- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- வரங்கொள் அடியர் மனமலரில் மகிழ்வுற் றமர்ந்த மாமணியே
- திரங்கொள் தணிகை மலைவாழும் செல்வப் பெருக்கே சிற்பரமே
- தரங்கொள் உலக மயல்அகலத் தாழ்ந்துள் உருக அழுதழுது
- கரங்கொள் சிரத்தோ டியான்உன்னைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- வல்லி ஒருபால் வானவர்தம் மகளாண் டொருபால் வரமயில்மேல்
- எல்லின் இலங்கு நெட்டிலைவேல் ஏந்தி வரும்என் இறையவனே
- சொல்லி அடங்காத் துயர்இயற்றும் துகள்சேர் சன்னப் பெருவேரைக்
- கல்லி எறிந்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- உருத்துள் இகலும் சூர்முதலை ஒழித்து வானத் தொண்பதியைத்
- திருத்தும் அரைசே தென்தணிகைத் தெய்வ மணியே சிவஞானம்
- அருத்தும் நினது திருவருள்கொண் டாடிப் பாடி அன்பதனால்
- கருத்துள் உருகி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- போதல் இருத்தல் எனநினையாப் புனிதர் சனனப் போரோடு
- சாதல் அகற்றும் திருத்தணிகைச் சைவக் கனியே தற்பரமே
- ஓதல் அறியா வஞ்சகர்பால் உழன்றே மாதர்க் குள்ளுருகும்
- காதல் அகற்றி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- வீட்டைப் பெறுவோர் உள்அகத்து விளங்கும் விளக்கே விண்ணோர்தம்
- நாட்டை நலஞ்செய் திருத்தணிகை நகத்தில் அமர்ந்த நாயகமே
- கேட்டைத் தருவஞ் சகஉலகில் கிடைத்த மாய வாழ்க்கைஎனும்
- காட்டைக் கடந்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- மட்டித் தளறு படக்கடலை மலைக்கும் கொடிய மாஉருவைச்
- சட்டித் தருளும் தணிகையில்எந் தாயே தமரே சற்குருவே
- எட்டிக் கனியாம் இவ்வுலகத் திடர்விட் டகல நின்பதத்தைக்
- கட்டித் தழுவிநின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- இலக்கம் அறியா இருவினையால் இம்மா னிடம்ஒன் றெடுத்தடியேன்
- விலக்கம் அடையா வஞ்சகர்பால் வீணாட் போக்கி மேவிமனத்
- தலக்கண் இயற்றும் பொய்வாழ்வில் அலைந்தேன் தணிகை அரசேஅக்
- கலக்கம் அகன்று நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- விரைவாய் கடப்பந் தார்அணிந்து விளங்கும் புயனே வேலோனே
- தரைவாய் தவத்தால் தணிகைஅமர் தருமக் கடலே தனிஅடியேன்
- திரைவாய் சனனக் கடற்படிந்தே தியங்கி அலைந்தேன் சிவஞானக்
- கரைவாய் ஏறி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- பள்ள உலகப் படுகுழியில் பரிந்தங் குழலா தானந்த
- வெள்ளத் தழுந்தும் அன்பர்விழி விருந்தே தணிகை வெற்பரசே
- உள்ளம் அகல அங்கும்இங்கும் ஓடி அலையும் வஞ்சநெஞ்சக்
- கள்ளம் அகற்றி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- அடலை அணிந்தோர் புறங்காட்டில் ஆடும் பெருமான் அளித்தருளும்
- விடலை எனமூ வரும்புகழும் வேலோய் தணிகை மேலோயே
- நடலை உலக நடைஅளற்றை நண்ணா தோங்கும் ஆனந்தக்
- கடலை அடுத்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.