- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- தாவு மான்எனக் குதித்துக்கொண் டோடித்
- தைய லார்முலைத் தடம்படுங் கடையேன்
- கூவு காக்கைக்குச் சோற்றில்ஓர் பொருக்கும்
- கொடுக்க நேர்ந்திடாக் கொடியரில் கொடியேன்
- ஓவு றாதுழல் ஈஎனப் பலகால்
- ஓடி ஓடியே தேடுறும் தொழிலேன்
- சாவு றாவகைக் கென்செயக் கடவேன்
- தந்தை யேஎனைத் தாங்கிக்கொண் டருளே.
- போக மாதியை விழைந்தனன் வீணில்
- பொழுது போக்கிடும் இழுதையேன் அழியாத்
- தேக மாதியைப் பெறமுயன் றறியேன்
- சிரங்கு நெஞ்சகக் குரங்கொடும் உழல்வேன்
- காக மாதிகள் அருந்தஓர் பொருக்கும்
- காட்ட நேர்ந்திடாக் கடையரில் கடையேன்
- ஆக மாதிசொல் அறிவறி வேனோ
- அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.
- விழியைத் தூர்க்கின்ற வஞ்சரை விழைந்தேன்
- விருந்தி லேஉண வருந்திஓர் வயிற்றுக்
- குழியைத் தூர்க்கின்ற கொடியரில் கொடியேன்
- கோப வெய்யனேன் பாபமே பயின்றேன்
- வழியைத் தூர்ப்பவர்க் குளவுரைத் திடுவேன்
- மாய மேபுரி பேயரில் பெரியேன்
- பழியைத் தூர்ப்பதற் கென்செயக் கடவேன்
- பரம னேஎனைப் பரிந்துகொண் டருளே.
- மதத்தி லேஅபி மானங்கொண் டுழல்வேன்
- வாட்ட மேசெயும் கூட்டத்தில் பயில்வேன்
- இதத்தி லேஒரு வார்த்தையும் புகலேன்
- ஈயும் மொய்த்திடற் கிசைவுறா துண்பேன்
- குதத்தி லேஇழி மலத்தினுங் கடையேன்
- கோடை வெய்யலின் கொடுமையிற் கொடியேன்
- சிதத்தி லேஉறற் கென்செயக் கடவேன்
- தெய்வ மேஎனைச் சேர்த்துக்கொண் டருளே.
- கொடிய வெம்புலிக் குணத்தினேன் உதவாக்
- கூவம் நேர்ந்துளேன் பாவமே பயின்றேன்
- கடிய நெஞ்சினேன் குங்குமம் சுமந்த
- கழுதை யேன்அவப் பொழுதையே கழிப்பேன்
- விடியு முன்னரே எழுந்திடா துறங்கும்
- வேட னேன்முழு மூடரில் பெரியேன்
- அடிய னாவதற் கென்செயக் கடவேன்
- அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.
- தூங்கு கின்றதே சுகம்என அறிந்தேன்
- சோற தேபெறும் பேறதென் றுணர்ந்தேன்
- ஏங்கு கின்றதே தொழிலெனப் பிடித்தேன்
- இரக்கின் றோர்களே என்னினும் அவர்பால்
- வாங்கு கின்றதே பொருள்என வலித்தேன்
- வஞ்ச நெஞ்சினால் பஞ்செனப் பறந்தேன்
- ஓங்கு கின்றதற் கென்செயக் கடவேன்
- உடைய வாஎனை உவந்துகொண்ட ருளே.
- வருத்த நேர்பெரும் பாரமே சுமந்து
- வாடும் ஓர்பொதி மாடென உழன்றேன்
- பருத்த ஊனொடு மலம்உணத் திரியும்
- பன்றி போன்றுளேன் நன்றியொன் றறியேன்
- கருத்தி லாதயல் குரைத்தலுப் படைந்த
- கடைய நாயினிற் கடையனேன் அருட்குப்
- பொருத்தன் ஆவதற் கென்செயக் கடவேன்
- புண்ணி யாஎனைப் புரிந்துகொண் டருளே.
- துருக்க லோகொடுங் கருங்கலோ வயிரச்
- சூழ்க லோஎனக் காழ்கொளும் மனத்தேன்
- தருக்கல் ஆணவக் கருக்கலோ டுழல்வேன்
- சந்தை நாயெனப் பந்தமுற் றலைவேன்
- திருக்கெ லாம்பெறு வெருக்கெனப்199 புகுவேன்
- தீய னேன்பெரும் பேயனேன் உளந்தான்
- உருக்கல் ஆகுதற் கென்செயக் கடவேன்
- உடைய வாஎனை உவந்துகொண் டருளே.
- கான மேஉழல் விலங்கினிற் கடையேன்
- காம மாதிகள் களைகணிற் பிடித்தேன்
- மான மேலிடச் சாதியே மதமே
- வாழ்க்கை யேஎன வாரிக்கொண் டலைந்தேன்
- ஈன மேபொருள் எனக்களித் திருந்தேன்
- இரக்கம் என்பதோர் எட்டுணை அறியேன்
- ஞான மேவுதற் கென்செயக் கடவேன்
- நாய காஎனை நயந்துகொண் டருளே.
- இருளை யேஒளி எனமதித் திருந்தேன்
- இச்சை யேபெரு விச்சைஎன் றலந்தேன்
- மருளை யேதரு மனக்குரங் கோடும்
- வனமெ லாஞ்சுழன் றினம்எனத் திரிந்தேன்
- பொருளை நாடுநற் புந்திசெய் தறியேன்
- பொதுவி லேநடம் புரிகின்றோய் உன்றன்
- அருளை மேவுதற் கென்செயக் கடவேன்
- அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.
- 199. வெருக்கு - பூனை. ககரமெய் விரிக்கும் வழி விரித்தல். முதற்பதிப்பு.