- கொச்சகக் கலிப்பா
- திருச்சிற்றம்பலம்
- வேகமுறு நெஞ்ச மெலிவும் எளியேன்றன்
- தேக மெலிவும் தெரிந்தும் இரங்காயேல்
- மாக நதியும் மதியும் வளர்சடைஎம்
- ஏக இனிமற் றெனக்கார் இரங்குவரே.
- கள்ள மனத்துக் கடையோர்பால் நாணுறும்என்
- உள்ள மெலிவும் உடல்மெலிவும் கண்டிருந்தும்
- எள்ளின் அளவும் இரங்கி அருளாயேல்
- எள்ளும் உலகில் எனக்கார் இரங்குவரே.
- பொன்னை வளர்ப்பாரைப் போற்றாமல் எம்பெருமான்
- உன்னைமதித் துன்னுறும்என் உள்ளம் அறிந்திருந்தும்
- அன்னையினும் சால அருள்வோய் அருளாயேல்
- என்னை முகம்பார்த் தெனக்கார் இரங்குவரே.
- துன்னுடைய வியாக்கிரமத் தோலுடையான் தானிருக்கப்
- பொன்னுடையார் பக்கம் புகுவானேன் என்றிருப்பேன்
- தன்னுடைய துன்பம் தவிர்த்திங் கருளாயேல்
- என்னுடையாய் மற்றிங் கெனக்கார் இரங்குவரே.
- வன்கண்ணர் தம்மை மதியாதுன் பொன்னடியின்
- தன்கண் அடியேன்தன் சஞ்சலவன் நெஞ்சகத்தின்
- புன்கண் உழல்வைப் புகல்கின்றேன் காத்திலையேல்
- என்கண் அனையாய் எனக்கார் இரங்குவரே.
- தோன்றுவதும் மாய்வதும்ஆம் சூழ்ச்சியிடைப் பட்டலைந்து
- மான்றுகொளும் தேவர் மரபை மதியாமே
- சான்றுகொளும் நின்னைச் சரணடைந்தேன் நாயேனை
- ஏன்றுகொளாய் என்னில் எனக்கார் இரங்குவரே.
- தீதுமுற்றும் நாளும் செயினும் பொறுத்தருளும்
- சாதுமுற்றும் சூழ்ந்த தயாநிதிநீ என்றடைந்தேன்
- கோதுமுற்றும் தீரக் குறியாயேல் நன்மைஎன்ப
- தேதும்அற்ற பாவிக் கெவர்தான் இரங்குவரே.
- துன்றியமா பாதகத்தோன் சூழ்வினையை ஓர்கணத்தில்
- அன்றுதவிர்த் தாண்ட அருட்கடல்நீ என்றடுத்தேன்
- கன்றுறும்என் கண்கலக்கம் கண்டும் இரங்காயேல்
- என்றும்உளாய் மற்றிங் கெவர்தான் இரங்குவரே.
- கோடாமே பன்றிதரும் குட்டிகட்குத் தாயாகி
- வாடா முலைகொடுத்த வள்ளல்என நான்அடுத்தேன்
- வாடாஎன் றுன்அருளில் வாழ்வான் அருளிலையேல்
- ஈடாரும் இல்லாய் எனக்கார் இரங்குவரே.
- கல்லா நடையேன் கருணையிலேன் ஆனாலும்
- நல்லார் புகழும் நமச்சிவா யப்பெயரே
- அல்லாது பற்றொன் றறியேன் அருளாயேல்
- எல்லாம் உடையாய் எனக்கார் இரங்குவரே.