- கட்டளைக் கலிப்பா
- திருச்சிற்றம்பலம்
- மஞ்சட் பூச்சின் மினுக்கில்இ ளைஞர்கள்
- மயங்க வேசெயும் வாள்விழி மாதர்பால்
- கெஞ்சிக் கொஞ்சி நிறைஅழிந் துன்அருட்
- கிச்சை நீத்துக் கிடந்தனன் ஆயினேன்
- மஞ்சுற் றோங்கும் பொழில்தணி காசல
- வள்ளல் என்வினை மாற்றுதல் நீதியே
- தஞ்சத் தால்வந் தடைந்திடும் அன்பர்கள்
- தம்மைக் காக்கும் தனிஅருட் குன்றமே.
- முலையைக் காட்டி மயக்கிஎன் ஆருயிர்
- முற்றும் வாங்குறும் முண்டைகள் நன்மதி
- குலையக் காட்டும் கலவிக்கி சைந்துநின்
- கோலங் காணக் குறிப்பிலன் ஆயினேன்
- நிலையைக் காட்டும்நல் ஆனந்த வெள்ளமே
- நேச நெஞ்சகம் நின்றொளிர் தீபமே
- கலையைக் காட்டும் மதிதவழ் நற்றணி
- காச லத்தமர்ந் தோங்கதி காரனே.
- வஞ்ச மேகுடி கொண்டு விளங்கிய
- மங்கை யர்க்கு மயல்உழந் தேஅவர்
- நஞ்சம் மேவு நயனத்தில் சிக்கிய
- நாயி னேன்உனை நாடுவ தென்றுகாண்
- கஞ்சம் மேவும் அயன்புகழ் சோதியே
- கடப்ப மாமலர்க் கந்தசு கந்தனே
- தஞ்ச மேஎன வந்தவர் தம்மைஆள்
- தணிகை மாமலைச் சற்குரு நாதனே.
- பாவம் ஓர்உரு வாகிய பாவையர்
- பன்னு கண்வலைப் பட்டும யங்கியே
- கோவை வாய்இதழ்க் கிச்சைய தாகிநின்
- குரைக ழற்கன்பு கொண்டிலன் ஆயினேன்
- மேவு வார்வினை நீக்கிஅ ளித்திடும்
- வேல னேதணி காசல மேலனே
- தேவர் தேடரும் சீர்அருட் செல்வனே
- தெய்வ யானை திருமண வாளனே.
- கரத்தைக் காட்டியே கண்களை நீட்டியே
- கடைய னேன்உயிர் வாட்டிய கன்னியர்
- உரத்தைக் காட்டி மயக்கம யங்கினேன்
- உன்றன் பாத உபயத்தைப் போற்றிலேன்
- புரத்தைக் காட்டு நகையின்எ ரித்ததோர்
- புண்ணி யற்குப் புகல்குரு நாதனே
- வரத்தைக் காட்டும் மலைத்தணி கேசனே
- வஞ்ச னேற்கருள் வாழ்வுகி டைக்குமோ.
- காசம் மேகம் கடும்பிணி சூலைமோ
- காதி யால்தந்து கண்கலக் கம்செயும்
- மோச மேநிசம் என்றுபெண் பேய்களை
- முன்னி னேன்நினை முன்னிலன் ஆயினேன்
- பாசம் நீக்கிடும் அன்பர்கள் போல்எனைப்
- பாது காக்கும் பரம்உனக் கையனே
- தேசம் யாவும் புகழ்தணி காசலச்
- செல்வ மேஅருட் சிற்சுக வாரியே.
- ஐயம் ஏற்றுத் திரிபவர் ஆயினும்
- ஆசை ஆம்பொருள் ஈந்திட வல்லரேல்
- குய்யம் காட்டும்ம டந்தையர் வாய்ப்பட்டுன்
- கோல மாமலர்ப் பாதம்கு றித்திலேன்
- மைஉ லாம்பொழில் சூழும்த ணிகைவாழ்
- வள்ள லேவள்ளி நாயக னேபுவிச்
- சைய றும்பர ஞானிகள் போற்றிடும்
- சாமி யேஎனைக் காப்பதுன் தன்மையே.
- கண்ணைக் காட்டி இருமுலை காட்டிமோ
- கத்தைக் காட்டி அகத்தைக்கொண் டேஅழி
- மண்ணைக் காட்டிடும் மாய வனிதைமார்
- மாலைப் போக்கிநின் காலைப் பணிவனோ
- பண்ணைக் காட்டி உருகும்அ டியர்தம்
- பத்திக் காட்டிமுத் திப்—‘ருள் ஈதென
- விண்ணைக் காட்டும் திருத்தணி காசல
- வேல னேஉமை யாள்அருள் பாலனே.
- படியின் மாக்களை வீழ்த்தும் படுகுழி
- பாவம் யாவும் பழகுறும் பாழ்ங்குழி
- குடிகொள் நாற்றக் குழிசிறு நீர்தரும்
- கொடிய ஊற்றுக் குழிபுழுக் கொள்குழி
- கடிம லக்குழி ஆகும் கருக்குழிக்
- கள்ள மாதரைக் கண்டும யங்கினேன்
- ஒடிவில் சீர்த்தணி காசல நின்புகழ்
- ஓதி லேன்எனக் குண்டுகொல் உண்மையே.
- கச்சுக் கட்டி மணங்கட்டிக் காமுகர்
- கண்ணைக் கட்டி மனங்கட்டி வஞ்சகம்
- வச்சுக் கட்டிய வன்கழற் கட்டியும்
- மண்ணின் கட்டியும் மானும்மு லைக்கட்டிக்
- கிச்சைக் கட்டிஇ டும்பைஎ னும்சுமை
- ஏறக் கட்டிய எற்கருள் வாய்கொலோ
- பிச்சைக் கட்டிய பித்தன் புதல்வனே
- பெருமை கட்டும் பெருந்தணி கேசனே.