- தாழிசை
- திருச்சிற்றம்பலம்
- மின்னிடையாள் காண விளங்குமன்றி லாடுகின்றாய்
- என்னுடையா யுன்ற னிணையடிதான் நோவாதா.
- வன்னமுதே யின்ப மலியமன்றி லாடுகின்றாய்
- என்னமுதே யுன்ற னிணையடிதான் நோவாதா.
- நண்ணியமெய் யன்பர் நயக்கமன்றி லாடுகின்றாய்
- புண்ணியனே யுன்றனது பொன்னடிதான் நோவாதா.
- அன்பரின்பங் கொள்ளநட மம்பலத்தே யாடுகின்றாய்
- இன்புருவா முன்ற னிணையடிதான் நோவாதா.
- நூலுணர்வா நுண்ணுணர்வி னோக்கநட மாடுகின்றாய்
- மாலறியா வுன்றன் மலர்ப்பாதம் நோவாதா.
- எள்ளலற வம்பலத்தே யின்பநட மாடுகின்றாய்
- வள்ளலே யுன்றன் மலரடிதான் நோவாதா.
- சைவ நிலைத்துத் தழைத்தோங்க வாடுகின்றாய்
- தெய்வ மணியே திருவடிதான் நோவாதா.
- எல்லாரு மின்புற் றிருக்கநட மாடுகின்றாய்
- வல்லாரின் வல்லாய் மலர்ப்பாதம் நோவாதா.
- அவமே கழிந்தின்ப மன்பர்கொள வாடுகின்றாய்
- சிவமே நினது திருவடிதான் நோவாதா.
- தற்பரமா மன்றிற் றனிநடன மாடுகின்றாய்
- சிற்பரமே யுன்றன் திருமேனி நோவாதா.
- வில்வவேர் மாலை மிளிர்ந்தசைய வாடுகின்றாய்
- செல்வமே யுன்றன் திருமேனி நோவாதா.