- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- செய்வகைநன் கறியாதே திருவருளோ டூடிச்
- சிலபுகன்றேன் அறிவறியாச் சிறியரினுஞ் சிறியேன்
- பொய்வகையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- புண்ணியனே மதியணிந்த புரிசடையாய் விடையாய்
- மெய்வகையோர் விழித்திருப்ப விரும்பிஎனை அன்றே
- மிகவலிந்தாட் கொண்டருளி வினைதவிர்த்த விமலா
- ஐவகைய கடவுளரும் அந்தனரும் பரவ
- ஆனந்தத் திருநடஞ்செய் அம்பலத்தெம் அரசே.
- நிலைநாடி அறியாதே நின்னருளோ டூடி
- நீர்மையல புகன்றேன்நன் னெறிஒழுகாக் கடையேன்
- புலைநாயேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- பூதகணஞ் சூழநடம் புரிகின்ற புனிதா
- கலைநாடு மதியணிந்த கனபவளச் சடையாய்
- கருத்தறியாக் காலையிலே கருணைஅளித் தவனே
- தலைஞான முனிவர்கள்தந் தலைமீது விளங்கும்
- தாளுடையாய் ஆளுடைய சற்குருஎன் அரசே.
- கலைக்கடைநன் கறியாதே கனஅருளோ டூடிக்
- கரிகபுகன் றேன்கவலைக் கடற்புணைஎன் றுணரேன்
- புலைக்கடையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- போற்றிசிவ போற்றிசிவ போற்றிசிவ போற்றி
- தலைக்கடைவாய் அன்றிரவில் தாள்மலரொன் றமர்த்தித்
- தனிப்பொருள்என் க€யிலளித்த தயவுடைய பெருமான்
- கொலைக்கடையார்க் கெய்தரிய குணமலையே பொதுவில்
- கூத்தாடிக் கொண்டுலகைக் காத்தாளுங் குருவே.
- நின்புகழ்நன் கறியாதே நின்னருளோ டூடி
- நெறியலவே புகன்றேன்நன் னிலைவிரும்பி நில்லேன்
- புன்புலையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- பூரணசிற் சிவனேமெய்ப் பொருள்அருளும் புனிதா
- என்புடைஅந் நாளிரவில் எழுந்தருளி அளித்த
- என்குருவே என்னிருகண் இலங்கியநன் மணியே
- அன்புடையார் இன்படையும் அழகியஅம் பலத்தே
- ஆத்தாளும் அப்பனுமாய்க் கூத்தாடும் பதியே.
- துலைக்கொடிநன் கறியோதே துணைஅருளோ டூடித்
- துரிசுபுகன் றேன்கருணைப் பரிசுபுகன் றறியேன்
- புலைக்கொடியேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- பொங்குதிரைக் கங்கைமதி தங்கியசெஞ் சடையாய்
- மலைக்கொடிஎன் அம்மைஅருள் மாதுசிவ காம
- வல்லிமறை வல்லிதுதி சொல்லிநின்று காணக்
- கலைக்கொடிநன் குணர்முனிவர் கண்டுபுகழ்ந் தேத்தக்
- கனகசபை தனில்நடிக்குங் காரணசற் குருவே.
- பழுத்தலைநன் குணராதே பதியருளோ டூடிப்
- பழுதுபுகன் றேன்கருணைப் பாங்கறியாப் படிறேன்
- புழுத்தலையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- புண்ணியர்தம் உள்ளகத்தே நண்ணியமெய்ப் பொருளே
- கழுத்தலைநஞ் சணிந்தருளுங் கருணைநெடுங் கடலே
- கால்மலர்என் தலைமீது தான்மலர அளித்தாய்
- விழுத்தலைவர் போற்றமணி மன்றில்நடம் புரியும்
- மெய்ம்மைஅறி வின்புருவாய் விளங்கியசற் குருவே.
- கையடைநன் கறியாதே கனஅருளோ டூடிக்
- காசுபுகன் றேன்கருணைத் தேசறியாக் கடையேன்
- பொய்யடியேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- புத்தமுதே சுத்தசுக பூரணசிற் சிவமே
- ஐயடிகள் காடவர்கோன் அகமகிழ்ந்து போற்றும்
- அம்பலத்தே அருள்நடஞ்செய் செம்பவள மலையே
- மெய்யடியர் உள்ளகத்தில் விளங்குகின்ற விளக்கே
- வேதமுடி மீதிருந்த மேதகுசற் குருவே.
- திறப்படநன் குணராதே திருவருளோ டூடித்
- தீமைபுகன் றேன்கருணைத் திறஞ்சிறிதுந் தெளியேன்
- புறப்படிறேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- பூதமுதல் நாதவரைப் புணருவித்த புனிதா
- உறப்படுமெய் உணர்வுடையார் உள்ளகத்தே விளங்கும்
- உண்மையறி வானந்த உருவுடைய குருவே
- சிறப்படைமா தவர்போற்றச் செம்பொன்மணிப் பொதுவில்
- திருத்தொழில்ஐந் தியற்றுவிக்குந் திருநடநா யகனே.
- தேர்ந்துணர்ந்து தெளியாதே திருவருளோ டூடிச்
- சிலபுகன்றேன் திருக்கருணைத் திறஞ்சிறிதுந் தெரியேன்
- போந்தகனேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- போதாந்த மிசைவிளங்கு நாதாந்த விளக்கே
- ஊர்ந்தபணக் கங்கணமே முதற்பணிகள் ஒளிர
- உயர்பொதுவில் நடிக்கின்ற செயலுடைய பெருமான்
- சார்ந்தவரை எவ்வகையுந் தாங்கிஅளிக் கின்ற
- தயவுடைய பெருந்தலைமைத் தனிமுதல்எந் தாயே.
- ஒல்லும்வகை அறியாதே உன்னருளோ டூடி
- ஊறுபுகன் றேன்துயரம் ஆறும்வகை உணரேன்
- புல்லியனேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- பூதியணிந் தொளிர்கின்ற பொன்மேனிப் பெருமான்
- சொல்லியலும் பொருளியலும் கடந்தபர நாதத்
- துரியவெளிப் பொருளான பெரியநிலைப் பதியே
- மெல்லியல்நற் சிவகாம வல்லிகண்டு மகிழ
- விரியுமறை ஏத்தநடம் புரியும்அருள் இறையே.