேர்ந்திலனே
- மாயப்பெயர் நீண்ட மால்.
- நண்ணித் தலையால் நடக்கின்றோம் என்பதெங்கள்
- மண்ணில் பழைய வழக்கங்காண் - பண்ணிற்சொல்
- அம்மையார் வாமத்தோய் ஆயினுமுன் காரைக்கால்
- அம்மையார் போனடந்தார் ஆர்.
- வேத முடிவோ விளங்கா கமமுடிவோ
- நாத முடிவோ நவில்கண்டாய் - வாதமுறு
- மாசகர்க்குள் நில்லா மணிச்சுடரே மாணிக்க
- வாசகர்க்கு நீஉரைத்த வாறு.
- ஆர்கொண்டார் சேய்க்கறியிட் டாரே சிறுத்தொண்டப்
- பேர்கொண்டார் ஆயிடிலெம் பெம்மானே - ஓர்தொண்டே
- நாய்க்குங் கடைப்பட்ட நாங்களென்பேம் எங்கள்முடை
- வாய்க்கிங் கிஃதோர் வழக்கு.
- கோள்கொண்ட நஞ்சங் குடியேனோ கூர்கொண்ட
- வாள்கொண்டு வீசி மடியேனோ - கீள்கொண்ட
- அங்கோவ ணத்தழகா அம்பலவா நின்புகழை
- இங்கோதி வாழ்த்தாத யான்.
- ஆயாக் கொடியேனுக் கன்புடையாய் நீஅருளிங்
- கீயாக் குறையே இலைகண்டாய் - மாயாற்கும்
- விள்ளாத் திருவடிக்கீழ் விண்ணப்பம் யான்செய்து
- கொள்ளாக் குறையே குறை.
- பெற்றிடுதாய் போல்வதுநின் பெற்றியென்பேன் பிள்ளையது
- மற்றழுதால் கேட்டும் வராதங்கே - சற்றிருக்கப்
- பெற்றாள் பொறுப்பள் பிரானீ பொறுக்கினுநின்
- பொற்றாள் பொறாஎம் புலம்பு.
- பொன்போல் பொறுமையுளார் புந்திவிடாய் நீஎன்பார்
- என்போல் பொறுமையுளார் யார்கண்டாய் - புன்போக
- அல்லாம் படிசினங்கொண் டாணவஞ்செய் இன்னாமை
- எல்லாம் பொறுக்கின்றேன் யான்.
- முன்மணத்தில் சுந்தரரை முன்வலுவில் கொண்டதுபோல்
- என்மணத்தில் நீவந் திடாவிடினும் - நின்கணத்தில்
- ஒன்றும் ஒருகணம்வந் துற்றழைக்கில் செய்ததன்றி
- இன்றும் ஒருமணஞ்செய் வேன்.
- செய்யார் அழலேநின் செம்மேனி என்னினும்என்
- அய்யாநின் கால்பிடித்தற் கஞ்சேன்காண் - மெய்யாஇஞ்
- ஞான்றுகண்டு நான்மகிழ நந்தொண்டன் என்றெனையும்
- ஏன்றுகொண் டால்போதும் எனக்கு.
- என்பாலோ என்பால் இராதோடு கின்றமனத்
- தின்பாலோ அம்மனத்தைச் சேர்மாயை - தன்பாலோ
- யார்பால் பிழையுளதோ யானறியேன் என்னம்மை
- ஓர்பால் கொளநின்றோய் ஓது.
- நாணவத்தி னேன்றனையோ நாயேனை மூடிநின்ற
- ஆணவத்தை யோநான் அறியேனே - வீணவத்தில்
- தீங்குடையாய் என்னஇவண் செய்பிழையை நோக்கிஅருட்
- பாங்குடையாய் தண்டிப் பது.
- எச்சம் பெறுமுலகோர் எட்டிமர மானாலும்
- பச்சென் றிருக்கப் பகர்வார்காண் - வெச்சென்ற
- நஞ்சனையேன் குற்றமெலாம் நாடாது நாதஎனை
- அஞ்சனையேல் என்பாய் அமர்ந்து.
- கற்றறியேன் நின்னடிச்சீர் கற்றார் கழகத்தில்
- உற்றறியேன் உண்மை உணர்ந்தறியேன் - சிற்றறிவேன்
- வன்செய்வேல் நேர்விழியார் மையலினேன் மாதேவா
- என்செய்வேன் நின்னருளின் றேல்.
- மெய்தான் உடையோர் விரும்புகின்ற நின்அருளென்
- செய்தால் வருமோ தெரியேனே - பொய்தாவு
- நெஞ்சினேன் மன்றுள் நிருத்தா நினைக்கேட்க
- அஞ்சினேன் அன்பின்மை யால்.
- மாதேவா ஓவா மருந்தேவா மாமணிஇப்
- போதேவா என்றே புலம்புற்றேன் - நீதாவா
- யானாலுன் சித்த மறியேன் உடம்பொழிந்து
- போனாலென் செய்வேன் புகல்.
- கொன்செய்தாற் கேற்றிடுமென் குற்றமெலாம் ஐயஎனை
- என்செய்தால் தீர்ந்திடுமோ யானறியேன் - முன்செய்தோய்
- நின்பால் எனைக்கொடுத்தேன் நீசெய்க அன்றிஇனி
- என்பால் செயலொன் றிலை.
- எண்ணிலெளி யேன்தவிர எல்லா உயிர்களுநின்
- தண்ணிலகுந் தாழல் சார்ந்திடுங்காண் - மண்ணில்வருந்
- தீங்கென்ற எல்லாமென் சிந்தையிசைந் துற்றனமற்
- றாங்கொன்றும் இல்லாமை யால்.
- தாரம்விற்றுஞ் சேய்விற்றுந் தன்னைவிற்றும் பொய்யாத
- வாரம்வைத்தான் முன்னிங்கோர் மன்னனென்பர் - நாரம்வைத்த
- வேணிப் பிரானதுதான் மெய்யாமேல் அன்றெனைநீ
- ஏணிற் பிறப்பித்த தில்.
- உள்ளொன்ற நின்னடிக்கன் புற்றறியேன் என்னுளத்தின்
- வெள்ளென்ற வன்மை விளங்காதோ - நள்ளொன்ற
- அச்சங்கொண் டேனைநினக் கன்பனென்பர் வேழத்தின்
- எச்சங்கண் டாற்போல வே.
- நீத்தாடுஞ்136 செஞ்சடையாய் நீள்வேடங் கட்டிவஞ்சக்
- கூத்தாடு கின்றேனைக் கொண்டுசிலர் - கூத்தாநின்
- பத்தனென்பர் என்னோ பகல்வேடத் தார்க்குமிங்கு
- வித்தமிலா137 நாயேற்கும் வேறு.
- அன்புடையார் இன்சொல் அமுதேறு நின்செவிக்கே
- இன்புடையாய் என்பொய்யும் ஏற்குங்கொல் - துன்புடையேன்
- பொய்யுடையேன் ஆயினுநின் பொன்னருளை வேண்டுமொரு
- மெய்யுடையேன் என்கோ விரைந்து.
- என்னா ருயிர்க்குயிராம் எம்பெருமான் நின்பதத்தை
- உன்னார் உயிர்க்குறுதி உண்டோதான் - பொன்னாகத்
- தார்க்கும் சதுமுகர்க்கும் தானத்த138வர்க்குமற்றை
- யார்க்கும் புகலுன் அருள்.
- வெள்ளைப் பிறைஅணிந்த வேணிப் பிரானேநான்
- பிள்ளைப் பிராயத்தில் பெற்றாளை - எள்ளப்
- பொறுத்தாள்அத் தாயில் பொறுப்புடையோய் நீதான்
- வெறுத்தால் இனிஎன்செய் வேன்.
- ஆயிரமன்றேநூறும் அன்றேஈ ரைந்தன்றே
- ஆயிரம்பேர் எந்தைஎழுத் தைந்தேகாண் - நீஇரவும்
- எல்லு நினைத்தியென ஏத்துகினும் எந்தாய்வீண்
- செல்லுமனம் என்செய்கேன் செப்பு.
- வஞ்சந் தருங்காம வாழ்க்கையிடைச் சிக்கியஎன்
- நெஞ்சந் திருத்தி நிலைத்திலையே - எஞ்சங்
- கரனே மழுக்கொள் கரனே அரனே
- வரனே சிதம்பரனே வந்து.
- தாழ்விக்கும் வஞ்சச் சகமால் ஒழித்தென்னை
- வாழ்விக்கும் நல்ல மருந்தென்கோ - வீழ்விக்கும்
- ஈங்கான மாயை இகந்தோர்க் கருள்வோய்நின்
- பாங்கான செம்பொற் பதம்.
- ஏசொலிக்கு மானிடனாய் ஏன்பிறந்தேன் தொண்டர்கடந்
- தூசொலிப்பான் கல்லாகத் தோன்றிலனே - தூசொலிப்பான்
- கல்லாகத் தோன்றுவனேல் காளகண்டா நாயேனுக்
- கெல்லா நலமுமுள தே.
- குற்றம் பலசெயினுங் கோபஞ் செயாதவருள்
- சிற்றம் பலமுறையுஞ் சிற்பரனே - வெற்றம்பல்
- பொய்விட்டால் அன்றிப் புரந்தருளேன் என்றெனைநீ
- கைவிட்டால் என்செய்கேன் காண்.
- தீக்குணத்தார் யாவருமென் சீடரெனில் என்னுடைய
- தீக்குணத்தின் எல்லைஎவர் தேர்கிற்பார் - ஊக்கமிகு
- நல்லோர்க் களிக்கு நதிச்சடையோய் எற்கருளில்
- எல்லோர்க்கும் ஐயுறவா மே.
- இன்படையான் றன்புடையான் என்றேழை யேன்தலைமேல்
- அன்புடையாய் நீயமைப்பித் தாயிதற்கு - வன்படையா
- தெவ்வண்ணம் நின்னெஞ் சிசைந்ததோ அந்நாளில்
- இவ்வண்ணம் என்றறிகி லேன்.
- ஏய்ப்பிறப்பொன் றில்லாதோய் என்பிறப்பின் ஏழ்மடங்கோர்
- பேய்ப்பிறப்பே நல்ல பிறப்பந்தோ - வாய்ப்புலகம்
- வஞ்சமெனத் தேக மறைத்தடிமண் வையாமல்
- அஞ்சிநின்னோ டாடும் அது.
- கோடும் பிறைச்சடையோய் கோளுங் குறும்புஞ்சாக்
- காடும் பிணிமூப்புங் காணார்காண் - நீடுநினைக்
- கண்டார் அடிப்பொடியைக் கண்டார் திருவடியைக்
- கண்டார் வடிவுகண்டார் கள்.
- மாலெங்கே வேதனுயர் வாழ்வெங்கே இந்திரன்செங்
- கோலெங்கே வானோர் குடியெங்கே - கோலஞ்சேர்
- அண்டமெங்கே அவ்வவ் வரும்பொருளெங் கேநினது
- கண்டமங்கே நீலமுறாக் கால்.
- எவ்வேளை யோவருங்கூற் றெம்பாலென் றெண்ணுகின்ற
- அவ்வேளை தோறும் அழுங்குற்றேன் - செவ்வேளை
- மிக்களித்தோய் நின்கழற்கால் வீரத்தை எண்ணுதொறும்
- எக்களித்து வாழ்கின்றேன் யான்.
- துற்சங்கத் தோர்கணமுந் தோயாது நின்னடியர்
- சற்சங்கத் தென்றனைநீ தான்கூட்டி - நற்சங்கக்
- காப்பான் புகழுன் கழற்புகழைக் கேட்பித்துக்
- காப்பாய் இஃதென் கருத்து.
- என்னமுதே முக்கண் இறையே நிறைஞான
- இன்னமுதே நின்னடியை ஏத்துகின்றோர் - பொன்னடிக்கே
- காதலுற்றுத் தொண்டுசெயக் காதல்கொண்டேன் எற்கரு
- காதலுற்றுச் செய்தல் கடன்.
- ஆரா அமுதே அருட்கடலே நாயேன்றன்
- பேராத வஞ்சப் பிழைநோக்கி - யாரேனு
- நின்போல்வார் இல்லாதோய் நீயே புறம்பழித்தால்
- என்போல்வார் என்சொல்லார் ஈங்கு.
- மெய்யாக நின்னைவிட வேறோர் துணையில்லேன்
- ஐயா அதுநீ அறிந்ததுகாண் - பொய்யான
- தீதுசெய்வேன் தன்பிழையைச் சித்தங் குறித்திடில்யான்
- யாதுசெய்வேன் அந்தோ இனி.
- திண்ணம் அறியாச் சிறியேன் உளத்திருக்கும்
- எண்ணம் அறிந்தாய் இரங்குகிலாய் - அண்ணலுன்பால்
- நித்தம் இரங்காஎன் நெஞ்சமர்ந்த தாலோநின்
- சித்தம் இரங்காச் செயல்.
- கொன்னஞ்சேன் தன்பிழையைக் கூர்ந்துற்று நானினைக்கில்
- என்நெஞ்சே என்னை எரிக்குங்காண் - மன்னுஞ்சீர்
- எந்தாய்நின் சித்தத்திற் கேதாமோ நானறியேன்
- சிந்தா குலனென்செய் வேன்.
- நின்னன்பர் தம்பால் நிறுத்துதியோ அன்றிஎனைப்
- பொன்னன்பர் தம்பால் புணர்த்துதியோ - பொன்னன்பர்
- வைவமே என்னும் வறியேன் அறியேனென்
- தெய்வமே நின்றன் செயல்.
- என்சிறுமை நோக்கா தெனக்கருளல் வேண்டுமென்றே
- நின்பெருமை நோக்கிஇங்கு நிற்கின்றேன் - என்பெரும
- யாதோநின் சித்தம் அறியேன் அடியேற்கெப்
- போதோ அருள்வாய் புகல்.
- எந்தாயென் குற்றமெலாம் எண்ணுங்கால் உள்நடுங்கி
- நொந்தா குலத்தின் நுழைகின்றேன் - சிந்தாத
- காள மகிழ்நின் களக்கருணை எண்ணுதொறும்
- மீளமகிழ் கின்றேன் விரைந்து.
- எள்ளலே என்னினுமோர் ஏத்துதலாய்க் கொண்டருளெம்
- வள்ளலே என்றனைநீ வாழ்வித்தால் - தள்ளலே
- வேண்டுமென யாரே விளம்புவார் நின்னடியர்
- காண்டுமெனச் சூழ்வார் களித்து.
- வேணிக்க மேவைத்த வெற்பே விலையில்லா
- மாணிக்க மேகருணை மாகடலே - மாணிக்கு
- முன்பொற் கிழியளித்த முத்தேஎன் ஆருயிர்க்கு
- நின்பொற் கழலே நிலை.
- முத்தேவர் போற்று முதற்றேவ நின்னையன்றி
- எத்தேவர் சற்றே எடுத்துரைநீ - பித்தேன்செய்
- குற்றமெலாம் இங்கோர் குணமாகக் கொண்டென்னை
- அற்றமிலா தாள்கின் றவர்.
- கங்கைச் சடையாய்முக் கண்ணுடையாய் கட்செவியாம்
- அங்கச் சுடையாய் அருளுடையாய் - மங்கைக்
- கொருகூ றளித்தாய் உனைத்தொழுமிந் நாயேன்
- இருகூ றளித்தேன் இடர்க்கு.
- பேசத் தெரியேன் பிழையறியேன் பேதுறினும்
- கூசத் தெரியேன் குணமறியேன் - நேசத்தில்
- கொள்ளுவார் உன்னடிமைக் கூட்டத்தார் அல்லாதார்
- எள்ளுவார் கண்டாய் எனை.
- ஊணே உடையேஎன் றுட்கருதி வெட்கமிலேன்
- வீணேநன் னாளை விடுகின்றேன் - காணேனின்
- செம்பாத மேஎன்றுந் தீராப் பொருளென்று
- நம்பாத நாயடியேன் நான்.
- சிவமே சிவஞானச் செல்வமே அன்பர்
- நவமே தவமே நலமே நவமாம்
- வடிவுற்ற தேவேநின் மாக்கருணை யன்றோ
- படிவுற்ற என்னுட் பயன்.
- கோளாக்கிக் கொள்ளுங் கொடியே னையுநினக்கோர்
- ஆளாக்கிக் கொள்ளற் கமைவாயேல் - நீளாக்குஞ்
- செங்கேச வேணிச் சிவனேஎன் ஆணவத்திற்
- கெங்கே இடங்காண் இயம்பு.
- திண்ணஞ்சற் றீந்திடநின் சித்தம் இரங்காத
- வண்ணஞ்சற் றேதெரிய வந்ததுகாண் - எண்ணெஞ்சில்
- இத்தனையு மென்வினைகள் நீங்கில் இருக்கஅண்டம்
- எத்தனையும் போதாமை என்று.
- இண்டைச் சடையோய் எனக்கருள எண்ணுதியேல்
- தொண்டைப் பெறுமென் துயரெல்லாம் - சண்டைக்கிங்
- குய்ஞ்சே139 மெனஓடும் ஓட்டத்திற் கென்னுடைய
- நெஞ்சே பிறகிடுங்காண் நின்று.
- கண்ணா ணிழுதைகள்பாற் காட்டிக் கொடுக்கிலெனை
- அண்ணா அருளுக் கழகன்றே - உண்ணாடு
- நின்னடியார் கூட்டத்தில் நீரிவனைச் சேர்த்திடுமின்
- என்னடியான் என்பாய் எடுத்து.
- கண்ணப்பன் ஏத்துநுதற் கண்ணப்ப மெய்ஞ்ஞான
- விண்ணப்ப நின்றனக்கோர் விண்ணப்பம் - மண்ணிற்சில்
- வானவரைப் போற்றும் மதத்தோர் பலருண்டு
- நானவரைச் சேராமல் நாட்டு.
- பொன்னின் றொளிரும் புரிசடையோய் நின்னையன்றிப்
- பின்னொன் றறியேன் பிழைநோக்கி - என்னை
- அடித்தாலு நீயே அணைத்தாலு நீயே
- பிடித்தேனுன் பொற்பாதப் பேறு.
- துற்குணத்தில் வேறு தொடர்வேன் எனினுமற்றை
- நற்குணத்தில் உன்சீர் நயப்பேன்காண் - சிற்குணத்தோய்
- கூற்றுதைத்த நின்பொற் குரைகழற்பூந் தாளறிக
- வேற்றுரைத்தே னில்லை விரித்து.
- இப்பாரில் என்பிழைகள் எல்லாம் பொறுத்தருளென்
- அப்பாநின் தாட்கே அடைக்கலங்காண் - இப்பாரில்
- நானினது தாழல் நண்ணுமட்டும் நின்னடியர்
- பானினது சீர்கேட்கப் பண்.
- 130. மன்னவனே - தொ.வே.1; 2. பொ. சு., பி. இரா., ச. மு. க., சென்னைப் பதிப்புகள்.
- 131. வந்தி தேன் எனற்பாலது வந்தித்தேன் என விரித்தல் விகாரமாயிற்று. ஈண்டு தேன்என்பது இனிமை. தொ.வே.
- 132. வங்கணம் - நட்பு. தொ.வே.
- 133. ஆவலென்பதனை எதிர்காலத் தன்மை ஒருமை வினைமுற்றாகக் கொள்க. தொ. வே.
- 134. எம்பர - அண்மை விளி, இறை முன்னிலை. தொ. வே.
- 135. மாயற்கு, மாயாற்கென நீட்டல் விகாரமாயிற்று. தொ.வே.
- 136. நீத்தம், நீத்தெனக் குறைந்து நின்றது. தொ.வே.
- 137. வித்தம் - அறிவு. தொ.வே.
- 138. தானம் - சுவர்க்கம். தொ.வே.
- 139. உய்ந்தேம், உய்ஞ்சேம் எனத் திரிந்தது. தொ.வே.