- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- தணிகை மலையைச் சாரேனோ சாமி அழகைப் பாரேனோ
- பிணிகை யறையைப் பேரேனோ பேரா அன்பு கூரேனோ
- அணிசெய் அருள்நீர் ஆரேனோ ஆறாத் தாகம் தீரேனோ
- பணிசெய் தொழும்பில் சேரேனோ பார்மீ திரங்கும் நீரேனே.
- எளியேன் என்ன இருப்பாரோ ஏழைக் கிரங்கும் விருப்பாரோ
- அளியேன் பேர்நெஞ் சிருப்பாரோ அழியாக் காமம் திருப்பாரோ
- களியேன் என்ன உருப்பாரோ கருதும் அருட்குக் கருப்பாரோ
- தெளியேன் யான்என் செய்கேனே தென்பால் தணிகைப் பொருப்பாரே.
- செய்கொள் தணிகை நாடேனோ செவ்வேள் புகழைப் பாடேனோ
- கைகள் கூப்பி ஆடேனோ கருணைக் கடலில் நீடேனோ
- மெய்கொள் புளகம் மூடேனோ மெய்அன் பர்கள்பால் கூடேனோ
- பொய்கொள் உலகோ டூடேனோ புவிமீ திருகால் மாடேனே.
- வந்தென் எதிரில் நில்லாரோ மகிழ ஒருசொல் சொல்லாரோ
- முந்தம் மதனை வெல்லாரோ மோகம் தீரப் புல்லாரோ
- கந்தன் எனும்பேர் அல்லாரோ கருணை நெஞ்சம் கல்லாரோ
- சந்தத் தணிகை இல்லாரோ சகத்தில் எல்லாம் வல்லாரே.
- நாட்டும் தணிகை நண்ணேனோ நாதன் புகழை எண்ணேனோ
- கூட்டும் தொழும்பு பண்ணேனோ குறையா அருள்நீர் உண்ணேனோ
- சூட்டும் மயக்கை மண்ணேனோ தொழும்பர் இடத்தை அண்ணேனோ
- காட்டும் அவர்தாள் கண்ணேனோ கழியா வாழ்க்கைப் புண்ணேனே.
- காமப் பயலைத் தடுப்பாரோ கடப்ப மலர்த்தார் கொடுப்பாரோ
- ஏமத் தனத்தைக் கடுப்பாரோ என்மேல் அன்பை விடுப்பாரோ
- மாமற் றொருவீ டடுப்பாரோ மனத்தில் கோபம் தொடுப்பாரோ
- தாமத் தாழ்வைக் கெடுப்பாரோ தணிகை தனில்வேல் எடுப்பாரே.
- காவி மலைக்கண் வதியேனோ கண்ணுள் மணியைத் துதியேனோ
- பாவி மயலை மிதியேனோ பரமானந்தத் துதியயேனோ
- ஓவில் அருளைப் பதியேனோ உயர்ந்த தொழும்பில் கதியேனோ
- தாவில் சுகத்தை மதியேனோ சற்றும் பயனில் ஓதியேனே.
- வருந்தும் தனிமுன் மன்னாரோ வருத்தம் உனக்கேன் என்னாரோ
- இருந்தென் இடத்தே துன்னாரோ இணைத்தாள் ஈய உன்னாரோ
- பொருந்திங் கயலார் அன்னாரோ பொருள்ஈ தென்று பன்னாரோ
- செருந்தி மலரும் திருத்தணிகைத் தேவர் எவர்க்கும் முன்னாரே.
- தணிகா சலம்போய்த் தழையேனோ சாமி திருத்தாள் விழையேனோ
- பணிகா தலித்துப் பிழையேனோ பாடி மனது குழையேனோ
- திணிகாண் உலகை அழையேனோ சேர்ந்தவ் வீட்டுள் நுழையேனோ
- பிணிகாண் உலகில் பிறந்துழன்றே பேதுற் றலையும் பழையேனே.
- மன்னும் குவளை ஈயாரோ மதவேள் மதத்தைக் காயாரோ
- இன்னும் கோபம் ஓயாரோ என்தாய் தனக்குத் தாயாரோ
- துன்னும் இரக்கம் தோயாரோ துகளேன் துயரை ஆயாரோ
- பன்னும் வளங்கள் செறிந்தோங்கும் பணைகொள் தணிகைத் தூயாரே.