- திருவதிகை வீரட்டானம்
- கலிவிருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- உரிய நாயகி யோங்கதி கைப்பதித்
- துரிய நாயகி தூயவீ ரட்டற்கே
- பிரிய நாயகி பேரருள் நாயகி
- பெரிய நாயகி பெற்றியைப் பேசுவாம்.
- பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- உலகந் தழைக்க உயிர்தழைக்க உணர்வு தழைக்க ஒளிதழைக்க
- உருவந் தழைத்த பசுங்கொடியே உள்ளத் தினிக்கும் தெள்ளமுதே
- திலகந் தழைத்த நுதற்கரும்பே செல்வத் திருவே கலைக்குருவே
- சிறக்கும் மலைப்பெண் மணியேமா தேவி இச்சை ஞானமொடு
- வலகந் தழைக்குங் கிரியை இன்பம் வழங்கும் ஆதி பரைஎன்ன
- வயங்கும் ஒருபே ரருளேஎம் மதியை விளக்கும் மணிவிளக்கே
- அலகந் தழைக்குந் திருவதிகை ஐயர் விரும்பும் மெய்யுறவே
- அரிய பெரிய நாயகிப்பெண் ணரசே என்னை ஆண்டருளே.
- தன்னேர் அறியாப் பரவெளியில் சத்தாம் சுத்த அநுபவத்தைச்
- சார்ந்து நின்ற பெரியவர்க்கும் தாயே எமக்குத் தனித்தாயே
- மின்னே மின்னேர் இடைப்பிடியே விளங்கும் இதய மலர்அனமே
- வேதம் புகலும் பசுங்கிளியே விமலக் குயிலே இளமயிலே
- பொன்னே எல்லாம் வல்லதிரி புரையே பரையே பூரணமே
- புனித மான புண்ணியமே பொற்பே கற்ப கப்பூவே
- அன்னே முன்னே என்னேயத் தமர்ந்த அதிகை அருட்சிவையே
- அரிய பெரிய நாயகிப்பெண் ணரசே என்னை ஆண்டருளே.