- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம்ஒன் றறியேன்
- மதிஅறியேன் விதிஅறியேன் வாழ்க்கைநிலை அறியேன்
- திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
- செய்தறியேன் மனமடங்கும் திறத்தினில்ஓர் இடத்தே
- இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
- எந்தைபிரான் மணிமன்றம் எய்தஅறி வேனோ
- இருந்ததிசை சொலஅறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- அகங்காரக் கொடுங்கிழங்கை அகழ்ந்தெறிய அறியேன்
- அறிவறிந்த அந்தணர்பால் செறியும்நெறி அறியேன்
- நகங்கானம் உறுதவர்போல் நலம்புரிந்தும் அறியேன்
- நச்சுமரக் கனிபோல இச்சைகனிந் துழல்வேன்
- மகங்காணும் புலவரெலாம் வந்துதொழ நடிக்கும்
- மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
- இகங்காணத் திரிகின்றேன் எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- கற்குமுறை கற்றறியேன் கற்பனகற் றறிந்த
- கருத்தர்திருக் கூட்டத்தில் களித்திருக்க அறியேன்
- நிற்குநிலை நின்றறியேன் நின்றாரின் நடித்தேன்
- நெடுங்காமப் பெருங்கடலை நீந்தும்வகை அறியேன்
- சிற்குணமா மணிமன்றில் திருநடனம் புரியும்
- திருவடிஎன் சென்னிமிசைச் சேர்க்கஅறி வேனோ
- இற்குணஞ்செய் துழல்கின்றேன் எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- தேகமுறு பூதநிலைத் திறம்சிறிதும் அறியேன்
- சித்தாந்த நிலைஅறியேன் சித்தநிலைஅறியேன்
- யோகமுறு நிலைசிறிதும் உணர்ந்தறியேன் சிறியேன்
- உலகநடை யிடைக்கிடந்தே உழைப்பாரில் கடையேன்
- ஆகமுறு திருநீற்றின் ஒளிவிளங்க அசைந்தே
- அம்பலத்தில் ஆடுகின்ற அடியைஅறி வேனோ
- ஏகஅனு பவம்அறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- வேதாந்த நிலைநாடி விரைந்துமுயன் றறியேன்
- மெய்வகையும் கைவகையும் செய்வகையும் அறியேன்
- நாதாந்தத் திருவீதி நடந்திடுதற் கறியேன்
- நான்ஆர்என் றறியேன்எங் கோன்ஆர்என் றறியேன்
- போதாந்தத் திருநாடு புகஅறியேன் ஞான
- பூரணா காயம்எனும் பொதுவைஅறி வேனோ
- ஏதாந்தீ யேன்சரிதம் எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- கலைமுடிவு கண்டறியேன் கரணமெலாம் அடக்கும்
- கதிஅறியேன் கதிஅறிந்த கருத்தர்களை அறியேன்
- கொலைபுலைகள் விடுத்தறியேன் கோபமறுத் தறியேன்
- கொடுங்காமக் கடல்கடக்கும் குறிப்பறியேன் குணமாம்
- மலைமிசைநின் றிடஅறியேன் ஞானநடம் புரியும்
- மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
- இலைஎனும்பொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- சாதிமதம் சமயம்எனும் சங்கடம்விட் டறியேன்
- சாத்திரச்சே றாடுகின்ற சஞ்சலம்விட் டறியேன்
- ஆதிஅந்த நிலையறியேன் அலைஅறியாக் கடல்போல்
- ஆனந்தப் பெரும்போகத் தமர்ந்திடவும் அறியேன்
- நீதிநெறி நடந்தறியேன் சோதிமணிப் பொதுவில்
- நிருத்தமிடும் ஒருத்தர்திருக் கருத்தைஅறி வேனோ
- ஏதிலர்சார் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- சாகாத தலைஅறியேன் வேகாத காலின்
- தரம்அறியேன் போகாத தண்ரை அறியேன்
- ஆகாய நிலைஅறியேன் மாகாய நிலையும்
- அறியேன்மெய்ந் நெறிதனைஓர் அணுஅளவும் அறியேன்
- மாகாத லுடையபெருந் திருவாளர் வழுத்தும்
- மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
- ஏகாய200 உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- தத்துவம்என் வசமாகத் தான்செலுத்த அறியேன்
- சாகாத கல்விகற்கும் தரஞ்சிறிதும் அறியேன்
- அத்தநிலை சத்தநிலை அறியேன்மெய் அறிவை
- அறியேன்மெய் அறிந்தடங்கும் அறிஞரையும் அறியேன்
- சுத்தசிவ சன்மார்க்கத் திருப்பொதுவி னிடத்தே
- தூயநடம் புரிகின்ற ஞாயமறி வேனோ
- எத்துணையும் குணமறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- வரைஅபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன்
- மரணபயம் தவிர்த்திடுஞ்சன் மார்க்கமதை அறியேன்
- திரையறுதண் கடலறியேன் அக்கடலைக் கடைந்தே
- தெள்ளமுதம் உணவறியேன் சினமடக்க அறியேன்
- உரைஉணர்வு கடந்ததிரு மணிமன்றந் தனிலே
- ஒருமைநடம் புரிகின்றார் பெருமைஅறி வேனோ
- இரையுறுபொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- 200. ஏகம் - முத்தி, ஈறுதொக்கு நின்றது, முதற்பதிப்பு.