- தாழிசை
- திருச்சிற்றம்பலம்
- கற்றதென்றுஞ் சாகாத கல்வியென்று கண்டுகொண்டுன்
- அற்புதச்சிற் றம்பலத்தி லன்புவைத்தேன் ஐயாவே.
- ஈடணைகள் நீக்கிநமக் கின்பளிக்கு மென்றுமன்றில்
- ஆடுந் திருவடிக்கே ஆசைவைத்தேன் ஐயாவே.
- நானந்த மெய்தா நலம்பெறவே யெண்ணிமன்றில்
- ஆனந்த நாடகத்துக் கன்புவைத்தேன் ஐயாவே.
- வாடலறச் சாகா வரங்கொடுக்கு மென்றுமன்றில்
- ஆடலடிப் பொன்மலர்க்கே அன்புவைத்தேன் ஐயாவே.
- பொற்புறவே பொன்றாப் பொருளளிக்கு மென்றுமன்றில்
- அற்புதப்பொற் சேவடிக்கே அன்புவைத்தேன் ஐயாவே.
- ஈனமறுத் தென்றும் இறவாமை நல்குமென்றே
- ஞானமணி மன்றிடத்தே நண்புவைத்தேன் ஐயாவே.
- ஓர்துணைநின் பொன்னடியென் றுன்னுகின்றே னுன்னையன்றி
- ஆர்துணையும் வேண்டேனென் அன்புடைய ஐயாவே.
- பூசைசெய்து பெற்றவுன்றன் பொன்னடிமே லன்றியயல்
- ஆசையொன்று மில்லையெனக் கன்புடைய ஐயாவே.
- இச்சைநின்மே லன்றியெனக் கெள்ளளவும் வேறுமொன்றில்
- இச்சையிலை நின்னாணை யென்னருமை ஐயாவே.
- எப்படிநின் னுள்ள மிருக்கின்ற தென்னளவில்
- அப்படிநீ செய்கவெனக் கன்புடைய ஐயாவே.
- எவ்வண்ணம் நின்கருத்திங் கென்னளவி லெண்ணியதோ
- அவ்வண்ணஞ் செய்கவெனக் கன்புடைய ஐயாவே.
- தேசுறுநின் றண்ணருளாந் தெள்ளமுதங் கொள்ளவுள்ளே
- ஆசைபொங்கு கின்றதெனக் கன்புடைய ஐயாவே.
- மாசறுநின் பொன்னருளா மாமணிபெற் றாடவுள்ளே
- ஆசைபொங்கு கின்றதெனக் கன்புடைய ஐயாவே.
- நாசமிலா நின்னருளாம் ஞானமருந் துண்ணவுள்ளே
- ஆசைபொங்கு கின்றதெனக் கன்புடைய ஐயாவே.