- கொச்சகக் கலிப்பா
- திருச்சிற்றம்பலம்
- மதியணிசெஞ் சடைக்கனியை மன்றுள்நடம் புரிமருந்தைத்
- துதியணிசெஞ் சுவைப்பொருளில் சொன்மாலை தொடுத்தருளி
- விதியணிமா மறைநெறியும் மெய்ந்நிலைஆ கமநெறியும்
- வதியணிந்து விளங்கவைத்த வன்தொண்டப் பெருந்தகையே.
- நீற்றிலிட்ட நிலையாப்புன் னெறியுடையார் தமைக்கூடிச்
- சேற்றிலிட்ட கம்பமெனத் தியங்குற்றேன் தனைஆளாய்
- ஏற்றலிட்ட திருவடியை எண்ணிஅரும் பொன்னையெலாம்
- ஆற்றில்இட்டுக் குளத்தெடுத்த அருட்டலைமைப் பெருந்தகையே.
- இலைக்குளநீ ரழைத்தனில் இடங்கர்உற அழைத்ததன்வாய்த்
- தலைக்குதலை மதலைஉயிர் தழைப்பஅழைத் தருளியநின்
- கலைக்கும்வட கலையின்முதற் கலைக்கும்உறு கணக்குயர்பொன்
- மலைக்கும்அணு நிலைக்கும்உறா வன்தொண்டப் பெருந்தகையே.
- வேதமுதற் கலைகளெலாம் விரைந்துவிரைந் தனந்தமுறை
- ஓதஅவைக் கணுத்துணையும் உணர்வரிதாம் எம்பெருமான்
- பாதமலர் நினதுதிருப் பணிமுடிமேற் படப்புரிந்த
- மாதவம்யா துரைத்தருளாய் வன்தொண்டப் பெருந்தகையே.
- ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
- தோழனுமாய் என்றுமுன்நீ சொன்னபெருஞ் சொற்பொருளை
- ஆழ்நினைத் திடில்அடியேன் அருங்கரணம் கரைந்துகரைந்
- தூழியல்இன் புறுவதுகாண் உயர்கருணைப் பெருந்தனையே.
- வான்காண இந்திரனும் மாலையனும் மாதவரும்
- தான்காண இறைஅருளால் தனித்தவள யானையின்மேல்
- கோன்காண எழுந்தருளிக் குலவியநின் கோலமதை
- நான்காணப் பெற்றிலனே நாவலூர்ப் பெருந்தகையே.
- தேன்படிக்கும் அமுதாம்உன் திருப்பாட்டைத்193 தினந்தோறும்
- நான்படிக்கும் போதென்னை நானறியேன் நாஒன்றோ
- ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்குயிரும்
- தான்படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தனையே.
- இன்பாட்டுத் தொழிற்பொதுவில் இயற்றுகின்ற எம்பெருமான்
- உன்பாட்டுக் குவப்புறல்போல் ஊர்பாட்டுக் குவந்திலர்என்
- றென்பாட்டுக் கிசைப்பினும்என் இடும்பாட்டுக் கரணமெலாம்
- அன்பாட்டுக் கிசைவதுகாண் அருட்பாட்டுப் பெருந்தகையே.
- பரம்பரமாம் துரியமெனும் பதத்திருந்த பரம்பொருளை
- உரம்பெறத்தோ ழமைகொண்ட உன்பெருமை தனைமதித்து
- வரம்பெறநற் றெய்வமெலாம் வந்திக்கும் என்றால்என்
- தரம்பெறஎன் புகல்வேன்நான் தனித்தலைமைப் பெருந்தகையே.
- பேரூரும் பரவைமனப் பிணக்கறஎம் பெருமானை
- ஊரூரும் பலபுகல ஓரிரவில் தூதன்என்த
- தேரூரும் திருவாரூர்த் தெருவுதொறும் நடப்பித்தாய்
- ஆரூர நின்பெருமை அயன்மாலும் அளப்பரிதே.
- 192. ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடையதோனுமாய் யான்செய்யும் துரிசுகளுக் குடனாகிமாழைஒண்கண் பரவையைத்தந் தாண்டானை மதிகில்லாஏழையேன் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே.- 7751 (7-51-10) சுந்தரர், திருவாரூர்பப்திகம்.
- 193. திருஞானசம்பந்தர் தேவாரத்தைத் திருக்கடைக்காப்பு என்பதும், திருநாவுக்கரசர் தேவாரத்தைத் தேவாரம் என்பதும், சுந்தரமூர்த்திகள் தேவாரத்தைத் திருப்பாட்டு என்பதும் ஒருவகை வழக்கு.