- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
 - திருச்சிற்றம்பலம்
 - திங்கள் விளங்கும் சடைத்தருவைத் தீம்பாற் சுவையைச் செந்தேனைச்
 - செங்கை மருவும் செழுங்கனியைச் சீரார் முக்கட் செங்கரும்பை
 - மங்கை மலையாள் மணந்தபெரு வாழ்வைப் பவள மலைதன்னை
 - எங்கள் பெருமான் தனைஅந்தோ என்னே எண்ணா திருந்தேனே.
 - அன்பர் இதய மலர்க்கோயில் அமர்ந்த பரமா னந்தத்தைத்
 - துன்பம் அகலச் சுகமளிக்கும் தூய துணையைச் சுயஞ்சுடரை
 - வன்ப ரிடத்தின் மருவாத மணியை மணியார் மிடற்றானை
 - இன்ப நிறைவை இறையோனை என்னே எண்ணா திருந்தேனே.
 - ஒருமைப் பயனை ஒருமைநெறி உணர்ந்தார் உணர்வின் உள்ளுணர்வைப்
 - பெருமைக் கதியைப் பசுபதியைப் பெரியோர் எவர்க்கும் பெரியோனை
 - அருமைக் களத்தில் கருமைஅணி அம்மான் தன்னை எம்மானை
 - இருமைப் பயனுந் தருவானை என்னே எண்ணா திருந்தேனே.
 - கறையோர் கண்டத் தணிந்தருளும் கருணா நிதியைக் கண்ணுதலை
 - மறையோன் நெடுமாற் கரியசிவ மலையை அலையில் வாரிதியைப்
 - பொறையோர் உள்ளம் புகுந்தொளிரும் புனித ஒளியைப் பூரணனாம்
 - இறையோன் தன்னை அந்தோநான் என்னே எண்ணா திருந்தேனே.