- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- ஆள்வினையால் பயன்உறுவார் அசதி யாட
- அந்தோ இப் புலைநாயேன் அன்பால் நின்பால்
- வேள்விசெயும் பெருந்தவர்க்கே வேள்வி செய்ய
- வேண்டும்இதற் கெம்பெருமான் கருணை செய்யும்
- நாள்விளைவில் சின்னாளே இதுதான் உண்மை
- நம்பும்என நவின்றுனையே நம்பி நின்றேன்
- கேள்வியிலாத் துரைத்தனமோ அலது நாயேன்
- கிளக்குமுறை கிளக்கிலனோ கேட்டி லாயே.
- கேட்டிலாய் அடியேன்செய் முறையை அந்தோ
- கேடிலாக் குணத்தவர்பால் கிட்டு கின்றோய்
- ஏட்டில்ஆ யிரங்கோடி எனினும் சற்றும்
- எழுதமுடி யாக்குறைகொண் டிளைக்கின் றேன்நான்
- சேட்டியா விடினும்எனைச் சேட்டித் தீர்க்கும்
- சிறுமனத்தால் செய்பிழையைத் தேர்தி யாயில்
- நாட்டில்ஆர் காக்கவல்லார் என்னை எந்தாய்
- நாள்கழியா வண்ணம்இனி நல்கல்வேண்டும்.
- வேண்டாமை வேண்டுகின்றோர் நிற்க மற்றை
- வேண்டுவார் வேண்டுவன விரும்பி நல்கும்
- தூண்டாத மணிவிளக்கே பொதுவி லாடும்
- சுடர்க்கொழுந்தே என்னுயிர்க்குத் துணையே என்னை
- ஆண்டாறு மூன்றாண்டில் ஆண்டு கொண்ட
- அருட்கடலே என்உள்ளத் தமர்ந்த தேவே
- ஈண்டாவ எனச்சிறிய அடியேன் உள்ளத்
- தெண்ணம்அறிந் தருளாயேல் என்செய் கேனே.
- என்னைஅறியாப்பருவத் தாண்டுகொண்ட
- என்குருவே எனக்குரிய இன்ப மேஎன்
- தன்னைஇன்று விடத்துணிந்தாய் போலும் அந்தோ
- தகுமோநின் பெருங்கருணைத் தகவுக் கெந்தாய்
- உன்னைஅலா தொருவர்தம்பால் செல்லேன் என்னை
- உடையானே என்னுள்ளத் துள்ளே நின்று
- முன்னைவினைப் பயன்ஊட்ட நினைப்பிக் கின்றாய்
- முடிப்பிக்கத் துணிந்திலையேல் மொழிவ தென்னே.
- என்நாணை அறிந்தும்என்னை அந்தோ அந்தோ
- இவ்வகைசெய் திடத்துணிந்தாய் என்னே எந்தாய்
- நின்ஆணை நின்னையலா தொன்றும் வேண்டேன்
- நீஇதனை அறிந்திலையோ நினைப்பிக் கின்ற
- மன்னாஎன் ஆருயிர்க்கு வாழ்வே என்கண்
- மணியேஎன் குருவேஎன் மருந்தே இன்னும்
- உன்னால்இங் குயிர்தரித்து வாழ்கின் றேன்என்
- உள்ளம்அறிந் துதவுதியோ உணர்கி லேனே.
- உள்ளமறிந் துதவுவன்நம் உடையான் எல்லாம்
- உடையான்மற் றொருகுறைஇங் குண்டோ என்னக்
- கள்ளமனத் தேன்அந்தோ களித்தி ருந்தேன்
- கைவிடுவார் போல்இருந்தாய் கருணைக் குன்றே
- எள்ளலுறப் படுவேன்இங் கேது செய்வேன்
- எங்கெழுகேன் யார்க்குரைப்பேன் இன்னும் உன்றன்
- வள்ளலருள் திறநோக்கி நிற்கின் றேன்என்
- மனத்துயர்போம் வகைஅருள மதித்தி டாயே.
- வகைஅறியேன் சிறியேன்சன் மார்க்க மேவும்
- மாண்புடைய பெருந்தவத்தோர் மகிழ வாழும்
- தகைஅறியேன் நலம்ஒன்றும் அறியேன் பொய்ம்மை
- தான்அறிவேன் நல்லோரைச் சலஞ்செய் கின்ற
- மிகைஅறிவேன் தீங்கென்ப எல்லாம் இங்கே
- மிகஅறிவேன் எனினும்எனை விடுதி யாயில்
- பகைஅறிவேன் நின்மீதில் பழிவைத் திந்தப்
- பாவிஉயிர் விடத்துணிவேன் பகர்ந்திட் டேனே.
- இட்டவகை வாழ்கின்றேன் எந்தாய் நானே
- எண்ணுகிலேன் எண்ணுவித்தால் என்செய் வேன்நின்
- மட்டலர்சே வடிஆணை நினைத்த வண்ணம்
- வாழ்விக்க வேண்டும்இந்த வண்ணம் அல்லால்
- துட்டன்என விடத்துணிதி யாயில் அந்தோ
- சூறையுறு துரும்பெனவும் சுழன்று வானில்
- விட்டசிலை எனப்பவத்தில் விழுவேன் அன்றி
- வேறெதுசெய் வேன்இந்த விழல னேனே.
- விழற்கிறைத்து மெலிகின்ற வீண னேன்இவ்
- வியன்உலகில் விளைத்திட்ட மிகைகள் எல்லாம்
- அழற்கிறைத்த பஞ்செனவே ஆக்கி நீயே
- ஆட்கொண்டால் தடுப்பவரிங் காரே ஐயா
- கழற்கடிமை எனஉலகம் அறிய ஒன்றும்
- கருதறியாச் சிறுபருவத்தென்னை ஆண்டு
- நிழற்கருணை அளித்தாயே இந்நாள் நீகை
- நெகிழவிட்டால் என்செய்வேன் நிலையி லேனே.
- நிலைஅறியேன் நிலைஅறிந்து பெற்ற நல்லோர்
- நெறிஅறியேன் எனினும்உன்றன் நேச மன்றி
- இலைஅறியேன் மற்றவரைக் கனவி லேனும்
- எட்டுணைஓர் துணைஎனவும் எண்ணு றேன்நல்
- கலைஅறியேன் கருத்திலிருந் தறிவித் தாய்நான்
- கண்டறிந்தேன் எனினும்அவை காட்ட வேண்டும்
- அலைஅறியா அருட்கடலே அமுதே தேனே
- அம்பலத்தென் குருவேநான் அடிமை ஆளே.