- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- அரங்காய மனமாயை அளக்கர் ஆழம்
- அறியாமல் காலிட்டிங் கழுந்து கின்றேன்
- இரங்காயோ சிறிதும்உயிர் இரக்கம் இல்லா
- என்மனமோ நின்மனமும் இறைவி உன்றன்
- உரங்காணும் அரசியற்கோல் கொடுங்கோல் ஆனால்
- ஓடிஎங்கே புகுந்தெவருக் குரைப்ப தம்மா
- திரங்காணாப் பிள்ளைஎனத் தாய்வி டாளே
- சிவகாம வல்லிஎனும் தெய்வத் தாயே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- தனத்தால் இயன்ற தனிச்சபையில் நடிக்கும் பெருமான் தனக்கன்றே
- இனத்தால் உயர்ந்த மணமாலை இட்டுக் களித்த துரைப்பெண்ணே
- மனத்தான் விளங்கும் சிவகாம வல்லிக் கனியே மாலொடும்ஓர்
- அனத்தான் புகழும் அம்மேஇவ் வடியேன் உனக்கே அடைக்கலமே.
- திருவே திகழுங் கலைமகளே திருவே மலையான் திருமகளே
- உருவே இச்சை மயமேமெய் உணர்வின் வணமே உயர்இன்பக்
- குருவே ஆதித் தனித்தாயே குலவும் பரையாம் பெருந்தாயே
- மருவே மலரே சிவகாம வல்லி மணியே வந்தருளே.
- அருளே அறிவே அன்பேதெள் ளமுதே மாதர் அரசேமெய்ப்
- பொருளே தெருளே மாற்றறியாப் பொன்னே மின்னே பூங்கிளியே
- இருளேய் மனத்தில் எய்தாத இன்பப் பெருக்கே இவ்வடியேன்
- மருளே தவிர்த்த சிவகாம வல்லி நினக்கே வந்தனமே.
- கட்டளைக் கலித்துறை
- தருவாய் இதுநல் தருணங்கண் டாய்என்னைத் தாங்கிக்கொண்ட
- குருவாய் விளங்கு மணிமன்ற வாணனைக் கூடிஇன்ப
- உருவாய்என் உள்ளத்தின் உள்ளே அமர்ந்துள்ள உண்மைஎலாம்
- திருவாய் மலர்ந்த சிவகாம வல்லிநின் சீர்அருளே.