- தாழிசை
- திருச்சிற்றம்பலம்
- பற்று நினைத்தெழுமிப் பாவிமனத் தீமையெலாம்
- உற்று நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.
- எள்ளேத நின்னிடத்தே எண்ணுகின்ற தோறுமதை
- உள்ளே நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.
- துன்னுகின்ற தீமைநின்பாற் சூழ்ந்துரைக்குந் தோறுமதை
- உன்னுகின்ற போதிலெனக் கூடுருவிப் போகுதடா.
- எள்ளுகின்ற தீமைநின்பா லெண்ணுகின்ற தோறுமதை
- உள்ளுகின்ற போதிலெனக் கூடுருவிப் போகுதடா.
- மிக்க நிலைநிற்க விரும்பேன் பிழைகளெலாம்
- ஒக்க நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.
- கோகோ வெனுங்கொடியேன் கூறியகுற் றங்களெலாம்
- ஓகோ நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.
- பித்து மனக்கொடியேன் பேசியவன் சொல்லையெலாம்
- ஒத்து நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.
- தேர்ந்து தெளியாச் சிறியவனேன் தீமையெலாம்
- ஓர்ந்து நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.
- நிறுத்தி யறியே நிகழ்த்தியவன் சொல்லை
- உறுத்தி நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.
- தோன்றி விரியுமனத் துட்டனேன் வன்பிழையை
- ஊன்றி நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.
- எண்ணினைப்ப தின்றிநினை யெள்ளி யுரைத்ததனை
- உண்ணினைக்குந் தோறுமெனக் குள்ள முருகுதடா.
- கடையவனேன் வைதகடுஞ் சொன்னினைக்குந் தோறும்
- உடையவனே யென்னுடைய வுள்ள முருகுதடா.
- பித்தனெனத் தீமை பிதற்றியதெண் ணுந்தோறும்
- உத்தமனே யென்னுடைய வுள்ள முருகுதடா.
- மன்றுடையாய் நின்னருளை வைதகொடுஞ் சொற்பொருளில்
- ஒன்றை நினைக்கிலெனக் குள்ள முருகுதடா.
- வெருவாம லையோ விளம்பியசொல் லெல்லாம்
- ஒருவா நினைக்கிலெனக் குள்ள முருகுதடா.
- புலைக்கொடியேன் புன்சொற் புகன்றதெண் ணுந்தோறும்
- உலைக்கண்மெழு காகவென்ற னுள்ள முருகுதடா.
- ஈடில்பெருந் தாயி லினியாய்நின் றண்ணருட்பால்
- ஊடியசொல் லுன்னிலெனக் குள்ள முருகுதடா.
- புரைத்தமன வஞ்சப் புலையேன் றிருவருளை
- உரைத்தபிழை யெண்ணிலெனக் குள்ள முருகுதடா.
- நாடி நினையா நவையுடையேன் புன்சொலெலாம்
- ஓடி நினைக்கிலெனக் குள்ள முருகுதடா.
- வெப்பில் கருணை விளக்கனையா யென்பிழையை
- ஒப்பி நினைக்கிலெனக் குள்ள முருகுதடா.
- அஞ்சலென்றாய் நின்பால் அடாதமொழி பேசியதை
- அஞ்சிநினைக் கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
- மெய்யோர் சிறிதுமிலேன் வீண்மொழியா லூடியதை
- ஐயோ நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
- இத்தா ரணிக்குளெங்கு மில்லாத தீமைசெய்தேன்
- அத்தா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
- பொய்யால் விரிந்த புலைமனத்தேன் செய்பிழையை
- ஐயா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
- இப்பாவி நெஞ்சா லிழுக்குரைத்தே னாங்கதனை
- அப்பாநி னைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
- எண்ணாக் கொடுமையெலா மெண்ணியுரைத் தேனதனை
- அண்ணா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
- வெம்மான் மனத்து வினையேன் புகன்றதெலாம்
- அம்மா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
- எச்சோடு மில்லா திழிந்தேன் பிழைகளெலாம்
- அச்சோநி னைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
- வந்தோடி நைமனத்து வஞ்சகனேன் வஞ்சமெலாம்
- அந்தோநி னைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
- ஓவாக் கொடியே னுரைத்த பிழைகளெலாம்
- ஆவா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
- கரைசேர வொண்ணாக் கடையேன் பிழையை
- அரைசேநி னைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
- மருளுடையேன் வஞ்ச மனத்தீமை யெல்லாம்
- அருளுடையா யெண்ணிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
- ஈண்டவனேன் வன்சொல் இயம்பியதை யென்னுடைய
- ஆண்டவனே யெண்ணிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
- வற்புதனேன் வஞ்ச மனப்பிழையை மன்றாடும்
- அற்புதனே யெண்ணிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
- துன்புடையேன் புன்மொழிகள் தூற்றியதை யெவ்வுயிர்க்கும்
- அன்புடையா யெண்ணிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
- கொதிக்கின்ற வன்மொழியாற் கூறியதை யையோ
- மதிக்கின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- சினங்கொண்ட போதெல்லாஞ் செப்பிய வன்சொல்லை
- மனங்கொள்ளுந் தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- செய்தநன்றி யெண்ணாச் சிறியவனே னின்னருளை
- வைத்தெண்ணுந் தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- பொய்த்த மனத்தேன் புகன்றகொடுஞ் சொற்களெலாம்
- வைத்துநினைக் குந்தோறும் வாளிட் டறுக்குதடா.
- பொங்குகின்ற தீமை புகன்றதெலா மெண்ணியெண்ணி
- மங்குகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- ஊடுகின்ற சொல்லா லுரைத்ததனை யெண்ணியெண்ணி
- வாடுகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- உயங்குகின்றேன் வன்சொல் லுரைத்ததனை யெண்ணி
- மயங்குகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- சொல்விளைவு நோக்காதே சொன்னதெலா மெண்ணுதொறும்
- வல்வினையே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா.
- மேல்விளைவு நோக்காதே வேறுசொன்ன தெண்ணுதொறும்
- மால்வினையே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா.
- விஞ்சகத்தா லந்தோ விளம்பியதை யெண்ணுதொறும்
- வஞ்சகத்தே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா.
- விலங்குகின்ற நெஞ்ச விளைவையெண் ணுந்தோறும்
- மலங்குகின்றே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா.
- தூய்மையிலா வன்மொழியாற் சொன்னவெலா மெண்ணுதொறும்
- வாய்மையிலே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா.
- கலிக்கின்ற வஞ்சகக் கருத்தைக் கருதி
- வலிக்கின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- நீட்டுகின்ற வஞ்ச நெடுஞ்சொலெலா நெஞ்சகத்தே
- மாட்டுகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- பொருந்துகின்ற வஞ்சப் புதுமையெண்ணி யையோ
- வருந்துகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- வெருவிக்கும் வஞ்ச வெறுஞ்சொலெலாம் நெஞ்சில்
- வருவிக்குந் தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- ஊடும்போ துன்னை யுரைத்தவெலா நாயடியேன்
- நாடும்போ தெல்லாமென் னாடி நடுங்குதடா.
- வாய்க்கடையா வன்சொல் வழங்கியவென் வன்மனத்தை
- நாய்க்கடையே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா.
- கன்றி யுரைத்த கடுஞ்சொற் கடுவையெலாம்
- நன்றியிலே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா.
- புன்மையினால் வன்சொற் புகன்றபுலைத் தன்மையெலாம்
- நன்மையிலே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா.
- ஊனெண்ணும் வஞ்ச வுளத்தா லுரைத்தவெலாம்
- நானெண்ணுந் தோறுமென்ற னாடி நடுங்குதடா.
- வஞ்சனையா லஞ்சாது வன்சொல் புகன்றவெலாம்
- நஞ்சனையே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா.
- கோணநெடு நெஞ்சக் குரங்காற் குதித்தவெலாம்
- நாணமிலே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா.
- ஊனமிலா நின்னை யுரைத்தகொடுஞ் சொல்லையெலாம்
- ஞானமிலே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா.
- எற்றே மதியிலியே னெண்ணா துரைத்ததனைச்
- சற்றே நினைத்திடினுந் தாது கலங்குதடா.
- இனியேது செய்வே னிகழ்ந்துரைத்த சொல்லைத்
- தனியே நினைத்திடினுந் தாது கலங்குதடா.
- நாயனையே னெண்ணாம னலங்கியவன் சொல்லையெலாம்
- தாயனையா யெண்ணுதொறுந் தாது கலங்குதடா.
- நிற்குருகா வஞ்ச நினைவால் நினைத்தவெலாஞ்
- சற்குருவே யெண்ணுதொறுந் தாது கலங்குதடா.
- வெந்நரகில் வீழும் விளைவால் விளம்பியதை
- என்னரசே யெண்ணுதொறு மென்னை விழுங்குதடா.
- நன்கறியேன் வாளா நவின்ற நவையனைத்தும்
- என்குருவே யெண்ணுதொறு மென்னை விழுங்குதடா.
- ஆவ தறியா தடியே னிகழ்ந்தகொடும்
- பாவ நினைக்கிற் பகீரென் றலைக்குதடா.
- வந்திப் பறியேன் வழங்கியவன் சொல்லையெலாம்
- சிந்திக் கிலுள்ளே திடுக்கிட் டழுங்குதடா.
- குற்ற நினைத்த கொடுஞ்சொலெலா மென்னுளத்தே
- பற்ற நினைக்கிற் பயமா யிருக்குதடா.
- எள்ளுகின்ற தீமை யெடுத்துரைத்தே னாங்கதனை
- விள்ளுகின்ற தோறு முள்ளம்வெந்து வெதும்புதடா.