- கட்டளைக் கலித்துறை
- திருச்சிற்றம்பலம்
- செறியாத நெஞ்சக வஞ்சக னேன்இச் சிறுதலத்தே
- அறியா தறிந்தவன் போற்சில செய்திடல் ஐயநின்தாள்
- குறியா தரித்தல தாணைமற் றில்லைஎங் கொற்றவனே
- முறியா தருள்செய்தி யோதெரி யேன்எந்தை முன்னியதே.
- தீதொன்று மேகண் டறிந்ததல் லால்பலன் சேரநலம்
- யாதொன்றும் நான்கண் டறியேன் அறிந்தவன் என்னஇங்கே
- போதொன்று போக்குகின் றேன்பிழை யாவும் பொறுத்தருள்வாய்
- மாதொன்று பாகத் துணைஅன்றி நற்றுணை மற்றிலையே.
- எல்லாம் தெரிந்த இறைவாநின் தண்ணருள் எய்துகிலாப்
- பொல்லாத பாவிப் புலையேன் பிழையைப் பொறுத்தருள்வாய்
- கல்லா மனக்கடை யாலே கடைவைத்துக் கண்டதுதுன்
- பல்லால் அணுத்துணை யும்அறி யேன்இன்பம் ஆவதுவே.
- மண்ணுடை யாரிடை வாளா மனஞ்செல வைத்ததலால்
- எண்ணுடை யாரிடை எய்திநின் தாண்மலர் ஏத்துகிலேன்
- புண்ணுடை யாரிற் புலம்புகின் றேனைப் பொறுத்தருள்முக்
- கண்ணுடை யாய்கழற் காலுடை யாய்மணி கண்டத்தனே.
- தாழாத துன்பச் சமுத்திரத் தேஇத் தனிஅடியேன்
- வீழாத வண்ணம் கருணைசெய் வாய்என்னை வேண்டிஅந்நாள்
- ஊழாம் வினைதவிர்த் தாண்டனை யேஎன் உடையவனே
- வாழா வகைஎனை இந்நாள் விடுத்தல் வழக்கலவே.
- ஊன்செய்த வெம்புலைக் கூட்டின் பொருட்டிங் குனைமறந்து
- நான்செய்த தீமையை நானே நினைக்க நடுங்குகின்றேன்
- ஏன்செய் தனைஎனக் கேளாது மேலும் இரங்குகின்றாய்
- வான்செய்த நாதநின் தண்ணருள் வண்ணம்என் வாழ்த்துவனே.
- ஆயாது நான்செயும் குற்றங் களைக்கண் டறியில்பெற்ற
- தாயாயி னும்பொறுப் பாளல ஆங்கவை சற்றலவே
- ஓயாது செய்யுந் தொறும்பொறுத் தாளும் உனைஎளியேன்
- வாயால் உரைக்கவும் மாட்டேன்அந் தோஎன்ன வன்மைஇதே.
- ஒன்றுந் தெரிந்திட மாட்டாப் பருவத் துணர்வுதந்தாய்
- இன்றுந் தருதற் கிறைவா நின்உள்ளம் இயைதிகொலோ
- கன்றுங் கருத்தொடு மாழ்குகின் றேன்உன் கழல்அடிக்கே
- துன்றுங் கருத்தறி யேன்சிறி யேன்என் துணிவதுவே.
- ஆவா எனஎனை ஆட்கொள வேண்டும் அடிமைகொண்ட
- தேவாஎன் குற்றம் திருவுளத் தெண்ணில்என் செய்திடுவேன்
- வாவா எனஅழைப் பார்பிறர் இல்லை மறந்தும்என்றன்
- நாவால் உரைக்கவும் மாட்டேன் சிறுதெய்வ நாமங்களே.
- பள்ளத்தி லேசெலும் நீர்போல்என் உள்ளம் பரப்பதலால்
- எள்ளத்தி லேசிறி தாயினும் நான்செல்வ தில்லைஎந்தாய்
- கள்ளத்தி லேசொல்லு கின்றேன் அலநின் கழலிணைஎன்
- உள்ளத்தி லேநின்ற ஆங்கவை காண்க உடையவனே.