- திருச்சிற்றம்பலம்
- குறள்வெண்பா
- எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
- எல்லாம்வல் லான்தனையே ஏத்து197.
- நேரிசை வெண்பா
- இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற்
- றென்றுவரு மோஅறியேன் எங்கோவே - துன்றுமல
- வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து
- சும்மா இருக்கும் சுகம்.
- எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச்
- சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்
- தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
- திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே
- உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க
- உலகமெலாம் விளங்கஅருள் உதவுபெருந் தாயாம்
- மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க
- வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
- அன்பெனும் குடில்புகும் அரசே
- அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
- அன்பெனும் கரத்தமர் அமுதே
- அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
- அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
- அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே
- அன்புரு வாம்பர சிவமே.
- 197. தாளைஏத்து - முதற்பதிப்பு, பொ. சு. பதிப்பு.