- கலிநிலைத்துறை
- திருச்சிற்றம்பலம்
- மதிவார் சடைமா மணியே அருள்வள் ளலேநன்
- நிதியே திருஅம் பலத்தா டல்செய்நித் தனேநின்
- துதியேன் எனினும் உனைஅன் றித்துணையி லேன்என்
- பதியே எனதெண் ணம்ப லிக்கும்படிக் கருளே.
- படிமேல் அடியேன் உனைஅன் றிஓர்பற்றி லேன்என்
- முடிமேல் அடிவைத் தருள்செய் திடமுன்னு கண்டாய்
- கொடிமேல் விடைநாட் டியஎண்கு ணக்குன் றமே
- பொடிமேல் விளங்குந் திருமே னிஎம்புண் ணியனே.
- புண்ணாம் மனம்சஞ் சலித்துள் ளம்புலர்ந்து நின்றேன்
- அண்ணா எனைஆட் கொளவேண் டும்அகற்று வாயேல்
- கண்ணார் களைகண் பிறிதொன் றிலைகள்ள னேனை
- எண்ணா வினைஎன் செயுமோ இதற்கென்செய் வேனே.
- செய்வேன் அவம்அன் றித்தவம் ஒன்றும்செய் தறியேன்
- நைவேன் பிழையா வும்பொறுத் தருள்நல்கு வாயேல்
- உய்வேன் அலதுய் வகைஇன் றுமன்றோங்கு கின்றாய்
- வைவேன் துதிப்பேன் உனைஎன் றும்மறந்தி லேனே.
- மறவா துனைவாழ்த் துமெய்அன் பரைமாநி லத்தே
- இறவா வகைஆட் கொண்டரு ளியஈச னேமெய்
- உறவா கியநின் பதம்அன் றிஒன் றோர்கி லேன்நான்
- பிறவா நெறிதந் தருள்என் பதென் பேசி டாயே.
- என்னே இனும்நின் அருள்எய் திலன்ஏழை யேனை
- முன்னே வலிந்தாட் கொண்டதின் றுமுனிந்த தேயோ
- பொன்னேர் அணிஅம் பலத்தா டியபுண்ணி யாஎன்
- அன்னே அரசே அமுதே அருள்ஆண்ட வனே.
- ஆண்டாய் எனைஏழ் பிறப்பும் உனைஅன்றி ஒன்றும்
- தீண்டா தெனதுள் ளம்என்றால் என்சிறுமை தீர்க்க
- வேண்டா தயலார் எனக்காண் பதென்மெய்ய னேபொன்
- ஆண்டான் திருஎய் தநஞ்சைக் களம்நாட்டி னோயே.
- நாட்டார் நகைசெய் வர்என்றோ அருள்நல்கி லாய்நீ
- வீட்டார் நினைஎன் னினைப்பார் எனைமேவி லாயேல்
- தாட்டா மரைஅன் றித்துணை ஒன்றும்சார்ந் திலேன்என்
- மாட்டா மைஅறிந் தருள்வாய் மணிமன்று ளானே.
- மன்றா டியமா மணியே தனிவான வாஓர்
- மின்றாழ் சடைவே தியனே நினைவேண்டு கின்றேன்
- பொன்றா தமெய்அன் பருக்கன் புளம்பூண்டு நின்று
- நன்றாய் இரவும் பகலும் உனைநாடு மாறே.
- மாறா மனமா யையினால் மதிமாழ்கி மாழ்கி
- ஏறா மல்இறங் குகின்றேன் இதற்கென் செய்வேன்
- தேறா வுளத்தேன் றனைஏ றிடச்செய்தி கண்டாய்
- பேறா மணிஅம் பலமே வியபெற்றி யானே.
- ஆனே றிவந்தன் பரைஆட் கொளும்ஐய னேஎம்
- மானே மணிமன் றில்நடம் புரிவள்ள லேசெந்
- தேனே அமுதே முதலா கியதெய்வ மேநீ
- தானே எனைஆண் டருள்வாய் நின்சரண் சரணே.