- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- திங்கள்அம் கொழுந்து வேய்ந்த செஞ்சடைக் கொழுந்தே போற்றி
- மங்கைவல் லபைக்கு வாய்த்த மகிழ்நநின் மலர்த்தாள் போற்றி
- ஐங்கர நால்வாய் முக்கண் அருட்சிவ களிறே போற்றி
- கங்கையை மகிழும் செல்வக் கணேசநின் கழல்கள் போற்றி.
- கலிவண்ணத் துறை
- உலகம் பரவும் பொருள்என் கோஎன் உறவென்கோ
- கலகம் பெறும்ஐம் புலன்வென் றுயரும் கதிஎன்கோ
- திலகம் பெறுநெய் எனநின் றிலகும் சிவம்என்கோ
- இலகைங் கரஅம் பரநின் தனைஎன் என்கேனே.
- அடியார் உள்ளம் தித்தித் தூறும் அமுதென்கோ
- கடியார் கொன்றைச் செஞ்சடை யானைக் கன்றென்கோ
- பொடியார் மேனிப் புண்ணியர் புகழும் பொருள்என்கோ
- அடிகேள் சித்தி விநாயக என்என் றறைகேனே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- கமலமலர் அயன்நயனன் முதல்அமரர் இதயம்உறு கரிசகல அருள்செய்பசு பதியாம்
- நிமலநிறை மதியின்ஒளிர் நிரதிசய பரமசுக நிலையைஅருள் புரியும்அதிபதியாம்
- விமலபிர ணவவடிவ விகடதட கடகரட விபுலகய முகசுகுண பதியாம்
- அமலபர சிவஒளியின் உதயசய விசயசய அபயஎனும் எமதுகண பதியே.
- கட்டளைக் கலித்துறை
- அம்பொன்று செஞ்சடை அப்பரைப் போல்தன் அடியர்தம்துக்
- கம்பொன்றும் வண்ணம் கருணைசெய் தாளும் கருதுமினோ
- வம்பொன்று பூங்குழல் வல்லபை யோடு வயங்கியவெண்
- கொம்பொன்று கொண்டெமை ஆட்கொண் டருளிய குஞ்சரமே.
- திருமால் வணங்கத் திசைமுகன் போற்றச் சிவமுணர்ந்த
- இருமா தவர்தொழ மன்றகத் தாடு மிறைவடிவாக்
- குருமா மலர்ப்பிறை வேணியு முக்கணுங் கூறுமைந்து
- வருமா முகமுங்கொள் வல்லபை பாகனை வாழ்த்துதுமே.